XXX ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ் | தினகரன் வாரமஞ்சரி

XXX ரிட்டர்ன் ஆப் சாண்டர் கேஜ்

வானில் இருந்து செயற்கைகோள் ஒன்று எரிந்து பூமியில் விழுகிறது. இந்த செயற்கைகோள் எப்படி கீழே விழுந்தது என்பது குறித்த ஆய்வில் முக்கியமான தலைவர்கள் எல்லாம் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ஒரு கருவி மூலமாக அந்த செயற்கைகோள் செயலிழக்கச் செய்யப்பட்டு பூமியில் வீழ்த்தப்பட்டதாக தெரிய வருகிறது.
எரிந்து பூமியில் விழுந்த செயற்கைக்கோளுடன் இருந்த அந்த கருவியை வைத்து, அந்த கருவியை யார் செய்திருப்பார்கள்? யார் இந்த நாச வேலையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று உயர்மட்ட விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்தநேரத்தில், இவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அந்த கருவியை திருடி சென்றுவிடுகிறார்.
இந்நிலையில், அந்த கருவியை கண்டுபிடிப்பதற்காக வின் டீசல் தலைமையில் XXX குழுவை களமிறக்க அமெரிக்கா ராணுவம் முடிவு செய்கிறது. XXX குழுவில் இருந்து விலகி இருக்கும் வின் டீசல், நாட்டின் பாதுகாப்பு குறித்த பிரச்சினைக்காக இந்த குழுவில் இணைகிறார். வின் டீசலுடன் மேலும் 3 பேர் XXX குழுவில் இணைகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சக்திகள் உண்டு.
இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து கருவியை திருடிச் சென்றவர்களை தேடி புறப்படுகின்றனர். கருவியை திருடியவர்கள் ஒரு தீவில் இருப்பதை அறிந்து அங்குபோய் சேருகிறார்கள். அங்கு சென்றபிறகுதான் ஏற்கெனவே, XXX குழுவில் இருந்தவர்களான டோனி ஜா, தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர்தான் இந்த கருவியை திருடியதாக தெரிகிறது.
அவர்கள் எதற்காக இந்த கருவியை திருடினார்கள்? அவர்கள்தான் செயற்கைகோளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார்களா? அல்லது வேறு யாருக்கும் இதற்கு தொடர்பு இருந்ததா? என்பதே கண்டுபிடித்து, அதை அழிப்பதே மீதிக்கதை.
XXX படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகளும், விறு விறுப்பான காட்சிகளும் நினைவுக்கு வரும். அதேபோல், இந்த படத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
XXX படவரிசையில் முதல் பாகத்தில் நடித்தபிறகு, தற்போது மூன்றாம் பாகத்தில் நடித்திருக்கிறார் வின் டீசல். இரண்டாம் பாகத்தில் இவர் இல்லையென்ற குறையை மூன்றாம் பாகத்தில் அவர் பூர்த்தி செய்திருக்கிறார். அவருடைய உடல் வாகு, அதற்கேற்ற ஆக்ஷன் காட்சிகளெல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
தீபிகா படுகோனேவுக்கு ஹாலிவுட்டுக்கு புதிது என்றாலும், ஆக்ஷன் காட்சிகளெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஹாலிவுட் நடிகைகளுக்கு போட்டி போடும் அளவுக்கு இவரது ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது.
இந்திய நடிகர், நடிகைகளுக்கு ஹாலிவுட்டில் இடம் கிடைத்தாலும், அவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படுவது கிடையாது. ஆனால், இந்த படத்தில் தீபிகா படுகோனேவுக்கு முதல் படமாக இருந்தாலும் நல்லதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவர்ச்சியிலும் ரொம்பவுமே தாராளம் காட்டியிருக்கிறார்.
முதல் இரண்டு பாகத்திலும் வந்த சாமுவேல் எல்.ஜாக்சன் இந்த பாகத்திலும் வந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். டோனி ஜா, டோனி யென் ஆகியோரும் சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது ஆக்ரோஷ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
படத்தின் கதை சாதாரணமாக இருந்தாலும், காட்சியமைப்புகளில் விறுவிறுப்பு, ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதால் படம் பார்க்கிறவர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாமல் செல்கிறது. அதை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் கருஷோ.
குறிப்பாக, எதிரியிடம் பேசிக் கொண்டிருக்கும் வின் டீசல், தனது விரலை உயர்த்தி ஒன்று இரண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவரது விரல்களுக்கு இடையில் குண்டு பாய்ந்து எதிரி வீழ்வது எல்லாம் ரசிகர்களை ஒருநொடியில் அதிர்ச்சியாக்கியிருக்கிறது.
படத்தில் நிறைய காட்சிகள் நிஜவாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தாலும், அதை பார்க்கும்போது நமக்கே வியக்க வைக்கும் வண்ணம் தத்ரூபமாக காட்சிப்படுத்தியருப்பது சிறப்பு. 

Comments