புதுமுக டைரக்டர் மீது நடிகை சிருஷ்டி டாங்கே | தினகரன் வாரமஞ்சரி

புதுமுக டைரக்டர் மீது நடிகை சிருஷ்டி டாங்கே

சாந்தனு-சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்துள்ள படம் ‘முப்பரிமாணம்’. இந்த படத்தை டைரக்டர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அதிரூபன் இயக்கியுள்ளார். பொள்ளாச்சி வி.விசு, பொள்ளாச்சி கோல்டு வி.குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடந்தது. விழாவில் நடிகை சிருஷ்டி டாங்கே பங்கேற்று பேசும்போது டைரக்டர் மீது பரபரப்பு புகார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“முப்பரிமாணம் படத்தின் கதையை டைரக்டர் அதிரூபன் சொன்னபோது பிடித்து இருந்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன். ஆனால் படப்பிடிப்பில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. டைரக்டர் தினமும் கூடுதல் நேரம் கஷ்டப்படுத்தி நடிக்க வைத்தார்.

படப்பிடிப்பில் யாருடனும் பேசக்கூடாது, செல்போன் வைத்துக்கொள்ள கூடாது என்று தடை விதித்தார். குடும்பத்தினரிடம் கூட பேச முடியவில்லை.

நான் மட்டுமின்றி படத்தின் கதாநாயகன் சாந்தனு உள்பட மற்ற நடிகர், நடிகைகளும் டைரக்டரின் கெடுபிடியால் சிரமப்பட்டனர். சரியாக யாரும் குளிக்கவில்லை. சட்டை கிழிந்து அழுக்கு துணியோடு தாடி மீசை வளர்ந்து பரிதாபமாக திரிந்தார்கள்.

ஒரு கட்டத்தில் டைரக்டர் கொடுத்த கஷ்டங்கள் எல்லை மீற, நான் அழுது விட்டேன். என் தந்தையிடம் இந்த படத்தில் தொடர்ந்து என்னால் நடிக்க முடியாது என்றேன். அவரும் படக்குழுவினரிடம் சொல்லி விட்டு வந்து விடு என்றார்.

நான் டைரக்டர் அதிரூபனிடம் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாது படத்தில் இருந்து விலகிவிடுகிறேன் என்றேன். அவர் என்னை சமரசப்படுத்தி படத்தில் உங்கள் கதாபாத்திரம் பேசும்படி இருக்கும் என்று சொல்லி நான் நடித்திருந்த காட்சிகளை என்னிடம் காட்டினார். நிஜமாகவே வித்தியாசமாக இருந்தது.

என் சினிமா வாழ்க்கையில் இது திருப்புமுனை படமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால், தொடர்ந்து நடித்து முடித்தேன்.” 

Comments