மேதின வேடிக்கைப் பேச்சு! | தினகரன் வாரமஞ்சரி

மேதின வேடிக்கைப் பேச்சு!

பாட்டாளிகள் தினத்தை நாளை கொண்டாடுவதற்கு உலகமே தயாராகிக் கொண்டிருக்கின்றது. தொழிலாளர்களுக்குரிய இத்தினத்தைக் கொண்டாடுவதில் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைத்து அமைப்புகளும் முன்வருவதே வழமையாகும். அதேபோன்று இலங்கையிலும் மேதினக் கொண்டாட்டங்கள் நாளை நாடெங்கும் பரவலாக இடம்பெறப் போகின்றன.

மேதினம் என்பது உழைக்கும் வர்க்கத்தினருக்கு உரியதாகும். தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்குவது, அவர்களுக்கான தொழில் பாதுகாப்பு போன்றவையெல்லாம் மேதினத்தன்று பிரதான வலியுறுத்தல்களாக அமைய வேண்டியது அவசியம். ஆனாலும் இலங்கையின் கடந்த கால வரலாற்றை எடுத்து நோக்குவோமானால், அரசியல் கட்சிகள் நடத்துகின்ற மேதின நிகழ்வுகளில் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான கோஷம் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதை எம்மால் காண முடியாது.

இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே உலக பாட்டாளிகள் தினத்தை தங்களது அரசியல் நிகழ்ச்சித் திட்டத்துக்கான சந்தர்ப்பமாகவே பயன்படுத்தி வருகின்றன. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தமது ஆட்பலத்தையும் செல்வாக்கையும் வெளியுலகுக்குப் பகிரங்கப்படுத்துவதற்கான களமாகவே மேதின ஊர்வலத்தையும் கூட்டத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றன. அவ்வாறு மக்கள் மத்தியில் செல்வாக்குக் குன்றிய அரசியல் கட்சிகள் கூட, தமது மேதின ஊர்வலத்தில் ஆதரவாளர் எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பிப்பதற்காக குறுக்குவழிகளைக் கையாளுகின்றன.

எங்கிருந்தோவெல்லாம் கிராமப்புற பாமர மக்களை பஸ்களில் ஏற்றி வந்து நகரத்தில் குவித்து, தமது கட்சிக்கு பெரும் மக்கள் ஆதரவு உள்ளதாக சித்தரிக்க முற்படுகின்றன. அவ்வாறு பெருமளவு மக்களை மேதினக் கூட்டத்துக்காக அழைத்து வருவதற்கென உணவுப் பொதிகளும், மதுபானப் போத்தல்களும் வழங்கப்படுகின்ற கேவலம் மிகுந்த காட்சிகளும் மேதினத்திலன்று சாதாரணமாகவே அறங்கேறுவதுண்டு.

அரசியல்வாதிகள் பலர் இச்செயலுக்காக ஒருபோதுமே வெட்கப்படுவதில்லை. வெளியுலகுக்கு தவறான காட்சியைக் காண்பிக்கிறோமென்று அவர்கள் சங்கோஜப்படுவதும் இல்லை. மக்களைப் பற்றியும், நேர்மையைப் பற்றியும் சிறிதேனும் கவனம் கொள்ளாத அரசியல்வாதிகள் பலரை நாம் நாளைய மேதினத்தில் தாராளமாகவே பார்க்க முடியும். இது இலங்கையின் விசித்திரமானதொரு அரசியல் கலாசாரமாகிப் போயுள்ளது.

இக்கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று சில அரசியல் தலைவர்கள் நேர்மையாகச் சிந்திக்கின்ற போதிலும், அவர்களால் அது முடிவதில்லை. அரசியல் அநீதியில் ஊறிப் போனார் நிறைந்துள்ள நாடொன்றில் வரலாற்று நியதியொன்றை மாற்றுவதென்பது இலகுவான காரியமன்று.

முன்னைய ஆட்சியில் மேதினக் கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த வேதனைகளையும் வேடிக்கைகளையும் இப்போது நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது. அன்றைய அரசு தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பட்டாளி மக்களை பலவந்தமாகப் பயன்படுத்திக் கொண்டதை எவருமே இலகுவில் மறந்து விட முடியாது.

தமது அரசாங்கத்துக்கு மக்கள் செல்வாக்கு பெருமளவில் இருப்பதாகவும், அரசின் கொள்கைகளை மக்கள் ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதாகவும் வெளியுலகுக்கு மாயத்தோற்றத்தைக் காண்பிப்பதே முன்னைய அரசின் நோக்கமாக இருந்தது.

இதற்காக அரசாங்கத்தின் மேதின வைபவம் என்பதன் பேரில் அரசாங்கத் திணைக்களங்கள் பலவற்றைச் சேர்ந்த தொழிலாளர்கள் அந்நாட்களில் மேதினப் பேரணிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் பலவந்தமாகவே இறக்கப்பட்டனர். நண்பகல் வேளையில் சுட்டெரிக்கும் வெயிலில் அரசாங்கதுறை தொழிலாளர்களை வீதியில் பலவந்தமாக இறக்கி பேரணிகளை நடத்தியது முன்னைய அரசாங்கம் பெண்கள், நோயாளர்கள், வயது முதிர்ந்தோர் என்ற பேதமின்றி பலரும் இவ்விதம் நோகடிக்கப்பட்டனர். அரசாங்க ஊடகங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களாலும் இந்தப் பலவந்தத்தில் இருந்து தப்பிக் கொள்ள முடியாமல் போய் விட்டது. அரசாங்கத்தின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசதுறை ஊழியர்கள் கொளுத்தும் வெயிலில் துன்புறுத்தப்பட்ட பரிதாபம் அன்றைய ஆட்சியில் சாதாரணமாகவே நடந்தது.

நாட்டின் அதிகாரம் இப்போது வேறு கைகளுக்கு மாறியிருக்கின்றது. முன்னைய அதிகார தரப்பினர் பலமிழந்திருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் தங்களது போலிக் கலாசாரங்களை இன்னுமே மாற்றிக் கொண்டதில்லை. முன்னைய பாணியையே இப்போதும் கடைப்பிடிக்க முற்படுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இயங்குகின்ற ‘கூட்டு எதிர்க்கட்சி’ என்று தங்களைக் கூறிக் கொள்வோர் தங்களது மேதினத்தை நாளை கொழும்பு காலிமுகத் திடலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கடந்த இரு வருடங்களிலும் நடைபெற்ற மேதின வைபவங்களின் போது சவால் விடுத்ததைப் போலவே இம்முறையும் மஹிந்த ராஜபக்ச மேதின அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கின்றார்.

இன்றைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான போராட்டத்தின் ஆரம்பமாக தங்களது மேதின வைபவம் அமைந்திருக்குமென்ற பொருளில் மஹிந்தவிடமிருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் மஹிந்த அணியினர் தங்களது மேதின பிரதான வைபவத்தை கிருலப்பனையில் நடத்தியிருந்தனர். அடுத்த வருடத்தில் தங்களது மேதின நிகழ்வை நுகேகொடையில் நடத்தினர். இவ்விரு மேதின விழாக்களும் பெரும் ஆரவாரங்களுடனேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சுருங்கக் கூறுவதானால் அரசாங்க தரப்பை சற்று அச்சமூட்டும் வகையிலேயே மஹிந்த அணியினர் இரு தடவைகளிலும் தங்களது மேதின பிரதான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும் அவர்களது மேதின அச்சுறுத்தல்களால் உண்டான விளைவு எதுவுமேயில்லை. வெறும் வார்த்தை ஜாலங்களாகவே அவர்களது மேதின சவால்கள் அமைந்திருந்தன. கிருலப்பனையில் குறுகிய மைதானமொன்றுக்குள் ஆதரவாளர்களை ஒன்று கூட்டி மக்கள் கூட்டம் நிறைந்திருப்பதாக ஊடகங்கள் மூலம் வெளியுலகுக்குக் காண்பிக்கும் நோக்கமே அங்கு வெளிப்பட்டது. அவர்கள் நுகேகொடையில் நடத்திய மேதினக் கூட்டமும் வெறும் ஆக்ரோஷப் பேச்சுகளுடனேயே முடிவடைந்து போனது.

நாளை நடைபெறப் போவது ஆட்சி மாற்றத்தின் பின்னரான மூன்றாவது மேதின வைபவம் ஆகும். காலிமுகத்திடலில் மக்களை ஒன்று திரட்டி தங்களது பலத்தைக் காண்பிக்கப்போவதாக மஹிந்த அணியினர் சவால் விடுக்கின்றனர். இன்றைய ஆட்சியை வீழ்த்தும் போராட்டத்துக்கான திடசங்கற்பத்தை மேற்கொள்ளப் போவதாகக் கூறுகின்றனர்.

கடந்த இரு வருட மேதின விழாக்களிலும் அவர்கள் கூறிய ஆக்ரோஷப் பேச்சுகள் தான் இப்போது நினைவுக்கு வருகின்றன. அவை வெறும் வேடிக்கைப் பேச்சுகளாகவே அமைந்திருக்கின்றன. 

Comments