இந்தியாவில் அனிதாவின் மரணம் கௌரி லங்கேஸ் படுகொலை; | தினகரன் வாரமஞ்சரி

இந்தியாவில் அனிதாவின் மரணம் கௌரி லங்கேஸ் படுகொலை;

மருத்துவக் கல்விக்காய் மரணித்த தமிழ்நாட்டு ஏழை மாணவி அனித்தாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் சமூக அநீதிகளுக்கு எதிராய் குரல்கொடுத்த இந்திய ஊடகவியலாளர் கௌரி லங்கேஸ் படுகொலையை கண்டித்தும்யாழ்ப்பாணத்தில் நேற்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து யாழ். மாவட்டம் முழுவதும் நேற்று (16) விநியோகித்தது. அதில் மருத்துவக் கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுக்காக இந்தியா முழுவதும் பொதுத் தரப்படுத்தல் பரீட்சையை (NEET) இந்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. திறமை இருந்தும் ஆயிரக் கணக்கில் செலவு செய்து இப் பரீட்சைக்காகப் பிரத்தியேக வகுப்புக்களில் படிக்க முடியாத ஏழை மாணவர்கள் சித்தியடைய முடியாதுள்ளது. தமிழ்நாடு அரியலூர் மாணவி அனிதா 12 ஆம் வகுப்பு (Plus 2) தேர்வில் 1200 க்கு 1176 புள்ளிகள் பெற்றும் இந் நீட் நுளைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார்.

எமது நாட்டில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆவதைச் சைற்றம் இல்லாமல் செய்திருப்பதைப் போல, இந்திய அரசின் நீட் தேர்வு அறிமுகத்தால் இந்திய ஏழை, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவிற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க தனியார் நிறுவனமான புரோமெட்ரிக் இனால் இந்திய மத்திய அரசின் உறுதுணையுடன், பரீட்சைக் கட்டணங்களினூடாக இலாபமீட்டும் நோக்கத்துடன் இந் நீட் பரீட்சை நடத்தப்படுகிறது. எனவே, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி ஆகியவற்றின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, அனித்தா போன்ற ஆற்றலும் அறிவும் நிறைந்த ஏழை மாணவர்களின் கல்விக் கனவில் மண்போடும் இந்திய மத்திய அரசின் இக் கொடுஞ்செயலை எதிர்க்கவேண்டியது அவசியம்.

இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரும் லங்கேஸ் பத்திரிகே என்ற பத்திரிகையினை வெளியிட்டு வந்த சிரேஷ்ட ஊடகவியலாளருமான கௌரி லங்கேஸ் கடந்த 05 ஆம் திகதி பி.ப. 7.30 மணி அளவில் அவரின் வீட்டு வாசலில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மூடப் பழக்க வழக்கங்களை எதிர்ப்பதிலும், சமூக அநீதிகளை எதிர்த்து சமூக நீதியை நிலைநாட்டப் போராடுவதிலும், அடக்கி ஒடுக்கப்படும் தலித்துக்கள், பழங்குடி மக்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதிலும், மதவெறிச் செயற்பாடுகளைக் கண்டித்துக் குரல் கொடுப்பதிலும் முன்னணியில் நின்றவர். இந்தக் கொலையை வன்மையாக கண்டிக்கிறோம்.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைச் செயலாளர்களுள் ஒருவரான ச. தனுஜன் தலைமையில் இடம்பெற்ற இத் துண்டுப்பிரசுர இயக்கத்தில் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Comments