நோர்வேயின் மீன்வள ஆய்வுக் கப்பல் இம்மாதம் முதல் ஆய்வுப் பணியை ஆரம்பிக்கிறது. வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் இந்தக் கப்பல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.
நோர்வேயின் உதவியுடன் இலங்கையின் மீன்வளத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் நோர்வேயின் ஆய்வுக் கப்பலான பிரிட்டோவ் நன்சன் (M/V Dr. Fridtjof Nansen) கப்பல் இம் மாதம் முதல் ஆய்வுப் பணியை ஆரம்பிக்கிறது. வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் இந்தக் கப்பல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடையை மீளப்பெற்றதன் ஒரு அங்கமாகவும் இந்த ஆய்வு அல்லது கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
நோர்வே நாட்டு ஆய்வாளர்களுடன் இலங்கையின் விஞ்ஞானிகளும் இந்த ஆய்வுக் கப்பலில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் மீன்வளம் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் மற்றும் கடல்சார் வளம் குறித்த விடயங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கான வரைபடங்களும் தயாரிக்கப்படவுள்ளன.
இந்த ஆய்வினால் இலங்கைக்கு கிடைக்கக் கூடிய முக்கியத்துவம் தொடர்பில் குறிப்பாக கடல்சார் வளத்தின் நிலைப்புத் தன்மைமையை உறுதி செய்வதற்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் பற்றி இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியோன் கவுஸச்சேத்த விளக்கமளித்தார். எமது சகோதரப் பத்திரிகையான சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இவ்வேலைத்திட்டம் குறித்த பல்வேறு தகவல்களை அவர் வழங்கினார்.
செவ்வியின் முழுவிபரம் வருமாறு
கேள்வி : இலங்கை வந்துள்ள பிரிட்டோவ் நன்சன் (M/V Dr. Fridtjof Nansen) ஆய்வுக் கப்பலின் நோக்கத்தை விளக்கிக் கூறமுடியுமா?
பதில் : இலங்கையில் உள்ள கடல்வார் வளங்கள் குறித்த மதிப்பீடொன்றை கொள்வதே இதன் பிரதான நோக்கமாகும். மீன்கள் மற்றும் கடல்சார்பான வளங்கள் பற்றிய தகவல்களைப் பெற்று அவற்றைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக அறிவுசார் நிலைபேறு முகாமைத்துவத்துக்கு கடல்வளங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் அவசியமானவை. இந்த மதிப்பீட்டின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் நிலைபேறான மீன்வளத்தை முகாமைத்துவம் செய்வதற்கான வழிகாட்டல்களை அரசாங்கம் தயாரிக்க உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்.
கேள்வி : இலங்கை அரசாங்கம் ஏன் இது விடயத்தில் நோர்வேயை அணுகியது என்பதை விளக்க முடியுமா? இந்தப் பிராந்தியத்தில் மீன்வளம் குறைந்துள்ளது அல்லது எதிர்காலத்தில் குறைவடையலாம் என அவர்கள் அச்சமடைகின்றார்களா?
பதில் : இல்லை அப்படி எதுவும் இல்லை. எந்தவொரு நாடும் தனக்கு இருக்கும் கடல்வளத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கு விரும்பும். மீன்வளம் என்பது இடத்துக்கிடம் மாறுபடும் என்பதால், இலங்கை தற்பொழுது கொண்டிருக்கும் மீன்வளத்தைவிட எதிர்காலத்தில் அதிகமான மீன்வளத்தைக் கொண்டிருக்குமா என்பதை அறிவதற்கு இந்த மதிப்பீடு உதவியாகவிருக்கும்.
கேள்வி : நேர்வே கப்பலின் இறுதி ஆய்வு 1988ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது 37 வருடங்களாகின்றன. பாரிய இடைவெளி காணப்படும் நிலையில் ஏன் இதற்கு முன்னர் நீங்கள் அழைக்கப்படவில்லை?
பதில் : இந்த ஆய்வுக் கப்பலானது வருடக்கணக்காக ஆய்வுகளை மேற்கொள்ளும் என்பதால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வருடமும் இந்தக் கப்பல் செல்லும் என்பதை உறுதிப்படுத்த முடியாது. சில வருடங்களுக்கு முன்னர் முயற்சித்திருந்தபோதும் அத வெற்றியளிக்கவில்லை. குறிப்பிட்ட இந்தக் கப்பல் புதிய கப்பலாகும். மேம்பட்ட கருவிகள், மேம்பட்ட வசதிகளைக் கொண்ட இந்தக் கப்பலின் ஊடாக கடந்த ஆய்வைவிட மேம்பாடான ஆய்வினை மேற்கொள்ள முடியும். நான் ஏற்கனவே மீன்வளங்கள் இடத்துக்கிடம் மாறும் எனக் கூறியிருந்தேன். இதற்கு கடலின் வெப்பநிலை மாற்றம் உள்ளிட்டவை காரணிகளாகின்றன.
தற்பொழுது முன்னெடுக்கப்படும் இந்த மதிப்பீட்டு வேலைத்திட்டமானது இலங்கைக்கு பல்வேறு பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.
கேள்வி : ஐரோப்பாவின் ஜீ.எஸ்.பி சலுகை மீளப்பெறப்பட்டதற்கும் இந்த ஆய்வுக்கும் ஏதாவதுதொடர்புகள் இருக்கின்றனவா. ஐரோப்பிய சந்தைக் கேள்விக்கான மேலதிக மீன்களை இலங்கை தேடுகிறதா?
பதில் : இந்த ஆய்வுக் கப்பலானது இலங்கை கடற்பரப்பில் காணப்படும் கடல்வளங்களை அடையாளப்படுத்தும். அவ்வாறு அடையாளம் காணப்படும் தகவல்களை சரியான வகையில் பயன்படுத்துவது உங்களைப் பொறுத்தது. உங்கள் வளங்கள் குறித்து அறிந்துகொள்வதானது, ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளுக்கு மேற்கொள்ளக் கூடிய மேலதிகமான ஏற்றுமதிகளைத் திட்டமிட வழிவகுக்கும் என நான் கருதுகின்றேன்.
இருந்தபோதும், நேரடித் தொடர்பு இருப்பதாக நான் கருதவில்லை. இலங்கை மேலதிகமாக மீன்களைப் பிடித்து ஏற்றுமதி செய்வதற்கு இந்த மதிப்பீட்டின் தகவல்கள் உறுதுணையாகவிருக்கும்.
கேள்வி : உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் சார்பில் இந்து சமுத்திரத்தின் வங்காளவிரிகுடா பிராந்தியத்தில் மீன்வளங்கள் குறித்த மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் இணைந்துகொள்ள எது தூண்டுதலாகவிருந்தது?
பதில் : இதன் மறுபக்கத்தைப் பார்க்க வேண்டும். இந்த ஆய்வுக் கப்பலானது நேர்வேயின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது நாம் அமைத்துள்ள மூன்றாவது கப்பலாகும். எமது ஆய்வு நிறுவனத்தின் ஊடாக ஆய்வுக்கான நிபுணத்துவ சேவையை நாம் வழங்குகின்றோம். ஆனால் அந்தக் கப்பலை நடத்திச் செல்வது உணவு மற்றும் விவசாய நிறுவனத்தைச் சார்ந்தது. ஏனெனில், அவர்களே சர்வதேச நிகழ்ச்சி நிரலைக் கொண்டவர்கள். ஐக்கிய நாடுகள் கொடியுடன் அவர்கள் எந்தவொரு நாட்டிற்குள்ளும் நுழைய முடியும். நோர்வேஜின் கப்பலாக இருந்தாலும் ஐ.நா கொடி இருப்பதால் இது உலகுக்குச் சொந்தமானது என்பது புலப்படுத்தப்படும்.
கேள்வி : நாடுகளுக்கிடையில் இணைப்புக்கள் இருக்கும் நிலையில் இந்த மதிப்பீட்டின் முடிவுகளை எவ்வாறு தனித்தனியாக ஒவ்வொரு நாடும் பயன்படுத்தும்?
பதில் : மதிப்பீட்டின் முடிவுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட ரீதியாக தீர்மானிக்க வேண்டும். எனினும் இலங்கையில் நாம் நாரா அமைப்புடன் சிறந்த ஒத்துழைப்பைக் கொண்டுள்ளோம். நாரா நிறுவனம் இதுபோன்ற தகவல்களைப் பேணி மீன்பிடித்துறை அமைச்சுக்கு கொள்கைசார் ஆலோசனைகளை வழங்கிவரும் அமைப்பாகும். அதனால் தற்பொழுது மேற்கொள்ளப்படவிருக்கும் மதிப்பீட்டின் தகவல்களை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்துக்குத் தேவையான வழிகாட்டலை வழங்குவார்கள் என நம்புகின்றோம். இந்தக் கப்பல் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளது. ஆபிரிக்க குடாவிலிருந்த கப்பல் தற்பொழுது வங்காள விரிகுடாவுக்கு வருகிறது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்துவதில் நாரா அமைப்பு ஆர்வத்துடன் இருப்பதாக எனக்கு அறியக்கிடைக்கிறது.
கேள்வி : ஆய்வுக் கப்பலுக்கும் நாரா நிறுவனத்துக்கும் இடையில் தொழில்நுட்ப ரீதியான பரிமாற்றங்கள் ஏதாவது இடம்பெறுமா?
பதில் : பெரும்பாலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும், தகவல்களை ஆய்வுசெய்வதற்கான அறிவுசார் பகிர்வுகளும் இடம்பெறும். எனினும், தொழில்நுட்ப ரீதியான அதாவது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கருவிகளின் பரிமாற்றம் எதுவும் இடைம்பெறாது.
கேள்வி : சட்டவிரோதமான மீன்பிடி இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாகவுள்ளது. இதனைத் தடுப்பதில் நோர்வேயின் நிபுணத்துவ உதவிகள் ஏதும் வழங்கப்படுமா?
பதில் : இந்தக் கப்பலானது கடலில் காணப்படும் வளங்கள் எவை என்பதையே கூறமுடியும். அதுதவிர சட்டரீதியான பிரச்சினைகளை இலங்கையும், இந்தியாவும் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும். வங்காள விரிகுடாவில் உள்ள மீன்களுக்கு நாடுகளின் எல்லைகள் தெரியாது. அவை அங்கும் இங்கும் இடம்மாறிக்கொண்டிருக்கும்.
கேள்வி : மீன்வளம் மிக்க நாடாக நோர்வே காணப்படுவதுடன், பாரிய மீன்பிடி கப்பல்கள் உள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மீன்வளத்தின் நிலைபேறு தன்மையை எப்படி முகாமைத்துவம் செய்கின்றீர்கள்? இது விடயத்தில் இலங்கைக்கு வழங்கக் கூடிய ஆலோசனைகள் யாவை?
பதில் : நிலைப்புத் தன்மை தொடர்பான விடயங்களில் நாம் சில அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். அதிகமான மீன்பிடியில் ஈடுபடாது நிலைப்புத் தன்மையைப்
(தொடர் 20 பக்கம்);
நேர்காணல் மஞ்சுளா பெர்னாண்டோ;
தமிழில் மகேஸ்வரன் பிரசாத்