இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று- நோன்பு | தினகரன் வாரமஞ்சரி

இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று- நோன்பு

இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பு மிகப் பிரதான ஒன்றாகும். நோன்பு வெறுமனே பசித்திருப்பது மாத்திரமல்ல ஒரு மனிதன் தனது ஐம்புலங்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே நோன்பின் பிரதான கோட்பாடாகும்.இதனை அல்லாஹ் தனது அருள் மறையாம் அல் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான். 'உங்களின் முன்னோருக்கு விதியாகப்பட்டதை போன்று உங்களுக்கும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.

பெருமானார் (ஸல்)அவர்கள் அருளியதாக ஹஸ்ரத் சல்மான் ( ரலி) அறிவிக்கிறார்கள். ஸஃபான் மாதம் இறுதியில் ஒரு நல் உபதேசம் செய்தார்கள். மனிதர்களே,உங்களிடம் ஒரு மகத்தான மாதம் வருகிறது. அது பறக்கத் பொருந்திய மாதமாகும். அதில் லைலதுல் கதிர் என்ற ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவாகும். அதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அதனுடைய நேரங்களில் நின்று (தராவிஹ்) தொழுவதை நன்மைக்குரிய செயலாக ஆக்கியுள்ளான். எந்த மனிதன் இம் மாதத்தில் ஒரு நற் செயலைச் செய்து அல்லாஹுத்தாலாவின் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறாரோ அவர் ரமழான் அல்லாத மற்ற மாதங்களில் ஒரு கடமையை நிறைவேற்றியவர் போலாவார்.

மேலும் இம் மாதத்தில் ஒரு பர்ழை நிறைவேற்றியவர் ரமழான் அல்லாத மாதங்களில் எழுபது பர்ழை நிறைவேற்றியவர் போன்றாவார். இம் மாதம் பொறுமையின் மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சொர்க்கமாகும். எனவே நாம் நோன்பு நோற்று வாயையும், வயிற்றையும் கட்டுப்படுத்துவது போல் எமது இதர உறுப்புக்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் நோன்பின் பலாபலன் எம்மைச் சேரும்.நல்லதை பேசி நல்லதை செய்து இதர மனிதர்களுடன் சுமுகமாகவும்,சுக துக்கங்களில் பங்கு கொள்வதாலும் அல்லாஹ் தந்தவற்றில் ஏனையோருக்கு வழங்குவதாலும் ரிஸ்க் எனும் அபிவிருத்தியினை அல்லாஹ் வழங்குகிறான். எந்த மனிதரேனும் ஓர் நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கிறாரோ அவருடைய அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.நரக நெருப்பிலிருந்து அவர் விடுதையாக காரணமாகிறது.

இது மாத்திரமன்றி நோன்பு நோற்றவரைப் போன்று நன்மையும் கிடைத்து விடுகிறது. எனினும்நோன்பாளியுடைய நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது என அண்ணல் நபி (ஸல்) கூறிய போது ஸஹாபாக்கள் யாறசூலுல்லாஹ் எங்களில் நோன்பாளிகளை நோன்பு திறக்க வைக்க சக்தி பெற்றவர்கள் இல்லையே என்ற போது றலுல்லாஹ் (ஸல்) அவர்கள் வயிறு நிறைய உணவளிக்க வேண்டியதில்லை. மாறாக ஒரு பேரித்தம் பழம் அல்லது ஒரு மிடறு தண்ணீர் அல்லது ஒரு மிடறு பால் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு நோன்பு திறக்கச் செய்தாலும் அவருக்கு அல்லாஹ் அந்த நன்மையை வழங்கி விடுகிறான். என்று கூறிய பின் இம் மாதத்தில் முதற் பகுதி றஃஹ்த்துடையதாகவும் நடுப் பகுதி பாவ மன்னிப்புடையதாகவும் இறுதிப் பகுதி நரக நெருப்பை விட்டும் விடுவிப்பதாகவும் என்றார்கள். எவரேனும் இம் மாதத்தில் தன் அடிமைகள் வேலைக் காரர்களின் வேலைப் பளுவை குறைப்பாரோ அவரை அல்லாஹ் மன்னித்து நரக விடுதலையும் அளித்து விடுவான். எனவும் அருளினார்கள். எனவேதான் ரமழான் மாதத்திற்கு முன்னரே ஸஃபான் மாத இறுதியிலேயே றஸுலில்லஹி (ஸல்) அவர்கள் புனிதமிகு ரமழான் மாதத்தின் நோன்பைப் பற்றிக் கூறினார்கள். எனவே நாமும் புனித நோன்பு மாதத்தின் ஒரு வினாடியேனும்வீணாகக் கழிக்காது வீன் பேச்சுக்களை விட்டும் வீண் விளையாட்டுக்கள், தொலைக்காட்சி பார்ப்பதை விட்டும் இதர பொழுது போக்குகளில் ஈடுபடாமல் ஐங்கலாத் தொழுகைகளை இமாம் ஜமாத்துடன் தொழுது இதர சுன்னத்தான நபிலான தொழுகைகளில் ஈடுபட்டு திகிர், ஸலவாத், ஸ்திஃக்பார் எனும் பாவமன்னிப்பு அல் குர் ஆன் திலாவத் போன்ற இன்னோரன்ன நல் அமல்களில் ஈடுபட்டு வருவதுடன் நோன்பின் மாண்பைப் பேணி இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவோமாக.

தவிரவும் ஏழை எளியோரின் துயர் துடைக்கவென எம் மீது விதியாக்கப்பட்ட 'ஸகாத்' எனும் ஏழை வரியினை முறையாகக் கணக்கிட்டு வழங்கி எமது பொருட்களிலும், வாழ்க்கையிலும் பறக்கத்தையும், அபிவிருத்தியையும் பெற்று நோன்பின் பலாபலங்களை முழுமையாக, முறையாகவும் பெற்ற நல் மக்களாக எம்மை ஆக்கி அருள் புரிவானாக.

எம்.ஏ.எம்.ஹஸனார்

Comments