பலஸ்தீன மீட்புப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பலஸ்தீன மீட்புப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும்

தாஹா முஸம்மில்

குத்ஸ் தினமென்பது முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய தினமல்ல..... அது அடக்குமுறைக்கு எதிரான அனைத்து மக்களினது தினம். அல் குத்ஸ் விடுதலைக்காக போராடி கொண்டிருக்கும் பலஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிப்போம்

புனித பூமியான பலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிரதேசங்களில் இஸ்ரேலிய ராணுவம் புரிந்து வரும் அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் தூதர்களையே கொலை செய்வதற்கு தயங்காத இவர்கள் இன்று பச்சிளம் பாலகர்களையும், வயோதிபர்களையும் அப்பாவிப் பெண்களையும் மிருகத்தனமாக கொன்று குவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் தலைமையில் இஸ்லாம் விரோத சக்திகள் அனைத்தும் இதற்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்றன. ஐ.நா.சபையும் நயவஞ்சகமாகவே நடந்துகொள்கிறது என்பது வெளிப்படை. ஐ.நாவை நம்பி எந்தப்பிரயோசனமும் இல்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட செயற்பாடே இதற்கான ஒரே தீர்வு என்பது தெளிவு.

இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு எதிராகவும் பைத்துல் முகத்தஸை பாதுகாப்பதற்காகவும் பலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையே போராட்டமாகவும் அவர்களின் பிரதேசங்கள் போராட்டக்களமாகவும் மாறியுள்ளன. புனித பூமியை பாதுகாப்பதற்காக இதுவரை இலட்சக்கணக்கான உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வயோதிகர்கள் என்று அனைவரும் களத்தில் உள்ளனர். பலஸ்தீனர்களின் போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிக்கும் வகையில் புனித ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை அல் குத்ஸ் தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்று இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்ற ஆரம்ப நாட்களிலேயே பிரகடனம் செய்தார்கள்.

பலஸ்தீன் போராட்டத்திற்கு ஆதரவான சிறப்பு கட்டுரைகள், ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் அன்றைய தினத்தில் நடத்தப்படுகின்றன.

அமெரிக்க மற்றும் ஜரோப்பிய நகரங்களில் கூட நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்களும் சியோனிஸத்துக்கு எதிரான யூதர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஆனால் நம்முடைய பகுதிகளில் இந்த தினம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. பலஸ்தீன போராட்டமும் பைத்துல் முகத்தஸின் மீட்பும் வெறும் பலஸ்தீன பிரச்சினை என்றோ அல்லது அப்பிராந்தியத்தின் பிரச்சினை என்ற அளவில் சுருக்குவதற்கான சூழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இஸ்லாத்தின் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ள அரபுத் தலைவர்களே, “எமக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை“ என்று கூறுமளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது.

பலஸ்தீன் பூமி நபிமார்கள் சுற்றி திரிந்த ஒரு பிரதேசம் பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் முதல் கிப்லா. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணமான மிஃராஜுடன் தொடர்புடையது. நபிமார்களுக்கு இமாமாக நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திய இடம், நன்மையை நாடி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட மூன்று பள்ளிகளுள் இதுவும் ஒன்று. எனவே ஜெருஸலம் பூமியும் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முழு முஸ்லிம் உம்மத்திற்கும் சொந்தமானது. அதன் மீட்பில் அனைவரும் பங்காற்றுவோம்.

எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள சர்வதேச குத்ஸ் தினத்தில் போராடி கொண்டிருக்கும் பஸ்தீன மக்களுக்கு நம்முடைய ஆதரவை தெரிவிப்போம்.

அன்றைய தினம் பலஸ்தீன போராட்ட வரலாறு, பைத்துல் முகத்தஸ் வரலாறு, இஸ்ரேலின் அத்துமீறல்கள் மற்றும் நம்முடைய பங்களிப்பு குறித்த தகவல்களை மக்களுக்கு விளக்கிச் சொல்வோம்.

புனித பூமியின் மீட்பில் நம்முடைய இச்சிறிய பங்கை நாம் ஆற்றலாம். சர்வதேச குத்ஸ் தினத்தை நம்முடைய பகுதிகளிலும் அனுஷ்டிப்போம்.

இந்த வருடம் ஜூன் 8ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பயான்களிலும் இரவுத் தொழுகைக்கு பிந்தைய பயான்களிலும் பைத்துல் முகத்தஸை நினைவு கூர்வதுடன் அதனை மீட்கும் போராட்டம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்,

Comments