சொல்லவருவதைத் தெளிவாகச் சொன்னால் பெரும்பாலான பிரச்சினைகள் தீரும் | தினகரன் வாரமஞ்சரி

சொல்லவருவதைத் தெளிவாகச் சொன்னால் பெரும்பாலான பிரச்சினைகள் தீரும்

காரைதீவு குறூப், அக்கறைப்பற்று மேற்கு நிருபர்கள்

 

இன்றைய காலகட்டத்தில் கணவன் சொல்வது மனைவிக்குப் புரிவதில்லை. ஜனாதிபதி சொல்வது மக்களுக்குப் புரிவதில்லை. ஆசிரியர் சொல்வது மாணவருக்குப் புரிவதில்லை.இதனால் பிரச்சினை. இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் சொல்ல வருவதைத் தெளிவாகச் சொல்வதில்லை என்பதே. எனவே, சொல்ல வருகின்ற விடயத்தைத் தெளிவாகச் சொன்னால் பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று மூத்த ஊடகவியலாளர் வி. என். மதிஅழகன் அக்கரைப்பற்றில் கூறினார்.

கனடாவில் வாழும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் வி.என்.மதிஅழகன் எழுதிய 'வி.என்.மதிஅழகன் சொல்லும் செய்திகள்' எனும் நூல் அறிமுகவிழா நேற்று (29) அக்கறைப்பற்று மங்கோ கார்டன் விடுதியில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பதில் நீதிபதியுமான சட்டத்தரணி உவைசுர் ரகுமான் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

கலை இலக்கியவாதிகள் கல்வியியலாளர்கள் சமூகத் தலைவர்கள் புத்திஜீவிகள் எனப் பல தரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

வரவேற்புரையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிறை எவ்.எம்.கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூம் நிகழ்த்த, வாழ்த்துரைகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் கல்வியியலாளர் வி. ரி. சகாதேவராஜா, ஒலிபரப்பாளர் கவிஞர் எம். றபீக் ஆகியோர் நிகழ்த்தினார். பிரபல எழுத்தாளர் அக்கரையூர் குத்தூஸ் 2நிமிடத்தில் எழுதிய மதிஅழகன் பாடலொன்றை 1நிமிடத்தில் இசையமைத்த கவிஞர் கோவிலூர் செல்வராஜன் 3நிமிடத்தில் பாடி சபையோரை ஈர்த்தார். ஒலி பரப்பாளர் ஜவாத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.

அங்கு நூலை வழங்கிவைத்து மதிஅழகன் மேலும் உரையாற்றுகையில், கொழும்புக்கு அப்பால் முதற்றடவையாக என் இனிய ஒலிபரப்புத்துறை நண்பர்கள் உள்ள அக்கரைப்பற்றில்தான் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. அவர்கள் தமிழைக் கையாளுகின்ற பாங்கு அலாதியானது.ஒருபுறம் இது நல்லிணக்கத்திற்கானதொரு பாலமாகவும் அமைகின்றது.

இறுதியில் மதிஅழகன் ரசிகர்களுக்கு 2நிமிடம் பேச அனுமதி வழங்கப்பட்டது. அதிகமாக தமிழ், முஸ்லிம் இரசிகர்கள் அபிமானிகள் வந்து தமது வாழ்த்து களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

Comments