கூட்டுறவுத்துறை பிரச்சினைகளை தீர்க்க கூடுதல் கவனம்; விரைவில் முக்கிய தீர்மானம் | தினகரன் வாரமஞ்சரி

கூட்டுறவுத்துறை பிரச்சினைகளை தீர்க்க கூடுதல் கவனம்; விரைவில் முக்கிய தீர்மானம்

புதிய காத்தான்குடி தினகரன், மட்டு குறூப், வெல்லாவெளி தினகரன் நிருபர்கள்

 

அடுத்து வரும் ஓரிரு மாதங்களில் கூட்டுறவுத்துறை தொடர்பில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த நாட்டில் கூட்டுறவு இயக்கம் சக்தி வாய்ந்த; பலம் வாய்ந்த இயக்கமாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதனை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 96ஆவது சர்தேச கூட்டுறவு தின விழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் 7.7.2018 சனிக்கிழமை மாiலை நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட்பதியுதீன், இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சிறியானி விஜேசேகர, பிரதியமைச்சர்களான புத்திக பத்தரன, எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அலிசாஹீர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுனர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகள், கூட்டுறவு ஆணையாளர்கள் எனப் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,  நான் முதன் முதலாக ஒரு கூட்டுறவு ஊழியனாகத்தான் கூட்டுறவு மாநாட்டில் கலந்து கொண்டேன். அதன் பிறகு அமைச்சராக கலந்து கொண்டேன். இன்று உங்கள் ஜனாதிபதியாக கலந்து கொள்கின்றேன்.

கூட்டுறவு என்பது மக்கள் இயக்கமாகும். அஃது அரசாங்கத்தின் இயக்கமல்ல.

மக்கள் மத்தியில் ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற ஓர் இயக்கம் தான் கூட்டுறவு இயக்கம்.

அரசாங்கத்தின் கொள்கைக்கும் கூட்டுறவுத்துறை கொள்ககைக்குமிடையில் முரண்பாடுகள் இருந்தாலும் அதை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்.

உலகில் பல செல்வந்த முன்னேற்ற மடைந்த நாடுகளிலே மிகவும் பலம் வாய்ந்த கூட்டுறவு இயக்கங்கள் இருக்கின்றன.

அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் ஏனைய கொள்கைகள் கூட்டுவுத்துறை கொள்கைகளுடன் எந்த விதத்திலும் முரண்பாடாக அமைய முடியாது.

எமது நாட்டில் இந்தக் கூட்டுறவு துறைக்கு இருக்க கூடிய நீண்ட கால சரித்திரத்தை அனுபவத்தை பார்க்கும் போது அனைத்து மக்களுக்கும் இந்த கூட்டுறவுத்துறையில் மிகவும் அன்பும் பாசமும் இருந்து வருகின்றது.

எல்லோரும் ஒன்று பட்டு செயற்படுகின்ற ஒரு வழிமுறையே கூட்டுறவுத்துறையாகும்.

மக்களுக்கு தனியாக வாழ்வதை விட மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டாக வாழவேண்டும் என்ற அந்த உன்னத போதனைைய எடுத்துச் சொல்கின்ற ஓர் இயக்கம் தான் இந்த கூட்டுறவு இயக்கம்.

கூட்டுறவு இயக்கம் சில நேரம் விழுந்து விடும். ஆனால், எழுந்து விடும்.

மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படித்தான் விழுந்து விழுந்து எழுந்து விடுகின்றார்கள். சில நாடுகளிலும் அப்படித்தான் உள்ளது. சில அமைப்புக்களிலும் அப்படித்தான் இருக்கின்றது.

சில நிறுவனங்களின் நிலைமையும் அப்படித்தான் இருக்கின்றது. தனிப்பட்ட நபர்களின் வாழக்கையும் அப்படித்தான்.

எனவே, கூட்டுறவு இயக்கம் விழுந்தாலும் அது எழுந்து வருகின்ற ஒரு மனிதாபிமான இலட்சணமாகத்தான் இந்தக் கூட்டுவு இயக்கம் இருந்து வருகின்றது.

தன்னைப் பற்றி மாத்திரம் சிந்திக்கின்றவர்களுக்கு கூட்டுறவு இயக்கத்தில் இருக்க முடியாது.

சமூகத்திலுள்ள ஏனையோரைப்பற்றி சிந்திக்கின்ற; கவனிக்கின்றவர்கள் மாத்திரம் தான் கூட்டுறவு இயக்கத்தில் இருக்க முடியும்.

இந்தக் கூட்டுறவு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அமைச்சர் றிசாட் பதியுதீன் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றார்.

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் அதன் உத்தியோகத்தர்களுக்கும் நன்றி கூறுகின்றேன். இந்த நாட்டில் கூட்டுறவு இயக்கம் சக்தி வாய்ந்த பலம் வாய்ந்த இயக்கமாகும். அதனை எடுத்துக்காட்ட வேண்டும். கூட்டுவுறவுத்துறையினரின் பிரச்சினைகளை முன் வைப்பதற்காக ஒரு பொது மேடைக்கு முன் வரவேண்டும்.

மன உறுதியோடு கூட்டுறவுத்துறையினர் செயற்பட வேண்டும் என இந்த 96வது சர்வதேச கூட்டுறவு விழாவில் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களைப் பற்றி கவனம் செலுத்தாமல் இருக்கின்றார்கள் என்றும் தெரிகின்றது.

உங்கள் மீது கவனம் செலுத்துவோம். இந்த கூட்டுறவு சம்மேளனத்திற்கு அடுத்த பொருளாதார கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

அந்த இடத்தில் உங்கள் பிரச்சினைகள் பற்றிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுங்கள்.

உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க அது நல்ல சந்தர்ப்பமாகும்.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் கூட்டுறவுத்துறையினர் பற்றிய நல்ல தீர்மானங்கள் எடுக்க எண்ணியிருக்கின்றேன்.

அடுத்த 97வது சர்வதேச கூட்டுறவு தின விழாவை மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் நடாத்த முடியும் என நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

இதன் போது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

Comments