கேட்பாரற்றுக் கிடக்கும் மன்னார் மணியாட்டி நாவல் | தினகரன் வாரமஞ்சரி

கேட்பாரற்றுக் கிடக்கும் மன்னார் மணியாட்டி நாவல்

ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் மன்னார் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று கோட்டை மன்னார் மற்றொன்று தலைமன்னார்.

இத்தலைமன்னார் மக்களுடைய வாழ்வியலானது சுமார் 500 வருடங்களுக்கு மேற்பட்டது. இத் தலை மன்னார் மண்ணில் ஏழு முக்கிய சுற்றுலாத்தலங்கள் உள்ளன. அதில் ஒன்று மணியாட்டி நாவலாகும்.

இது தலைமன்னார் பிரதான வீதியில் இருந்து 1கி.மீ தொலைவில் தலைமன்னாரின் தென் பகுதியின் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.

இம் மணியாட்டி நாவல நிலப்பரப்பானது சிலிக்கன் மணலினால் சூழப்பட்டுள்ளது.

இம் மணல் பரப்பின் மத்தியில் ஏராளமான நாவல் மரங்கள் வளர்ந்து பெரும் சோலையாக காணப்படுகின்றது.

இது 152 அடியு உயரமும் 820 அடி சுற்றளவும் கொண்ட ஒரு உயர்ந்த மணல் குன்றாகும்.

இக் குன்றைச் சூழ்ந்தே அதிகமான நாவல் மரங்கள் காணப்படுகின்றன.

இதன் உயரத்தில் நின்று பார்க்கின்ற போது மன்னார் தீவின் ஐந்தில் ஒரு பகுதி நிலப்பரப்பை எம்மால் பார்க்க முடியும்.

'மணியாட்டி நாவல்' எனும் பெயர் எப்படி வந்து?

ஈழத்தை ஐரோப்பியர்கள் ஆட்சி செய்த போது தலைமன்னார் மண்ணின் தற்போதைய சேமக்காலையில் போர்த்துக்கேயரினால் புனித லோறன் சியாரின் தேவாலயம் ஒன்று நிர்மானிக்கப்பட்டிருந்து.

இத் தேவாலயத்தில் போர்த்துக்கேயர்கள் பெருமதிமிக்கமணிஒன்றைநிர்மாணித்திருந்தனர். இத் தேவாலயத்திலேயே எமது முன்னோர்கள் தமது ஆன்மீக காரியங்களை நிறைவேற்றி வந்தனர்.

அவர்களின் வாழ்வும் குடியிருப்பும் கடற்கரையை அண்மித்தே இருந்தது.

போர்த்துக்கேயர் வீழ்த்தப்பட்டு ஒல்லாந்தரின் ஆட்சி வந்ததும் ஒல்லாந்தர் பல கோட்டைகளை நிர்மாணித்தனர்.

கத்தோலிக்க தேவாலயங்களை இடித்தனர். இவ்வாறு உடைக்கப்பட்ட தேவாலயங்களில் தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயமும் ஒன்று.

இவ்வாறு ஆலயங்கள் இடிக்கப்பட்டு புரட்டஸ்தாந்து மத ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டு வந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் இலங்கையை கைப்பற்ற முற்பட்ட போது ஒல்லாந்தர் தம்மிடமிருந்த பெருமதிவாய்ந்த பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு தப்பிக்க முற்பட்டனர்.

அவ்வாறு அவர்கள் சேகரித்த பொருட்களில் தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் இருந்த பெருமதிவாய்ந்த ஆலய மணியும் ஒன்று.

இம் மணியுடனும் ஏனைய பொருட்களுடனும் தலைமன்னாரின் வட பகுதி கடல் வழியாக தப்பிக்க முற்பட்டனர்.

ஆனால் அப்பகுதியை ஆங்கிலேயரின் பாய்மரக் கலங்கள் மூலம் சூழ்ந்து கொண்டதை ஒல்லாந்தர் உணர்ந்தனர்.

எனவே, இவர்களிடமிருந்து தப்பிக்க தென்பகுதி கடலை நாடினர். இவ்வாறு அவர்கள் தலைமன்னாரின் தென்பகுதியூடாக தப்பிச் செல்ல முற்பட்ட போது உயரமாக இருந்த மணல் குவியலையும் அதை சூழ நாவல் மரங்கள் இருப்பதையும் கண்டு கொண்டனர்.

அந்த உயரமான மணல் குவியலில் இருந்து ஆங்கிலேயரை நோட்டமிட்ட போது அவர்கள் கொண்டு சென்ற ஆலயமணியானது இறை அருளினால் தொடர்ந்து அவ்விடத்தில் ஒலித்துக் கொண்டு இருந்ததாக எம் முன்னோர்கள் தமது பிள்ளைகளுக்கு வாய்மொழியாக கூறிவந்துள்ளனர்.

அன்று முதல் மணி அவ்விடத்தில் ஒலித்தமையினாலும். ஆதிகமான நாவல் மரங்கள் சூழ்ந்திருந்தமையினாலும் அவ்விடம் மணியாட்டி நாவல் என அழைக்கப்பட்டது.

பின்னர் அம் மணியைக் கொண்டு தென்பகுதியூடாக ஒல்லாந்தர் தப்பிக்க முற்பட்ட போது அவர்களுடைய பாய்மரக்கப்பலானது கடலில் மூழ்கிப் போனதாம். அன்றிலிருந்து இன்று வரை எமது மீனவர்கள் அம் மணியை கடலடியில் தேடிவருகின்றனர்.

இன்று வரை அம்மணி கிடைக்கவில்லை .

இச் சம்பவத்தின் பின்னர் மணியாட்டி நாவலானது ஒரு ஆன்மீகத் தலமாக மாறியது.

இயற்கையாக அமைந்த அம்மணல் திட்டுக்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள், திருப்பலிகள் இன்னும் பல ஆன்மீக நிகழ்வுகளை குருக்கள்மார் வழி நடாத்தி வந்தனர்.

இவ்விடத்திற்கு சென்று வருபவர்கள் மன அமைதியுடன் வீடு திரும்புவதாகச் சொல்வார்கள்.

காலப்போக்கில் தலைமன்னாரில் ஏராளமானோர் இயற்கை அனர்த்தங்கள், கொள்ளை நோய்களினால் பாதிக்கப்பட்டு 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இவ் விழப்புக்கள் மக்களை அதிகம் பாதித்தமையினால் தலைமன்னார் மண்ணின் மக்கள் வாழும் இடங்கள் சுருங்கின.

இதனால் மணியாட்டி நாவலைப்பற்றி மக்கள் தமது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க தொடங்கினர்.

காலப்போக்கில் மக்கள் இவ்விடத்தை நாவல் பழம் பறிப்பதற்கான இடமாக மாற்றினர்.

காதலர்கள் தமது காதலை வளர்ப்பதற்காகவும் தனிமையாக கதைப்பதற்குமான இடமாக மாறிப்போனது.

சிலபெற்றோர் உணவு உண்ண மறுக்கும் தமது பிள்ளைகளை மணியாட்டி நாவலில் உள்ள பேயிடம் உன்னை பிடித்துக் கொடுத்து விடுவேன் எனக் கூறி தமது பிள்ளைகளுக்கு உணவை ஊட்டத்தொடங்கினர்.

சில கடத்தல் காரர்கள் தாம் மறைந்து வாழ்வதற்கான அரணாக அவ்விடத்தைப் பயன்படுத்தினர்.

இவ்வாறு மணியாட்டி நாவலின் ஆன்மீகத் தன்மை மறைந்தது.

இவ்விடம் இப்போது கவனிப்பாரற்று கிடக்கின்றது.

எனவே இந்த இடத்தை மன்னார் பிரதேசசபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து அவ்விடத்திற்கு பாதையமைத்து மக்கள் சென்று வரக்கூடிய ஒரு பூங்காவாக, ஆன்மீகம் கலந்த இடமாக மாற்றி அமைக்க முன்வர வேண்டும்.

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

Comments