நித்தியகலாவை கழுத்தை நெரித்து நானே கொலை செய்தேன் | தினகரன் வாரமஞ்சரி

நித்தியகலாவை கழுத்தை நெரித்து நானே கொலை செய்தேன்

சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம்

கிளிநொச்சி யுவதி நித்தியகலாவை கழுத்தை நெரித்தே கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிருஸ்னகீதன் பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்

கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணகீதன் என்பரே இந்த யுவதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகப் பொலிஸாரிடம் இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்

அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தில், இப் பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்தது என்றும் அவரது வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதுதான் என்பதால், தன்னைக் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள். 

பின்னர் நாம் இருவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்வோம் என்று முடிவெடுத்தோம். கடந்த 28ஆம் திகதி அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும் நானும் எனது வீட்டிலிருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டேன். பின்னர் அம்பாள்குளம் வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து பின்னர் மீண்டும் உள்பாதைகளால் சம்பவ இடத்திற்குச் சென்றோம். வரும் போதே அவள் மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கி வந்தாள் அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சினை வந்துவிட்டது. அவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் உடையில் வந்தமையால் அவளது கழுத்துப் பட்டியில் அவளது தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

பின்னர் இறந்தவள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணக் கூடாது என்பதற்காக அவளது பாவாடை மேற் சட்டை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவளது உடலை அருகில் இருந்த வயல் கால்வாய்க்குள் இழுத்துச் சென்று போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கனகபுரம் பகுதியில் அவளின் பாவாடையை எறிந்துவிட்டு ஹேன்ட்பாக் மற்றும் மேலாடை சேர்ட் என்பவற்றை அம்பாள் குளப்பகுதியில் எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு போல் வீட்டுக்கு வந்தேன்.

பின்புறமாக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கிள், ஹெல்மட் என்பவற்றை மறைத்து வைத்து விட்டு நஞ்சருந்தி நானும் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் நஞ்சு போத்தலை கொண்டுவந்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்ததால் அதனையும் வீட்டுக்குள் ஒளித்துவைத்துவிட்டேன். சம்பவ இடத்தில் இடுப்புப்பட்டி மற்றும் சில தடயங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நானே கொண்டு வந்தேன். இக்கொலையை நான் மட்டுமே செய்தேன். என்னால் சம்பவ இடம் மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் என்னால் காட்ட முடியும். நான் தான் இதனை செய்தேன் எனச் சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்த்தன, பொலிஸ் அத்தியட்சகர் சமுத்திர ஜீவ, கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதில் பொலிஸ் பரிசோதகர் லலித்தரத்ன ஆகியோரின் பணிப்பின் பேரில் கிளிநொச்சி மாவட்ட பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்தினம் ஜெசிந்தனின் தலைமையில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டன. பொலிஸ் உத்தியோகத்தர்களான நிஹால்,விஜயசேகர, மிலன், சங்கர் சந்தன, சிவதாஸ், லீலாவதி, அசங்க ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொலைபேசித் தரவுகள் என்பவற்றைக் கொண்டு பரிசீலனை செய்தபோது பொழுது இப்பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Comments