பூநகரியில் ஒரு குளம் அமைக்கப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பூநகரியில் ஒரு குளம் அமைக்கப்பட வேண்டும்

 இந்திய அரசின் கரிசனையை   ஊக்குவிக்க முயற்சிகள்   எடுக்கப்படுவது அவசியம்

‘பூநகரியின் ஆறாயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் கடல் நீர் உட்புகுந்ததால் உவர் மண்ணாகவும், உவர் நீராகவும் மாறியுள்ளது. இங்குள்ள சில குளங்களை உள்ளடக்கி ஏழு கி.மீ. அணை ஒன்று அமைக்கப்பட்டு பெரிய குளம் ஒன்று அமைக்கப்படுமானால் உவர் நீராகக் காணப்படும் கிணறுகள் நன்னீராகும். இரு போகங்கள் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்’

 

 

பெரும் கற்காலப் பண்பாட்டுக் காலம் தொடக்கம் மக்கள் வாழ்ந்து வரும் ஒரு பிரதேசமாக பூநகரிப் பிரதேசம் காணப்படுகின்றது.

பண்டைய காலத்தில் பூநகரியின் கரையோரப் பகுதிகளில் வர்த்தக தொடர்புடன் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இதைவிட, கரையோரம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் விவசாயத்தோடு பின்னிப் பிணைந்த மக்கள் சமூகமும் அங்கு வாழ்ந்ததாக வரலாறுகள் மூலம் அறியமுடிகின்றது.

அதேபோல விவசாயத்திலும் முதன்மையான பிரதேசமாக பூநகரிப்பிரதேசம் இருந்து வந்திருக்கிறது.

இன்றும் பூநகரி பிரதேசத்தின் விளைவிக்கப்படுகின்றன பாரம்பரிய நெல்லினங்களின் அரிசிக்கு இலங்கையில் மட்டுமல்ல ஆசிய ஐரோப்பிய நாடுகளிலும் குறையாத கேள்வி காணப்படுகின்றது.

இந்த நெல்லினங்கள் மற்றும் விவசாய நடவடிககைகள் நீர்ப்பாசன கட்டமைப்புக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பயிர்ச்செய்கைள் அல்ல, மாறாக மழையை நம்பி மானாவாரியாக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு பயிர்ச் செய்கையின் மூலமே இந்த விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த காலங்களில் நிலவிய தொடர் யுத்தம், இடப்பெயர்வுகள் என்பவற்றால் பூநகரி கரையோரப் பிரதேசங்களில் காணப்பட்ட உவர் நீர்த்தடுப்பணைகள் மற்றும் சிறிய நீர்நிலைகள் சிறுகுளங்கள் சேதமடைந்ததன் விளைவாக, கடல் நீர் உட்புகுந்து இப் பிரதேசத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.

பூநகரிப் பிரதேசத்தில் ஒரு பாரிய நீர்த்தேக்கம் ஒன்றினை அமைக்கலாம் என்று கடந்த 2012ம் ஆண்டின் ஆரம்பத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பிள்ளையார் சுழிபோட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தை கடந்து செல்கின்ற மற்றும் அதிக நீர்வரத்தைக் கொண்ட கனகராயன் ஆறு போன்ற பாரிய ஆறுகள் மறிக்கப்பட்டு கிளிநொச்சியின் கிழக்குப் பிரதேசத்தில் இரணைமடுக் குளம் கல்மடுக்குளம் மற்றும் பிரமந்தனாறுக் குளம், கனகாம்பிகைக் குளம், போன்ற பாரிய குளங்கள் அமைந்துள்ளன.

இதேபோல கிளிநொச்சியின் மேற்குப் பிரதேசத்தில் உள்ள பாரிய நீர்ப்பாசனக் குளமாக அக்கராயன் குளமும் அதற்கு அடுத்தாற்போல் குடமுருட்டிக் குளம், கரியாலை நாகபடுவான் குளம், வன்னேரிக் குளம் போன்ற குளங்கள் அமைந்துள்ளன.

இந்தக் குளங்களுக்கு ஒப்பான பாரிய நீர்த்தேக்கம் ஒன்றினை கிளிநொச்சியின் பூநகரிப் பிரதேசத்தில் அமைக்கலாம் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டு இது தொடர்பான ஆய்வுகள் நீர்ப்பாசனத் திணைகளத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டன.

அதாவது, பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட மாழாப்புக்குளம் கொக்குடையான் குளம், புத்தியற்ற மோட்டை வெள்ளப்பள்ளம் முறியவிழுந்தான், கொக்குடையான், கல்லாய்குளம், களுவெளி உள்ளிட்ட சுமார் பத்திற்கும மேற்பட்ட சிறுசிறு குளங்களை உள்ளடக்கி இக் குளத்தினை அமைக்கலாம் என்றும் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வாறு குளங்களை உள்ளடக்கி ஏழு கிலோமீற்றர் அணைக்கட்டு மூலம் இக்குளம் அமைக்கலாம் என்பது திட்ட யோசனை.

இலங்கையில் சுமார் 103 இற்கும் மேற்பட்ட ஆற்றுப்படுக்கைகள் காணப்பட்டன.

இதில் கனகராயன் ஆறு, மண்டைக்கல்லாறு, அக்கராயன் ஆறு, உள்ளிட்ட ஏழு ஆறுகள் கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரங்களில் சங்கமிக்கின்றன.

அக்கராயன் ஆற்றுக்கும் மண்டைக் கல்லாற்றிக்கும் இடைப்பட்ட பகுதியில் இக்குளம் அமைவதனால் இவ்விரு ஆறுகளின் ஊடாக வருகின்ற நீர் மற்றும் இக்குளத்தின் மேற்பகுதிகளில் உள்ள பிரதேசங்களில் இருந்து வருகின்ற நீர் என்பவற்றால் இக்குளத்தின் நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்றும் இதன் மூலம் பூநகரியில் உள்ள கிட்டத்தட்ட மூவாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் இரு போகங்களில் பயிர்செய்கை மேற்கொள்ள முடியும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இக் குளம் ஆழம் குறைந்த குளமாக இருப்பினும் அதிகளவான நீரேந்துப் பிரதேசமாகவும் அமையும் என்று இப்பகுதி விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இக்குளத்தினை அமைப்பதற்கு கிட்டத்தட்ட 750 மில்லினுக்கு மேற்பட்ட நிதி தேவையென்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இக்குளம் அமைப்பது தொடர்பில் இந்த வாரம் முற்பகுதியில் கிளநொச்சிககு விஜயம் செய்திருந்த இந்திய அதிகாரிகள் குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம், பூநகரிப்பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாவட்டச் செலயகத்துடன் கலந்துரையாடியதுடன், குளம் அமையவுள்ள பிரதேசத்தினை சென்று பார்வையிட்டுள்ளனர்.

கிளிநெர்சசி மாவட்டத்தில் இருக்கின்ற இரணைமடுக்குளம் கல்மடுக்குளம், அக்கராயன் குளம், என்பவற்றை புனரமைப்பது அல்லது குளத்தின் அணைக்கட்டுக்களை உயர்த்தி நீர்க்கொள்ளவை அதிகரித்தல் என்பதற்கு அப்பால் இவ்வாறு புதிய குளம் ஒன்றை அமைப்பது என்பது மிகக்கடினமான விடயம்.

இது தொடர்பில் பலரது ஒத்துழைப்பும் பங்களிப்பும் ஆலோசனைகளும் மிகமிக அவசியமானது. அந்த அடிப்படையில் இந்தக் குளம் அமைய வேண்டும் என்ற ஆசையும் அவாவும் பூநகரிப் பிரதேச விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இருக்கின்றது என்பதை அவர்களினது கருத்துக்களிலிருந்து அறியமுடிகின்றது.

அதாவது பூநகரியில் இக்குளம் அமையுமானால் இங்குள்ள வளங்கள் சிறப்படையும். இன்று உவர் நீர்க்கிணறுகளாக இருக்கின்ற கிணறுகள் நன்னீராக மாற்றடையும். இரண்டு போகங்கள் பயிர்செய்ய முடியும். நல்ல மண் வளம் இருக்கின்றபோதும். நீர் வளம் இல்லாமையினால் இரண்டு போகம் பயிர்செய்ய முடியாதுள்ளது.

 

“கால் நடைகளுக்கான தண்ணீர் இல்லை. சிலவேளை மழையை நம்பிச்செய்யம் விவசாயமும் மழை பொய்த்தால் அழிந்து விடுகிறது. தற்போது எமது பிரதேசத்தில் குடிநீர் பாரிய பிரச்சினை நிலவுகிறது. முட்கொம்பனில் இருந்தும் கிளிநொச்சியில் இருந்தும்தான் எமக்கு குடிநீர் வருகின்றது

பூநகரி மண்ணானது மனித சுவாத்தியத்திற்கு சிறந்த மண்ணாக இருக்கின்ற போது இங்கு தண்ணீர ஒரு பிரச்சினையாக அமைந்துள்ளது.

இந்தக் குளம் அமையப்பெறுமானால் பூநகரியின் தலைவிதியே மாற்றம் பெறும்” என விவசாயிகள் ஏன் இங்கு ஒரு குளம் அவசியம் என்பதற்கான காரணங்களை தடுக்கிறார்கள்.

இவ்வாறு ஒரு குளம் அமையவேண்டும். இதன் மூலம் இப்பிரதேசங்கள் வளமான பிரதேசங்களாக மாறும். இங்கே காணப்படுகின்ற வளமான நிலங்களில் பயிர்செய்து வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கை துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ளது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

வரலாற்றுத் தொன்மையும் பூர்வீகச் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட பூநகரிப் பிரதேசத்தின் வளத்தை பெருக்கும் வகையில் இக்குளம் அமையப்பெற வேண்டும் என்பது அனைவரினதும் எதிர் பார்ப்பாகும்.

படங்கள், கட்டுரை
யது பாஸ்கரன்

 

Comments