உன்னைப் பற்றிய
வண்ணக் கனவுகள்
என்னுள்ளே வரிசையாய்
தீபாவளியை போல
உனக்கும் எனக்கும்
எத்தனை தீபாவளி
என்பதை
என்றைக்காவது
எண்ணிப்பார்த்தாயா
ஒவ்வொரு தீபாவளிக்கும்
நீயும் நானும்
ஓடித்திரிந்து; நான்
ஒரு கணம் ஒளிந்து
விண்ணைப் பார்த்து
உன்னைப் பார்ப்பேன்
நீ என்னைப் பார்ப்பாய்
ஊர் எம்மைப்பார்த்தது
உறவு நம்மைப்பிரித்தது
முன்பெல்லாம்
தீபாவளி
எப்போது வரும்
என்று ஏங்கித்தவிப்பேன்
இப்போது
அஃது ஏன் வருகிறது
என்று எனக்கே
தெரியவில்லை
நீ இல்லாமல்
நான் எப்படியடா வாழ்வேன்
என்று கெஞ்சிய
அந்தத் தீபாவளி
உனக்கு நினைவிருக்கிறதா?
நீ எனக்கில்லை
என்றான அந்தக் கடைசி
தீபாவளி நினைவுகள் வந்து
என் நெஞ்சில் இப்போதும்
பட்டாசு வெடிக்கும்!
அதன் பின்
நீ வந்து ேபாகிற ஒவ்வொரு
தீபாவளியிலும்
என் மனத்தில்
ஆயிரம் மத்தாப்புகள்
சிரிக்கும்!
அத்தனையும் போச்சு
உன் அத்தை பிரிந்தபோது!
நீ எனக்கு மாமி மகன்
நான் உனக்கு அப்படியா!
ஒரு பக்கம் அத்தை மகள்
மறுபுறம் மாமி மகள்
தீபாவளிக்கும்
பட்டாசுக்கும்
உள்ள நெருக்கம் நமக்குள்!
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்
என்னவென்பதை
நாம் இருவருமே அறிவோம்
யதார்த்தமாய்
இன்று
வேதனையின் விளக்கமாய்
நிற்கின்றேன் நான்!
இந்தத் தீபாவளிக்ேகனும்
நீ வருவாய் என
மனத்திற்குள்
ஒரு மத்தாப்பை
மறைத்து வைத்திருக்கின்றேன்
வா உனக்காக!