சட்டவிரோத ஆயுதங்களைக் கைப்பற்றும் பொலிஸாருக்கும், தகவல் தருபவர்களுக்கும் 3,000 ரூபா முதல் 600,000 ரூபா வரையில் சன்மானம் வழங்குவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஆயுதங்களின் ரகங்களைப் பொருத்து சன்மானம் வழங்கப்படும் தொகை நிர்ணயிக்கப்படும். பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய நாடு முழுவதும் இந்த ‘சட்டவிரோத ஆயுதக் களைவு’ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆயுதங்களைக் கண்டு பிடித்தல், கைப்பற்றுதல், ஆயுதங்களுடன் சந்தேக நபரை
கைது செய்தல் என்பவற்றுக்காக 2019 ஜனவரி 01ஆம் திகதி முதல் 2019 மார்ச் 31 ஆம் திகதிவரை ‘சட்டவிரோத ஆயுதக்களைவு’ காலம் பிரகடனப்படுத்தப்பட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி ‘பொலிஸ் சன்மான’ நிதியத்திலிருந்து இவை வழங்கப்படவுள்ளன. ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் சன்மானம் வழங்கப்படும்.
ரி 56 ரக துப்பாக்கியொன்றுக்குச் சந்தேகநபருடன் கைப்பற்றப்பட்டால் 50,000 ரூபா பொலிஸ் உத்தியோகத்தருக்கு வழங்கப்படும், தகவல் தருபவருக்கு 40,000 ரூபா சன்மானம் வழங்கப்படும்.
சந்தேக நபரின்றி கைப்பற்றப்பட்டால் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10,000 ரூபாவும் தகவல் தருபவருக்கு 5000 ரூபாவும் வழங்கப்படும்.
ரிப்பீட்டர் ரக துப்பாக்கி சந்தேகநபருடன் கைப்பற்றப்பட்டால் பொலிஸ் உத்தியோகத்துக்கு 40,000 ரூபாவும் தகவல் தருபவருக்கு 15,000 ரூபாவும் வழங்கப்படும்.
சந்தேக நபரின்றி கைப்பற்றப்பட்டால் பொலிஸ் உத்தியோகத்தருக்கு10,000 ரூபாவும், தகவல் தருபவருக்கு 5,000 ரூபாவும் வழங்கப்படும்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒற்றைக் குழல் துப்பாக்கி, சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்டால் பொலிஸாருக்கு 20,000ரூபாவும் தகவல் தருபவருக்கு 10,000 ரூபாவும், சந்தேக நபரின்றி கைப்பற்றப்பட்டால் பொலிஸாருக்கு 5,000 ரூபாவும் தகவல்தருபவருக்கு 3,000 ரூபாவும் வழங்கப்படும்.
கைத்துப்பாக்கிக்குப் பொலிஸாருக்கு 30,000 ரூபா, தகவல் தருபவருக்கு 15,000 ரூபா, சந்தேக நபரின்றிப் பொலிஸாருக்கு 10,000 ரூபா, தகவல் தருபவருக்கு 5,000 ரூபா வழங்கப்படும். ரிவேல்வர் ஒன்றுக்கு பொலிஸாருக்கு 20,000 ரூபா தகவல் தருபவருக்கு 10,000 ரூபா சந்தேக நபரின்றி பொலிஸாருக்கு 5,000 ரூபா தகவல் தருபவருக்கு 3,000 ரூபா வழங்கப்படும்.