போதைப்பொருள் கடத்தல் தடுப்புக்கு பிலிப்பைன்ஸ் உதவி | தினகரன் வாரமஞ்சரி

போதைப்பொருள் கடத்தல் தடுப்புக்கு பிலிப்பைன்ஸ் உதவி

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதற்கான தொழிநுட்ப ஆலோசனை சேவைகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் இலங்கை வருகை தரவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான விஜயத்தின் மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமொரு முக்கிய நன்மையாக இந்த உதவி கிடைக்கவுள்ளது.

தனது அரசமுறைப் பயணத்தின் இறுதி நாளான நேற்று (19) முற்பகல் பிலிப்பைன்ஸ் பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி, அதன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது ஜனாதிபதியை பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பொலிஸ் சேவை பிரதானியான Oscar D Albayalde , அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் Catalino S cuy ஆகியோர் வரவேற்றனர்.

பிலிப்பைன்ஸ் அரசாங்கம் முன்னெடுத்துள்ள சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான கண்காட்சி ஒன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பொலிஸ் சேவை பிரதானி உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்த ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பகிரங்க யுத்தம் ஒன்றைத் தற்போது தனது

தலைமையில் இலங்கை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். பூகோள முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இலங்கை முக்கிய பரிமாற்ற மத்திய நிலையமாக இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டவிரோத போதைப்பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதை தடை செய்வதற்கு அனைத்து நட்பு நாடுகளினதும் உதவியை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

சட்டவிரோதமான போதைப்பொருட்களைத் தடுப்பதற்குப் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்டே (Rodrigo Duterte) முன்னெடுத்துள்ள முக்கிய போராட்டத்தைப் பாராட்டிய ஜனாதிபதி, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் இந்த சேவையை மதிக்கும் வகையிலேயே தான் பிலிப்பைன்ஸுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் கடத்தல் உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு முக்கிய சவாலாக இருந்து வருகின்றபோதும் சில அரசியல்வாதிகளும் அதில் தொடர்புபட்டிருப்பதன் காரணமாக அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் உள்ள பாரிய பிரச்சினையாகுமென்றும் தெரிவித்தார்.

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி விபரித்த ஜனாதிபதி, அத்தகைய சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்த சந்தர்ப்பங்களும் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சட்டவிரோதான போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை தான் 45 வருடங்களுக்கு முன்னர் ஓர் அரச சேவையாளராக இருக்கும்போதே ஆரம்பித்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராகவும், பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் அதற்காக முன்னெடுத்த விரிவான நிகழ்ச்சித்திட்டங்களுக்காக உலக சுகாதார தாபனமும் தனக்கு சர்வதேச விருது ஒன்றை வழங்கி கௌரவித்தமை பற்றியும் நினைவுகூர்ந்தார்.

 

 

 

Comments