மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு | தினகரன் வாரமஞ்சரி

மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளிலிருந்து தெரிவு செய்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்காக எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவதாக அகழ்வு பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மனித எச்சங்களின் மாதிரிகளுடன் சட்ட வைத்திய அதிகாரி

சமிந்த ராஜபக்ஷவும் அமெரிக்கா செல்லவுள்ளார். அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச் செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தினூடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

மன்னார் நகர் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு 'கார்பன்' பரிசோதனைக்காக எடுத்துச் செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை இக் குழு அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளனர்.

Comments