முருகனின் அருளைப்பெறும் தைப்பூச விரதம் | தினகரன் வாரமஞ்சரி

முருகனின் அருளைப்பெறும் தைப்பூச விரதம்

நாளை தைப்பூசத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது

முருகப்பெருமானை வழிபடக்கூடிய தினங்களில் தைப்பூசம் விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. தை மாதம் பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி திதி கூடி வரும் நாளை தைப்பூசம் என்று நாம் கொண்டாடுகிறோம்.

முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் சிவபெருமானுக்கும் இந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். சிவபெருமான் சிதம்பரம் திருத்தலத்தில், வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், முனிவர்களுக்கு ஆகியோருக்கு ஆனந்த தரிசனத்தைக் காட்டி அருளிய தினம் தைப்பூசம் என்பதால் சிவனுக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

தைப்பூச விழா மிகவும் தொன்மை வாய்ந்தது. இதனை 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. தைப்பூசத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். 1008 சங்காபிஷேகம், லட்சார்ச்சனை, சாமி வீதி உலா உண்டு. அன்றைய தினம் கிராம தெய்வங்களுக்கும், பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், தைப்பூசம் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இதன் 7-ம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். அப்போது முருகன், வள்ளி - தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் ரத வீதிகளில் தேரில் பவனி வருவார். 10-ம் நாள் தெப்போற்சவம் நடைபெறும். பக்தர்கள் பல பகுதிகளில் இருந்து முரு கனுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடனாக காவடி எடுத்து வருவார்கள். தைப்பூசத் திருவிழா தான் காவடி, அலகு குத்துதல் போன்றவற்றுக்கு சிறந்த தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பால்காவடி, பறவைக் காவடி, தீர்த்தக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்க்கரை காவடி எடுத்து வருவார்கள்.

தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் தைப்பூசம் 11 நாள் விழாவாக கொண்டாடப்படும். சிவபெருமான் திருவிளையாடல்களில் ‘புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை’யும் ஒன்றாகும். இதை நினைவு கூரும் விதத்தில் தைப்பூசத்தன்று பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு உவரி கடற்கரையில் இருந்து சிறிய பெட்டியில் மணலை அள்ளி, அதை தலையில் வைத்து சுமந்து கொண்டு கோவில் அருகில் கொட்டுவார்கள். இவ்வாறு செய்யும் பக்தர்களின் கோரிக்கையை சுவாமி நிறைவேற்றுவதாக ஐதீகம்.

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைமாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதியில் கலந்தார். அந்த நாளிலதெமிழ் நாட்டின் கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப் பூசத்தன்று அதிகாலை ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அன்று மேட்டுக் குப்பத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வள்ளலாரின் விழாவை கொண்டாடுகின்றனர். கடல் கடந்த நாடுகளிலும் தைப்பூசம் திருவிழாவை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோலாலம்பூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள். அன்று கோலாலம்பூரில் மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலைக்கு அதிகாலையில் இருந்து ஊர்வலமாக நடந்து செல்வர். இதற்கு எட்டுமணி நேரம் பிடிக்கும். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் செல்வர். சுங்கைபத்து ஆற்றில் நீராடிவிட்டு மலைக்கோவிலுக்கு படியேறி செல்வர்.

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள தண்ணீர் மலையிலும் விழா கொண்டாடப்படும். சிங்கப்பூரில் முருகன்கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடைபெறும். அன்று தேரோட்டம் நடைபெறும். திரளான பக்தர்கள் அலகுகுத்தி, நேர்த்திக்கடன் செலுத்துவர். தண்ணீர்மலை கோவிலில் தைப்பூச விழா 3 நாட்கள் நடைபெறும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் விமரிசையாக கொண்டாடுவர்.

விரதம் இருப்பது எப்படி?

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து உத்திராட்சம் தரித்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும்.

அன்று உணவு உண்ணாமல் மூன்று வேளையும் பால், பழம் சாப்பிட வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை வணங்கி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். முருகன் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வரலாம்.

தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இன்னல் இழைத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்று அழித்து துன்பத்தை நீக்கினார். இதனால் முக்கோடி தேவர்களும் துன்பம் நீங்கி ஆனந்தம் அடைந்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் வரும்.

கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் வந்தடையும். எந்நாளும் இளமையுடன் இருப்பர். குழந்தைகளுக்கு கல்வி அபிவிருத்தியாகும்.

தொழில் மேன்மை உண்டாகும். தைப் பூசம் அன்று குழந்தை களுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற்காரியங்களை செய்யலாம்.

 

 

Comments