பெண்களுக்கென்று சில வரையறைகளை இந்த உலகம் வைத்திருக்கிறது. அதற்குள்தான் அவள் வாழ்ந்தாக வேண்டும் என்பதை சமூகமாகவும் சமயங்களாகவும் கூடி வரையறுத்துக் கொடுத்திருக்கின்றன. இதற்கமைவாகவே சமய புரந்தகர்கள் தத்தமது கடவுளர்களின் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா சந்தர்ப்பங்களிலும் கல்வியும் சமதள வேலைவாய்ப்பும் இந்த மாயையை உடைத்துப் போட்டுக்கொண்டிருக்கிறது. இதை உடைத்துப் போடும் அதேநேரத்தில் குடும்ப அமைப்பையும் உடைத்துப் போடுகின்ற சந்தர்ப்பம் வாராது போகவில்லை. எது எப்படியாயினும், அவ்வையார் சொன்னாரே ஒரு வார்த்தை.
சற்றேனும் ஏறுமாறாக
நடப்பாளேயாமாகில்
கூறாமல் சந்நியாசங்
கொள் என்று.
அந்த வரையறையை இன்று பெண்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு இக்கால பிள்ளைகள் தமது தந்தையை உயிருடன் இழந்து கொண்டிருக்கிறார்கள். தந்தை என்பது ஒரு உயர்ந்த பாத்திரம் அது குடும்பத் தலைவனுக்கு கிடைத்த கொடுப்பினை தந்தையர்களுக்கு தமது குழந்தைகள் மீது தாளாத பாசம் உண்டு. அது தாய்ப்பாசத்துக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. ஆனாலும் பிள்ளைகள் மீது கண்டிப்பை மட்டுமே அவர்கள் காட்டுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் காரணம் பழைய குப்பை மூடிப்போன சமூக கட்டமைப்புத்தான்.
பிள்ளைகள் மீதும் மனைமீதும் கொண்ட பாசத்தால் அவர்களைப்பிரிந்து வருடக்கணக்கில் வெளிநாடுகளில் நின்று உழைக்கும் ஆண்களை நினைத்துப் பார்த்தால் இது புரியும். தான் அனுபவிக்காத தனக்கு சமைத்துப்போடாத மனைவிக்கும் தான் தூக்கி முத்தமிடமுடியாத தொலைவிலுள்ள குழந்தைக்குமாக அனல் உலைகளின்முன் இந்த பாசத்தை நெருப்பாக கட்டிக் கொண்டு வேலைசெய்யும் ஆண்கள் தாம் எவ்வளவு பெரிய தியாகத்தை செய்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில்லை. அதை தமது குடும்பத்துக்காக செய்வது தமது கடமை என்றே நினைத்து மாதம் தவறாமல் பணத்தை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சின்னவயதுப் பிள்ளையாக இருக்கும் போதே தாய் முழு நாளும் தன் பிள்ளைகளுடன் தொடர்பில் இருக்கிறாள். குறும்பு செய்யும் அதை குழப்படி என்றும் வைத்துக் கொள்ளலாம் பிள்ளைகளை அவள் வார்த்தைகளாலோ, மிரட்டியோ பணிய வைக்க பார்ப்பாள் முடியவில்லையோ,
பொறு அப்பா வரட்டும் உனக்கிருக்கு என்ற சொல்லால் ஸ்தம்பிக்க வைக்கிறாள். ஏன் அவளுக்கே அந்த அப்பாவைக் கண்டால் பயம். பிள்ளைகளை கண்டிப்பது என்றால் ரெண்டு அடி போடுவது அப்பாவின் கடமையாகிறது.
இப்படியான சந்தர்ப்பங்களில் கூட்டுக்குடும்பங்கள் தப்பித்துக் கொள்கின்றன. தந்தைக்கு தாய்க்கும் பிள்ளைகளுக்குமான உறவுகளை விட பாட்டி, பாட்டன் பேரர்களுடைய உறவு இறுக்கமானது. வயது வரும்போது மகனுக்கும் தந்தைக்குமான உறவு விரிசலடைந்து கொண்டு போகும். சம்பாத்தியத்தின் தேவையிலேயே அவன் ஒதுங்கிவிட அதற்குமுன்பே பிள்ளையின் நட்புகள் செயல்கள் தந்தையை பிரித்து நோக்க வைத்துவிடும்.
இதே போல மருமகளுக்கும் மாமிக்கும் எப்படியான பகை உணர்விருக்கும் என்பது உலகப்பிரசித்தம். அனால் அவள் பெற்றுப்போடும் குழந்தைகளுக்கும் பாட்டி அதாவது அந்த மாமிக்கும் நெருக்கம் மிக அதிகமாக இருக்கும். இதனால்தான் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிறப்புறுகிறது. ஏன்னதான் மாமியை பிடிக்காவிட்டாலும் தன் பிள்ளையை அவளிடம் விட்டுவைக்க எந்த மருமகளும் தயங்குவதில்லை.
போர் தின்ற உலகில் இன்றைய உறவுகளின் ஒழுங்கும் குலைந்துவிட்டது. பேரன் பேத்திகளற்ற வாழ்க்கை எந்த முதியவர்களுக்கும் நரகம்தான். அவர்களது இறுதிக்காலத்தில் கடந்தகால வாழ்க்கையை கதையாகச் சொல்லி பதியன் போடவும் தனது பிள்ளைகளின் இளமைக் காலத்தை மீட்டெடுத்து மகிழவும் அவர்களுக்கு பேரன் பேத்திகள் முக்கியம். பேரன் பேத்திகளுக்கும்கூட தமது பாட்டி, பாட்டன் என்ற உறவு இனிமை தருவதுதான் ஆனால் இன்று உள்ள நிலையை போரின் உச்ச கட்டத்திலேயே நாம் பெற்று விட்டோம் பிள்ளைகளை பராமரிக்க வேண்டிய அவசரத்தில் பெற்றோரை தெருக்களில் விட்டுவிட்டு தமது உயிரைக்காத்துக் கொள்ள ஓடிய பிள்ளைகளே அதிகம். ஒரு வீட்டில் செல்விழுந்து அதன் அயலெல்லாம் கருகிவிட குளியலறைக்குள் பதுங்கி எண்பது வயதுப்பாட்டி தப்பியிருந்தாள். அவளது மகனும் மனைவியும் அங்கில்லை கேட்டபோது அந்தப்பாட்டி சொன்னாள்.
பிள்ளை என்னேயிற மருமேள் பயப்பிடுறா அவாவை கூட்டிக்கொண்டு போட்டான். பாட்டியை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பொறுப்பெடுத்தது. இப்படியே முதியவர்கள் கைவிடப்படப்பட அந்த நிறுவனம் அவர்களைக் கைகொடுத்து கொண்டு வந்து வைத்தியசாலைகளின் அருகிலேயே தங்கவைத்தது. விளைவு ஒரு கிணறு போல தோண்டப்பட்டிருந்த அந்த குழியிலேயே செல்விழுந்து பலர் உயிரிழந்தனர். பிள்ளைகள் என்ன செய்ய முடியும். தகவல்களே கிடைக்காமல் அவர்கள் தமது இளையவர்களை காக்க ஓடினர். அப்படியும் காத்தவர்கள் இன்று தனிமைச்சிறையில்தான் வாடுகிறார்கள். குடும்பங்கள் பெரிதும் சிதைந்து கொட்டுப்பட்டுக்கிடக்கிறது.
நன்றாக வாழ்பவர்கள் கூட தமது சொந்த கௌரவம் உரிமை விடுதலை என்று கூறிக் கொண்டு தனித்து வாழத்தலைப்பட்டுள்ளனர். இதைவிட மோசமான சமூக உடைவு வேறென்ன இருக்கிறது. எந்த தந்தையும் தன் குழந்தையை வைத்து வளர்க்க முன்வருவதில்லை அதற்கு பேரன் பேத்திகளே வேண்டும். ஆனால் தாய் தன் பிள்ளைகளை தனித்து பொறுப்பேற்று வளர்க்கிறாள்.
ஆயிரந்தான் இருக்கட்டுமே அம்மா போதுமா? அங்கே இங்கே கூட்டிப்போக அப்பா ஆகுமா? என்ற பாடல் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கும் அந்தப் பிள்ளைகளுக்கு. யாருக்கு விடுதலை? யாருடைய சுதந்திரம்? யாருடைய உரிமை பறிக்கப்படுகிறது.