பலாங்கொடை நகரசபை எல்லைக்குள் அமைந்திருக்கும் சிறிய தனியார்துறை தோட்டமே வேவாவத்தை (வேவத்த) தோட்டம். இது நீண்டகால வரலாற்றுப் பதிவினைக் கொண்டது. ஆரம்பக் காலங்களில் நியாயமான நிர்வாகத்தைக் கொண்டிருந்தது. குறிப்பாக 50 வருடங்களுக்கு முன் (1969 களில்) அப்போதைய பிரதம நீதியரசர் என். சின்னத்தம்பி மற்றும் அவரது பிள்ளைகள் காலத்தில் மிகவும் நேர்த்தியான பராமரிப்பு காணப்பட்டமை நினைவுகூரத்தக்கது.
இக்கால கட்டத்தில் தொழிலாளர்களின் தொழிசார் உரிமைகள், நலன்புரி நடவடிக்கைகள் பெரிதும் பேணப்பட்டன. கொடுப்பனவுகள் உரிய காலத்தில் வழங்கப்பட்டன. இதனால் தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் அந்நியோன்யம் நிலவியது. கட்டுக் கோப்பான முகாமைத்துவத்தால் கணிசமான இலாபமும் கிடைத்தது. இதன் பின்னர் இத்தோட்டத்தை (1996- _ 1997) முறையே பாட்லீட் கம்பனியும் மானப்பெரும கம்பனியும் பொறுப்பேற்றன. முன்னைய நிர்வாக நேர்த்தி குறைவடைந்து போனாலும் ஓரளவு ஒழுங்கமைப்பு கட்டிக் காக்கப்பட்டது. ஆனால் 1998 களில் ஒரு உள்ளூர் தனவந்தர் தோட்டத்தினை விலைக்கு வாங்கிய பின்னர் படிப்படியாக தோட்டக்கட்டமைப்பு சிதறத் தொடங்கியது.
விளைச்சல் நிலங்கள் துண்டாடப்பட்டு விலையாகிப் போயின. இதனால் இத்தோட்டத்தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்த மக்கள் வேலை வாய்ப்புகளை இழக்க வேண்டி நேர்ந்தது. இத்தோட்டத்தோடு இணைந்திருந்த போம்புவ, நல்லுவெல, தும்பக்கொட தேயிலை மலைப் பிரிவுகள் கூறுபோடப்பட்டு விற்பனைக்குள்ளாயின. இதனால் மக்களின் இடப் பெயர்வுகளும் நடந்தன. வாழ்வாதாரத்தைத் தாங்கி நின்ற விவசாய காணிகளும் மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டன. தவிர, வீட்டுத் தோட்டங்கள் செய்ய முடியாதவாறு காணிகளைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டன.
ஆரம்பத்தில் உதவி தொழில் ஆணையாளருடன் ஒப்பந்தமொன்று செய்து கொள்ளப்பட்டது. இதற்கமைய 12 ஏக்கர் என்று அழைக்கப்பட்ட காணி மாத்திரமே விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் இதற்கு மேலதிகமாகவும் பல ஏக்கர் தேயிலைக் காணிகள் விற்கப்பட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டுன்றனர். எஞ்சிய பகுதிகள் உரிய பராமரிப்பின்றி காடுகளாக மாறிப்போயுள்ளன. பாம்பு பன்றிகளின் வாழ்விடமாக தேயிலை மலைகள் நிலைகுலைய, பெண்கள் கொழுந்து பறிக்கப் போகவே பயப்படும் சூழல் காணப்படுகின்றது.
இவ்வாறான பின்புலத்திலேயே காணிகள் துண்டாடப்படும் துயரம் மெல்ல மெல்ல அரங்கேறி வருகின்றது என்று கவலை தெரிவிக்கின்றார்கள் பாதிக்கப்படும் தோட்ட மக்கள். நகரை அண்மித்ததும் பிரதான போக்குவரத்து பாதையை ஒட்டியதுமாக இத்தோட்டம் அமைந்திருப்பதால் காணிகள் துண்டாடப்பட்டு அதிக விலைக்கு விற்கக் கூடியதாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. விற்பனைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் காணியில் காணப்படும் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அக்குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். 2014 ஆம் ஆண்டளவில் 75 அடி நீளமான வடிகால் அமைப்பும் பிள்ளைகள் காப்பகம் ஒன்றும் அப்போதைய பலாங்கொடை நகரசபையால் நிர்மாணித்துத் தரப்பட்டது. பொதுவாக பெருந்தோட்ட இளைஞர்கள் தேயிலைத் தோட்டத் தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. பெற்றோர் மட்டுமே இங்கு தொழில் புரிந்து வருகின்றார்கள்.
இவர்களுக்குச் சொந்தமாக வீடோ காணியோ இல்லை. இதனால் ஓய்வூதியம் பெற்ற பின்னரும் இவர்கள் இங்கேயே வாழ வேண்டுமாயின் தோட்டத்தில் கட்டாயம் தொழில்புரிய வேண்டுமென நிர்வாகம் வற்புறுத்துவதாக ஓய்வுநிலைத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். சில இளைஞர்கள் குடியிருப்புக்காக வேலை செய்ய விரும்பி வேலை கேட்டு நிர்வாகத்திடம் போனாலும் வேலை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது. தவிர தோட்டத்தை விட்டு வெளியேறி வெளியில் தங்கிக் கொண்டு இங்கு வேலை செய்ய ஆலோசனை வழங்கப்படுகிறதாம். சிலரை வலுக்கட்டாயமாக வேலையிலிருந்து நிறுத்தி வெளியேற வற்புறுத்துகிறார்களாம். அப்படி இணங்க மறுக்கும் பட்சத்தில் இணக்கச் சபைகளுக்கும் நீதி மன்றங்களுக்கும் அலைக் கழிக்கப்படுவதாகவும் மக்கள் விசனப்படுகின்றார்கள். இரண்டு மூன்று தலை முறைகளாக இக்குடியிருப்புகளில் வாழ்ந்து பணிபுரிந்து வரும் மக்கள் இவர்கள். ஆனால் தேயிலைக் காணிகள் விற்கப்படுவதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தவிர இவர்கள் தாம் வாழும் குடியிருப்புகளைத் திருத்தியும் தமது சொந்தச் செலவில் பெருப்பித்தும் உள்ளார்கள். வாக்குப்பதிவு, கிராமசேவகர் பதிவு, பிள்ளைகளின் கல்வி நிலைமை, சமுர்த்தி கொடுப்பனவுக்கான பதிவுகள் எல்லாமே இத்தோட்டத்தை மையமாக வைத்தே செய்யப்பட்டுள்ளது. இதனால் திடீரென ஓர் இடப் பெயர்வையோ முகவரிக்கான பதிவையோ மேற்கொள்ளக்கூடிய நிலையில் இம்மக்கள் இல்லை. வீட்டுக்கு ஒருவர் தானும் தோட்டத்தில் வேலை செய்யாவிடில் தங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று தோட்ட நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளமையால் தாம் குழம்பிப் போயிருப்பதாக இம்மக்கள் கூறுகின்றனர்.
இதே நேரம் தோட்ட நிர்வாகத்துடன் இவ்விடயத்தில் முரண்படுவோர் மீது சட்ட நடவடிக்கையில் இறங்கவும் நட்டஈடு கோரி வழக்குப் பதிவு செய்யவும் நிர்வாகம் முனைவதாகவும் கூறப்படுகின்றது. தோட்ட மக்களின் வாழ்விட உரிமை, காணி உரிமை, தொழில், பாதுகாப்பு, வாழ்வாதார அதிகரிப்பு கேட்டு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. நடைபெற்றும் வருகின்றன. இவற்றுள் 7 பேர்ச் காணி, தனி வீடு, மலையகத்துக்கான அதிகாரசபை, பிரதேச சபை சட்ட திருத்தம் போன்றவை சாத்தியமாகி வருகின்றன. இவ்வாறான நிலையில்தான் இத்தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்துக்கு நட்டஈடு செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு சில தொழிலாளர் குடும்பத்திடம் தோட்ட நிர்வாகம் நட்டஈடு கோரியதை அடுத்து வேறு வழியின்றி அக்குடும்பங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வீட்டையும் தோட்டத்தையும் விட்டு வெளியேறியதாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறான ஒரு நெருக்கடிக்கு இங்கு எஞ்சியுள்ள சுமார் 150 பேரையும் தள்ளி அப்புறப்படுத்தப்படலாம் என்று இம்மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சில அரசியல்வாதிகள் இது தனியார் தோட்டம் என்பதால் தம்மால் தலையிட முடியாது என்று கைவிரித்துவிட்டதாகவும் தெரிகின்றது. எனினும் கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு இப்பிரச்சினை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து பிரதேச செயலாளருடன் இத்தோட்ட மக்களின் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதில் தோட்ட மக்கள் தமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கிக் கூறியிருந்தனர். எனினும் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்று இதுவரை கிடைக்கவில்லை என்கின்றனர் தோட்ட மக்கள்.
பிந்திய தகவல்களின்படி தோட்டத் தொழிலாளர்களை வளைத்துப் போட்டுக் கொண்டு கொடுப்பனவுகளை துரிதமாக பெற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் தாமாகவே வெளியேறத் தூண்ட முயற்சிப்பதாகவும் தெரியவருகின்றது. ஏறக்குறைய மூன்று தலைமுறைகள் வியர்வை சிந்தி உழைத்த இடத்தில் இருந்து இவர்களை வெளியேற்ற பல உத்திகள் பயன்படுத்துவது குறித்து பலரும் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
வாக்குகளுக்காக மட்டும் இவர்களை வாஞ்சையோடு நாடும் மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புகள் இது குறித்துக் கவனம் செலுத்தாததையிட்டு இத்தோட்ட மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள். மாற்றத்துக்கு உள்ளாகிவரும் மலையக சமூக கட்டமைப்பு, இளைஞர்களின் சமகால சிந்தனைப் போக்குக்கு இத்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை சவாலாக மாறும் அபாயம் உள்ளது. மலையக அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா.தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இம்மக்களின் இக்கட்டான நிலை குறித்து அவதானம் செலுத்தி சமரசத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்று இத்தோட்ட மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள். அத்துடன் மக்கள் தொழிற்சங்க தலைவர் சட்டத்தரணி இ.தம்பையாவின் சட்ட ஆலோசனையை வரவேற்பதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
இதே நேரம் தோட்ட நிர்வாகமும் அதிரடியாய் முடிவெடுக்காமல் மனிதாபிமான ரீதியில் இத்தோட்ட மக்களின் இக்கட்டான நிலையை அணுகி இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்களா என்பதற்கு விடை கிடைத்தே ஆகவேண்டும்.