விடுதலைப் புலிகள் மீண்டும் வந்துதான் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமா? | தினகரன் வாரமஞ்சரி

விடுதலைப் புலிகள் மீண்டும் வந்துதான் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமா?

  • அனைத்து பகுதியிலும் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்தால்தான் தமிழ்த் தேசிய இனம் உருவாகும்

பாரபட்சங்கள், தள்ளிவைப்புகள் எல்லாம் புலிகள் காலத்தில் இருக்கவில்லை. இன்று சமாதானம் வந்திருக்கின்றது என்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாக கூறுகின்றார்கள். ஆனால் அன்று இருந்த சமத்துவம் காணாமல் போய்விட்டது. அப்படியானால் புலிகள் மீண்டும் வந்துதான் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமா? என்று கேட்க விரும்புகின்றேன் என்று தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றையதினம் நடைபெற்ற ‘அகதேசிய முற்போக்கு கழக’த்தின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை, தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்களோடு இணைந்து 19 இனக்குழுக்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், அது அதிகாரபூர்வமாக அறிவிக்கபடவில்லை. சிங்களவர்கள் 75 வீதம் இருக்கலாம் அல்லது 99 வீதமாக இருக்கலாம் ஆனால்

அது 100 வீதமாக மாறமுடியாது. 75 உடன் 25 இணைந்தால் தான் 100 வீதமாகமுடியும். அது தான் இலங்கை நாடாக இருக்கமுடியும். இதனை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இலங்கையின் அனைத்து பகுதியிலும் வசிக்கும் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால் தான் ஈழத்தமிழர்கள் என்ற உண்மையான தமிழ் தேசிய இனம் உருவாகும். அதன்மூலமே எமது அடையாளத்தையும் இருப்பையும் நாங்கள் அறிவிக்க முடியும். தமிழ்பேசும் மக்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களிடம் சமத்துவம் வேண்டும் என்று காது கிழிய கத்துகிறோமே, அதே அளவு சமத்துவத்தை எங்களுக்குள்ளேயே நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

எங்களுக்குள்ளேயே நாம் எம்மை தாழ்த்தி வைத்து கொண்டிருப்போமானால் பெரும்பான்மையான சிங்கள மக்களிடம் சம உரிமையை தாருங்கள் என்று கேட்பதற்கான தார்மீக உரிமையை நாம் இழக்கின்றோம். எனவே, எம்மை நாம் திருத்தி கொள்ளவேண்டும். இன்று இருக்கின்ற பாரபட்சங்கள், தள்ளிவைப்புகள் எல்லாம் புலிகள் காலத்தில் இருக்கவில்லை. இன்று சமாதானம் வந்திருக்கின்றது என்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாக கூறுகின்றார்கள். ஆனால் அன்று இருந்த சமத்துவம் காணமால் போய்விட்டது. அப்படியானால் புலிகள் மீண்டும் வந்துதான் சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா? என்று கேட்க விரும்புகின்றேன். எனினும் புலிகளின் பெயரைக்கூறி அரசியல் செய்யும் பலர் கூட மலையக மக்கள் மீது பாரபட்சம் காட்டும் செயற்பாடுகள் இன்றும் நடைபெற்றே வருகின்றது. எனவே, இன்று உருவாகியுள்ள அமைப்பு பிரதேசவாதத்தை தூண்டும் ஓர் அமைப்பாக இருக்ககூடாது. மாறாக நாங்களும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். என்ற அடையாளத்தை தெரியப்படுத்த வேண்டும். ஒன்றாக இருந்தாலே நாம் விடுதலையை பெறமுடியும்.

Comments