காலம் இன்னும் கடந்துவிடவில்லை | தினகரன் வாரமஞ்சரி

காலம் இன்னும் கடந்துவிடவில்லை

கல்முனைதான் இப்போது பேசுபொருள். இரு சமூகங்களின் ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்களால் பதற்ற நிலை தொடர்ந்தும் நீடிக்கிறது.  

பிரதேச செயலகமொன்றை தரமுயர்த்தக் கோரி தமிழர்களும், அதற்கு எதிரான நிலைப்பாட்டில் முஸ்லிம்களும் தொடர் போராட்டங்களில் குதித்திருக்கின்றனர்.  

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தனி அதிகாரமுள்ள சபையாக மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை இன்று நேற்றல்ல, கடந்த 30ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்சினை.  

எல்லைகளை மீள்நிர்ணயம் செய்துவிட்டே வடக்கு பிரதேச செயலகத்துக்கு அதிகாரம் வழங்கவேண்டுமென்பது முஸ்லிம் தரப்பு வாதமாகும்.  

இரு சமூகங்களும் பேசித் தீர்க்க வேண்டிய விடயம் இது.  

பேசினோம் என்கிறார்கள். முடிவுகண்டதாக இல்லை. ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்த்தனால் இந்த நிலைமை ஏற்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.  

இரு சமூகங்களின் தலைமைகளின் அலட்சியமும் விடயத்தைப் பொருட்படுத்ததாக தன்மையும் இன்றைய நிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறதென்பது வெட்கித் தலைகுனியும் விடயம்.  

இரு சமூகங்களும் மேசையிலிருந்து எதிரும் புதிருமாக பேசவேண்டிய விடயமொன்று சந்தி சிரிக்குமளவுக்கு சென்றிருக்கிறதென்பது பெரும் வேதனைக்குரியது.  

நடந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு எதுவும் எட்டப்படாமல் விட்டிருக்கலாம்; காரசாரம் ஏற்பட்டிருக்கலாம்; முரண்பாடான கருத்துக்களும் வந்திருக்கலாம்; அதற்காக, சகலவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு இருதரப்பும் முகம் பார்க்காமல் திரிந்ததன் விளைவைத் தான் இப்போது அறுவடையாகப் பெறுகின்றனரென்பதை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.  

உண்மையில், கல்முனை வடக்கு, பிரதேச செயலக பிரச்சினை என்பது. தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினையல்ல. நிர்வாக ரீதியில் அரசு முறையாகக் கையாண்டிருக்க வேண்டிய பிரச்சினை.  

ஆரம்பத்தில் தமிழ்ப் பிரதேச செயலக விவகாரமாகவே இந்தப் பிரச்சினை பார்க்கப்பட்டது. ஓர் அரச நிர்வாக அலகு என்பது இனரீதியாக இருக்க முடியாது. அது ஏற்புயடையதுமல்ல. என்றாலும், இப்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவாகக் கோரப்படும் பகுதிக்குள் முஸ்லிம்கள், சிங்களவர்கள், தமிழர்கள் அடங்குகிறார்கள் என்பது தமிழர் தரப்பு வாதமாக இருக்கிறது. அதேபோல, இந்தப் பிரதேச செயலகப் பிரிவுக்குள் தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்றும் தமிழ்த்தரப்பு கூறுகிறது.  

எதுவென்றாலும், இரு சமூகங்களுந்தான் இதற்குத் தீர்வுகாண வேண்டும்.  

கடந்த காலங்களைப் பேசிப் பேசி கசப்புணர்வுகளை உமிழ்ந்து கொள்கிறீர்களேயொழிய, உளப்பூர்வமாக பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமென இருதரப்பும் களமிறங்கியதாகத் தெரியவில்லை.  

பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தால், தமிழர்கள் அதைக் கேட்பார்கள் இதைக்கேட்பார்கள் என்ற அச்சமும் சந்தேகமும் முஸ்லிம் தரப்புக்கு ஏற்பட்டிருக்கலாம்.  

அதேபோல, பேச்சுவார்த்தையில் நாம் கேட்பதைத் தரவா போகிறார்கள் என்ற சலிப்பும், அவநம்பிக்கையும் தமிழர் தரப்புக்கும் ஏற்பட்டிருக்கலாம்.  

இப்படியே காலம் கடத்தப்பட்டிருக்கிறது. பிரதேச அரசியல்வாதிகளும் சுயஇலாபம் பெறுவோரும், ஏன் இனவாதிகளும் இதனைச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறார்களென்பது களநிலை நமக்கு கோடிட்டுக் காட்டுகிறது.

காலத்துக்குக்காலம் தமிழர் தரப்பு கோஷம் எழுப்புவதும், அதற்கு முஸ்லிம்கள் தரப்பில் பதில் வழங்குவதுந்தான். கடந்த காலங்களில் நடந்து வந்திருக்கிறதேயொழிய, ஆக்கபூர்வமான எந்தச் செயற்பாடுகளிலும் எவரும் ஈடுபடவில்லையென்பதை கவலைக்குரிய விடயமாகவே நாம் இங்கு பதிவிடுகிறோம்.  

இத்தகைய கவலையீனங்கள் பலவீனமாகப் பார்க்கப்பட்டதன் விளைவே இன்று இரு சமூகங்களின் இனமுறுகலாக உருவெடுத்திருக்கிறது.  

இரு சமூகங்களும் மோதிக் கொண்டு நிம்மதியாக வாழமுடியாது. “வணக்கம்”, “அஸ்லாமுஅலைக்கும்” – இரண்டும் இரு சமூகங்களின் இதய நாதங்கள். ஒருவரையொருவர் பார்த்து உள்ளத்திலிருந்து இதனைச் சொல்லவேண்டும் இரு சமூகங்களின் பிணைப்புக்களும் ஒற்றுமையும் உளப்பூர்வமாக இருக்க வேண்டும். நம் கிழக்கு மொழியில் சொல்லப்போனால் பம்பாத்தும், பாசாங்கும் எப்போதும் நம் மத்தியில் ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்தவே மாட்டாது.  

காலம் காலமாக, ஒற்றுமைக்கு கிழக்கு மாகாணத்தைத்தான் நம்மவர்கள் உதாரணமாகக் காட்டுவார்கள். முஸ்லிம்களும் தமிழர்களும் “பிட்டும் தேங்காய்ப் பூவும் போல ஒற்றுமையாக வாழ்கிறார்கள்” என்பதே மகிழ்ச்சியான செய்தி.  

இந்த உதாரணம் பொய்த்து விடுமோ, என்ற ஐயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. பிட்டுக்குழலினுள் போடப்படும் தேங்காய்ப் பூ ஒற்றுமைக்கா? அல்லது, பிரிப்பதற்கா? என்ற சந்தேகம் இப்போது எம்மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.  

பிரதேச செயலகப் பிரச்சினை என்பது நாடு பிரிக்கும் பிரச்சினையா? இதுவொரு நிர்வாகப் பிரச்சினை மாத்திரமே. எல்லை நிர்ணயந்தான் ஒரு சிக்கல் என்றாலும், அதையும் ஏன் தலைமேல் சுமந்து வீண் சச்சரவாக்கிக் கொள்கிறீர்கள்; எல்லை நிர்ணயம் என்பது எல்லைச் சுவர் எழுப்பி வேலிபோடுவதல்ல.  

எல்லை நிர்ணயம் என்பதை ‘பேர்லின்’ சுவர்களாகப் பார்க்காதீர்கள். இதனைப் புரிந்து கொள்ள முடியாமல் போனதால்தான் கல்முனையில் சிலர் இனவாத அரசியல் செய்து உயிர்வாழ்கிறார்கள். வடக்குப் பிரதேச செயலகத்துக்கு அதிகாரம் கொடுத்தாலும் எவருக்கும் தங்களது பொக்கட்டுக்கள் நிறையப் போவதில்லை. ஒரு பிரதேச செயலகம் உருவாகுவதால் அந்தப் பிரதேசத்துக்கு அரசின் நிதி ஒதுக்கீடுகளும் சலுகைகளும் அதிகரிக்குமே தவிர, எந்தவொரு இனமும் பாதிக்கப்படாது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.  

இன்னுமொரு தவறான சிந்தனையும் அப்பாவி மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டிருக்கிறது. கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது ஒரு விஷமப் பிரசாரம். எந்தவொரு பிரதேச செயலகத்தின் கீழும் இனங்கள் புறக்கணிக்கப்படும் என்பது தவறு.  

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் தமிழர்களும் இருப்பார்கள். சகோதர முஸ்லிம்களும் இருப்பார்கள். அதேபோல் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழும் தமிழர்களும் இருப்பர், முஸ்லிம்களும் இருப்பர். வேண்டுமென்றால் இரண்டு பிரதேச செயலகங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் பிரதேசங்களில் வாழும் இரு சமூகங்களின் விகிதாசாரங்கள் கூடலாம் அல்லது குறையலாம். இதனைத்தான் பிரச்சினையாகக் காட்டி சமூகங்களை சீரழிக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளார்கள்.  

இரு சமூகங்களுக்கும் பொதுவாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். வீண் சந்தேகங்களைக் கைவிடுங்கள். அரசியல்வாதிகளின் பூச்சாண்டித்தனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். சுயமாகச் சிந்தித்து இரு சமூகங்களும் மனம் திறந்து பேசுங்கள். பழைய குரோதங்கள்; தனிப்பட்ட முரண்பாடுகள் இருந்தாலும் மாற்றுக் கண்கொண்டு பார்க்காமல் இதய சுத்தியோடு பேசுங்கள், இதன் மூலம் கிடைக்கும் பெறுபேறு தான் இரு சமூகங்களின் வெற்றிக்கனியென்பதை மனதில் நிறுத்திச் செயற்படுங்கள்.  

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றுமுன்தினம் சபையில் உரையாற்றும் போது இரு சமூகங்களிடமும் உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.  

“ஏட்டிக்குப் போட்டியான அறவழிப் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சு மூலம் தீர்வுகாண முன்வாருங்கள்” என அவர் விடுத்துள்ள அறிவிப்பு அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.  

“போராட்டங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீருங்கள். 100அடி தூரத்திலிருந்து கொண்டு இவ்விரு சமூகங்களும் தத்தமது நியாயங்களை எடுத்துரைக்கும் நிலையைப் பார்க்கும் போது வேதனையளிக்கிறது” பொறுப்புள்ள ஒரு தலைமையின் ஆதங்கத்தை இந்த உரை வெளிப்படுத்துகிறது.  

இந்த வேளையில், ஒரு மகிழ்ச்சியான தகவலும் நம் காதுகளுக்கு எட்டியது. சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்து சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, உண்ணாவிரதப் போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். ஸ்தலத்துக்கு வருகை தந்த வணக்கத்திற்குரிய ஞானசார தேரர் நீராகாரம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளாரென்பது பிந்திய தகவல்.  

எதுவென்றாலும்; பேச்சுவார்த்தை நடத்தாமல் எந்தவொரு தீர்வையும் எட்டமுடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைமையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்பட்டதாகத் தெரியவில்லை. சம்பந்தன் ஐயாவும், மு.கா தலைவர் ஹக்கீமும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்த்திருக்க வேண்டியவிடயம் இது.  

அல்லது, அம்பாறை மாவட்ட எம்.பிக்களான ஹரீஸும், கோடீஸ்வரனும் சுமுகமாகப்பேசித் தீர்த்திருக்க வேண்டிய விடயம்.  

என்றாலும், இன்னும் காலம் கடந்து விடவில்லை. பகைமறந்து பேசுங்கள். இதன் மூலந்தான் நமக்கு விடிவு கிட்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். விட்டுக்கொடுப்புடன் எடுக்கப்படும் எந்தவொரு தீர்வும் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும். நம்பிக்கையை முன்னிறுத்தி பேசுங்கள் வெற்றி நிச்சயம்.   

Comments