துக்கத்தில் அனுதினமும் தூக்கமின்றி நானிங்கே – நீ
பக்கத்தில் இருப்பதாய் பரிதவித்து பாவியானேன்
முற்றத்தில் முழு நிலா முகம் காட்டி நிற்க – நீ
மூன்றாம் பிறைபோல் நிழல் காட்டி நிற்கலாமா?
காலத்தால் அழியாத காதலோடு நானிங்கே – நீ
கண்டும் காணாதது போல் காற்றாய் இருப்பதேனோ
கணவன் மனைவியாய் வாழ கனவு காண்கிறேன்- நீ
கலைந்து போகும் மேகமாய் ஏனோ?
பித்தாகி பேதலித்து நிற்கின்றேனே நானிங்கே – நீ
பிடிக்கவில்லை என்று ஒதுங்கவா பார்க்கிறயா
விட்டு விடவா முடியும் உன் அன்பை – நீ
விரைந்து வா என்னைத் தேடி அன்பே!
வாழ்ந்து காட்டுவோம் தம்பதியாய் பாரினிலே – நீ
வண்ணத்து பூச்சியாய் என் நெஞ்சத்தின் மஞ்சத்தில்
சூழ்ந்து நிற்கின்றோர் என்னதான் எதிர்த்தாலும் – நீ
சுகம் பெற்று வாழ நான் உத்தரவாதம்
பசறையூர் ஏ.எஸ். பாலச்சந்திரன்