இலங்கையில் தமிழர்களுக்கெதிரான கறுப்பு ஜூலை கட்டவிழ்த்துவிடப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதியுடன் 36வருடங்கள் பூர்த்தியாகின்றன. வழமைபோலவே இந்த ஆண்டிலும் ஆடிக்கலவரத்தை நினைக்க வேண்டியிருக்கிறது. வலிந்து மறந்துவிடலாம் என்றாலும், நாட்டின் அரசியல் செல்நெறி அதற்கு இடங்கொடுப்பதாய் இல்லை.
வரலாற்றை மறந்துவிட்டு நிகழ்காலத்தை செழுமைப்படுத்த முடியாது என்பார்கள். அதற்காக கறைபடிந்த வரலாற்றைச் சதா நினைத்துக்ெகாண்டிருக்கவும் முடியாது. எப்போதும் இன்பமான முன்னேற்றத்தைப் பற்றியே கனவுகாண வேண்டும் என்கிறார் கலாநிதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இருப்பினும் சில வரலாறுகளை மறப்பதும் நினைப்பதும் அது கற்றுத்தந்த பாடத்தைப் பொறுத்தது!
அந்த வகையில் எண்பத்து மூன்று கறுப்பு ஜூலையைப் பொறுத்தவரை, தமிழ் மக்களால் இலகுவில் மறக்கக் கூடிய சம்பவமல்ல; அது சரித்திரம்! அந்தளவிற்குக் கறுப்பு ஜூலையின் கோர வடுக்கள் தமிழ் மக்கள் மனங்களில் படிந்துவிட்டுள்ளன. கட்டுரையாளரும் அதற்கு விதிவிலக்கன்று!
பதின் மூன்று இராணுவத்தினர் படுகொலைசெய்யப்பட்டு சிங்கள மக்களின் ஆவேசத்தைக் கிளப்பியதனால், ஏற்பட்ட ஓர் இனக்கலவரமாகச் சிலர் அதனை நோக்குகின்றனர். உண்மையிலேயே, அரசியல் ரீதியாகத் திட்டமிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இன ஒடுக்குமுறையின், இன அழிப்பு நடவடிக்கையின் மிக மோசமான ஆரம்ப நிகழ்வாக அது வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது என்பது தமிழ் மக்களின் கருத்தாக உள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் பேரினவாதிகளினதும், பேரின ஆட்சியாளர்களினதும் ஆசிர்வாதத்துடன் வளர்ச்சிப் போக்கில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போக்கில், அடுத்த கட்டமாகவே, 1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன என்பதை ஊன்றிக் கவனிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பகுப்பாய்வில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே வித்தியாசமான கருத்தியல் நிலவுவதை மறுக்க முடியாது.
ஆனால், சிங்கள மக்கள் மத்தியில் அது, திடீர் ஆவேசத்தினால் ஏற்பட்ட ஒரு மன எழுச்சி சார்ந்த நிகழ்வாக மாறிப்போயுள்ளது. மறக்கப்பட்டுவிட்டது என்றுகூடச் சொல்லலாம். தமிழ் மக்களுக்கு எதிராக காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட இனவன்முறைத் தாக்குதல்களின் உள்நோக்கத்தை, அவற்றில் மறைந்துள்ள இனவாத ஒடுக்குமுறை அரசியலின் தாற்பரியத்தை தமிழ்த் தரப்பினரில் சிலர் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்றே சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே, கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவத்தை, திடீர் ஆவேச மன எழுச்சிக்கு உள்ளாகி செயற்படுவதை இயல்பாகக் கொண்ட சிங்கள மக்களின் உணர்ச்சி வசப்பட்ட ஓர் எதிர்வினைச் செயல் என்கிறார்கள் அவர்கள்.
அந்த வகையில், 83 கறுப்பு ஜூலை வன்முறைகளை மீண்டும் மீண்டும் நினைவுகூர்வதும், அதுபற்றிச் சிந்திப்பதும், நாட்டின் நல்லிணக்கத்திற்கும், இன ஐக்கியத்திற்கும் பாதகமாகவே அமையும் என்றும் அவர்கள் சித்தரிக்கவும் முற்படுகின்றார்கள். இருந்தபோதிலும், அந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டு, அது தமிழ் மக்களின் மனத்திலிருந்து முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டுமானால், அதனைக் கிளறிச் சரியாக மருந்திட வேண்டும் என்பது முற்போக்காகச் சிந்திப்போரின் கருத்தாக உள்ளது.
பலாலி இராணுவத் தளத்தில் இருந்து, யாழ்ப்பாணம் நகரத்தை நோக்கிச் சென்ற இராணுவ வாகனத் தொடரணி ஒன்றை திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் பதுங்கியிருந்த விடுதலைப்புலிகளின் அணியொன்று தாக்கியதில், 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதில் இலகுக் காலாட்படையைச் சேர்ந்த லெப்டினன் தர இராணுவ அதிகாரியாகிய வாஸ் குணவர்தன அவர்களுள் முக்கியமானவர்.இந்தச் சம்பவம் 1983 ஜூலை மாதம் 23 ஆம் திகதி இரவு 11.30 அளவில் இடம்பெற்றது.
நள்ளிரவு நேரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் சிங்களவர்கள் கொல்லப்பட்டதாகப் பெரிதுபடுத்தப்பட்ட அளவில் நாட்டின் தென்பகுதி எங்கும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது.
அக்காலப்பகுதியில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமான தாக்குதல்களே இராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், திருநெல்வேலிச் சந்தியில் இடம்பெற்ற தாக்குதலிலேயே 13 இராணுவத்தினர் ஒரே தடவையில் கொல்லப்பட்டிருந்தனர். தாக்குதல்களில் கொல்லப்பட்ட படையினருடைய உடல்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவதே வழக்கம். ஆனால், தேசிய பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு அமைய அந்த நடைமுறை அப்போது கடைப்பிடிக்கப்படவில்லை. இதனையடுத்து, விடுதலைப்புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த 13 இராணுவத்தினரது உடல்களுக்கும் வழமைக்கு மாறாக ஒரே இடமாக, பொரளை மயானத்தில் இறுதிக்கிரியைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த உடல்கள் அங்கு வந்து சேரவில்லை. இதனால், அந்த இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக அங்கு 24 ஆம் திகதி காலை முதல் கூடத் தொடங்கி பதற்றத்திற்குள்ளான சிங்கள மக்கள் மத்தியிலேயே விடுதலைப்புலிகள் பற்றிய அச்சந்தரும் வகையிலான பொய்ப்பிரசாரம் செய்யப்பட்டிருந்தது. அந்த மக்களின் பதற்ற உணர்வும் விடுதலைப்புலிகள் தாக்க வந்துவிட்டார்கள் என்ற அச்ச உணர்வும் அவர்களை ஆத்திரமடையச் செய்ததுடன், தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்குத் தூண்டிவிட்டிருந்தது.
கொழும்பில் மட்டுமல்லாமல், கண்டி உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் மலையகம் உட்பட தமிழர்கள் கலந்து வாழ்ந்த தென்பகுதி மாவட்டங்களிலும் பரவலாக வன்முறைகள் வெடித்திருந்தன. தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், வாகனங்கள், என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டன. எல்லா இடங்களிலும் கொள்ளையிடப்பட்டவை போக மிஞ்சியவை பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் பெரிய அளவில் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன. பெரும் எண்ணிக்கையானவர்கள் அகதிகளாகினர்.
அதனைத் தொடர்ந்து ஜூலை 26ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் நடத்தப்பட்ட வெறியாட்டத்தில் 33கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். மொத்தத்தில் இந்த வன்முறைச் சம்பவத்தைத் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு என்றே சொல்லப்பட்டது; சொல்லப்படுகிறது.
எனினும், இதன் பின்னணியில் சமூக, பொருளாதார வளர்ச்சியின் மீதான வன்மம் குடிகொண்டிருந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து.
கார்ள் மார்க்ஸ் சொல்வதைப்போன்று "அரசியல் பொருளாதாரம்" என்பது பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகிய மூன்றையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதில்லை. மாறாக இவை மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தே வரலாற்றில் வளர்ந்துள்ளன. முதலாளித்துவ உற்பத்தி முறையில் உழைப்பை மூலதனம் சுரண்டுவதன் விளைவான வர்க்கப் போராட்டம் குறித்த பகுப்பாய்வு இதனூடாகத் தவிர்க்க இயலாததாகிறது என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
இதன்படி 83கலவரத்தை ஆய்ந்து பார்த்தால், முதலாளித்துவ மூலதனச் சுரண்டலை மேற்கொள்வோர் தமிழர் என்ற கருத்தியலை நூற்றாண்டு காலமாகவே வளர்த்து வந்திருக்கிறார்கள் என்பது குமாரி ஜயவர்தனவின் எழுத்தின் மூலம் உணரக்கூடியதாகவுள்ளது.
அதாவது, 1883- 1983வரலாற்றுக் காலகட்டத்தில், வரலாற்று பணிக்காகத் தேர்ந்த மக்கள் தாமே எனவும் பண்டைய சிறப்புக்களைக் கொண்ட இனத்தவர் எனவும் தம்மைக் கூறிக்கொண்டனர்.
சிங்களவர் இப்பிரதேசத்தில் சிறுபான்மையினர். பூகோளப் பரப்பில் இங்கு மட்டுமே வாழ்பவர். அதற்கும் ஆபத்து வந்துள்ளது எனவும் எண்ணிக் கொண்டனர்.
சிங்களவர் நீண்டகாலமாகவே கிராமியப் பொருளாதாரத்தில் தாம் சாதாரண விவசாய உற்பத்தியாளர் எனவும் பூமியின் மைந்தர் எனவும் உண்மையான மதம், ஒழுக்கம், சமாதானத்திலும் நம்பிக்கையுடையவர் எனவும் பிற இனத்தவர் பல்வேறு விதமாக ஒடுக்கவும் சுரண்டவும் இடமளித்த அப்பாவிகள் எனவும் தன்னுணர்வு கொண்டனர்.
சிங்களவர் அல்லாதவரும் பௌத்தரல்லாதவரும் எதிரிகள் என்ற பார்வை பிறர் இரத்தத்திலும் மதத்திலும் அந்நியர், தந்திரசாலிகள், பேராசையான உலோபிகள், எல்லாத் துறைகளிலும் அதர்ம முறையில் போட்டியிடுவோர், அப்பாவி சிங்கள மக்களின் வேலை வாய்ப்புக்கள், வாணிபம், கல்வி வாய்ப்புக்களைப் பறித்தெடுப்போர் என்ற பார்வை ஆகிய சில அம்சங்கள் வழமையான கூக்குரல்களே ஆயினும், இப்பொய்மையான கருத்துக்கள் பல்வேறு தவறான விளக்கங்களைப் பெற்று சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் திருமதி ஜயவர்தன.
சிங்களவர்கள் பலர் இவ்வினக்கலவரங்களை எதிர்பாராத நிகழ்வாகக் கண்ட போதும் சிறுபான்மையினரின் தீவிர எதிர்ப்புக்கு பெரும்பான்மை இனத்தவரின் பதில் நடவடிக்கை என சமாதானம் கூறினர் என்று சிங்களவர், முஸ்லிம்களிடையே 1915இல் இடம்பெற்ற கலவரம் பற்றி அனாகரிக தர்மபாலா கூறினார்.
அமைதியை விரும்பும் சிங்கள மக்கள் அந்நியர்களின் அவமதிப்பை இனிமேலும் பொறுக்கமுடியாது எனக் காட்டினார். நாடு முழுவதும் ஒரே நாளில் முஸ்லிம்களுக்கு எதிராக திரண்டெழுந்தது. இதற்கு மேலாக சிங்களவர்களில் ஒரு பகுதியினர் இனப்போராட்டத்தை பண்டையப் போராட்டத்தின் தொடர்ச்சியாகக் கண்டனர் என்றெல்லாம் சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதுதான் நூற்றாண்டுகாலமாகக் கொண்டிருந்த வன்மத்திற்குப் பழிதீர்த்துக்கொள்ள பதின்மூன்று இராணுவத்தினரின் படுகொலை காரணமாகியது என்போரும் இருக்கிறார்கள்.
எஃது எவ்வாறாயினும், இன்று மக்கள் மத்தியில் மாற்றங்கள் ஏற்பட்டு, அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டவர்களாகியிருக்கிறார்கள். இந்த மாற்றத்திற்கு அரசியல்வாதிகள் இன்னமும் உள்வாங்கப்படவில்லை என்பதால்தான், மறக்கப்பட வேண்டிய ஒரு வரலாறு மீண்டும் மீண்டும் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்தச் சம்பவங்களால், மக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி, இன்னும் சரியான பாடத்தைக் கற்றுக்ெகாள்ளாதவர்களாகவே உள்ளனர்.
சிங்கள மக்களுக்கோ, தமிழ் மக்களுக்கோ ஆட்சி அதிகாரம் பற்றியோ, நிலம் பற்றியோ பிரச்சினை இருக்கவில்லை. மாறாக தமது வாழ்வாதாரத்திற்கு உழைப்பதும், வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்காகவும் தமது பிள்ளைகளுக்கான சிறந்த சூழலையும் பாடசாலையையும் உருவாக்கவும், பெற்றுக்கொள்ளவும் தொழில், கல்வி, சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்ளவும் விற்கப்படாமல் போராடவும், நாம் வாழும் காணியின் உறுதியைப் பெற்றுக்கொள்ளவும் பிரயத்தனம் கொண்டிருந்தனர். அல்லாமல் வேற்று இனத்துடன் பகை, குரோதத்தினை வைத்திருக்கவில்லை. ஆனால், மக்களிடம் போதியளவிலான அறிவின்மையால் ஆட்சியாளர்கள் இவர்களைப் பயன்படுத்தி அரசியல் சுயநலன் தேடிக்கொண்டு மக்களையும் நாட்டினையும் பிளவுபடுத்திக்ெகாண்டுள்ளனர்.
இவர்களின் இனவாதத்திற்கான சுயநல அரசியல், இன்று எத்தனை உயிர்களை, உடைமைகளை இல்லாமலாக்கியுள்ளது என்பதை நிச்சயமாக கூற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகி, நாடு பிரதேச ரீதியாக, இனரீதியாக, மொழிரீதியாக பிளவுபட்டு, இலஞ்ச ஊழல் மலிந்த பூமியாக, மக்கள் வாழ்வதற்காக போராடவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டது. இதற்குக் காரணம் அரசியல்வாதிகளே என்பதை ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் நன்கு புலப்படுத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
சரி, அந்தத் தாக்குதலின் பின்னராவது நாட்டில் சகவாழ்வு ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தால், மதவாதத்தின் பெயரால் மீண்டும் நாட்டில் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதனால், மீண்டும் ஒருவருக்கொருவர் வஞ்சத்தை வளர்த்துக்ெகாள்ள வழியேற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல்வாதிகளும் குறிப்பாகச் சிங்களப் பேரினவாதமும் தமிழ் தேசியவாதமும், முஸ்லிம் அடிப்படைவாதமும் தங்களை மாற்றித் தகவமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் மக்களுக்கான ஒரு தூய்மையான அரசியல் கலாசாரம் உருவாக்கப்படும். அன்றைய நாளில், 83களும் மக்கள் மனத்திலிருந்து விடுபட்டுப்போகும்!
விசு கருணாநிதி