இராணுவத் தளபதியின் பதவிக்காலம் இன்று நிறைவு | தினகரன் வாரமஞ்சரி

இராணுவத் தளபதியின் பதவிக்காலம் இன்று நிறைவு

இராணுவத் தளபதி லெப்.ஜெனரால் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. அவரது பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்களுக்கு நீடிப்பதா? அல்லது புதிய இராணுவத் தளபதியை நியமிப்பதா? என்பது தொடர்பில் இன்னமும் முடிவுகள் எடுக்கப்படவில்லையென அறிய முடிகிறது.

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே, அவர் ஓய்வுபெறும் வயதை எட்டியிருந்த போதும், அவருக்கு சேவை நீடிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

லெப்.ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க ஓய்வு பெற்றால், இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் இராணுவத் தளபதிக்கான போட்டியில் உள்ளனர்.

தற்போது இராணுவத் தலைமை அதிகாரியாக இரண்டாவது இடத்தில் உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர டி. சில்வா மற்றும் தொண்டர் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே ஆகியோரே உள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமானவராக மேஜர் ஜெனரல் சவேந்திர டி.சில்வா செயற்பட்டவர் என்ற பரவலான குற்றச்சாட்டும் ஒரு புறம் உள்ளது. 

அத்துடன், கடந்த ஜூலை மாதமே ஓய்வு பெற்றிருக்க வேண்டிய மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறுமாத காலம் சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.

இராணுவத்தில் இரண்டாவது நிலை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, இறுதிப் போரில் சர்ச்சைக்குரிய 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். இவரை அடுத்த இராணுவத் தளபதியாக நியமிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

Comments