ஜேவிபி; செந்தோழர்களின் புதிய அரசியல் நகர்வு | தினகரன் வாரமஞ்சரி

ஜேவிபி; செந்தோழர்களின் புதிய அரசியல் நகர்வு

மக்களைக் கவரும் அரசியல் கருத்துகளைவிடவும், மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜேவிபி) நடத்தும் கூட்டங்கள் மக்களால் பேசப்படுகின்றன.  

அவ்வாறுதான் கடந்த வாரம் அவர்கள் நடத்திய ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் அறிவிப்புக் கூட்டம் பற்றியும் சிலாகித்துப் பேசப்படுகின்றது.  

ஜேவிபியின் கூட்டம் எஃதுவாக இருந்தாலும் அஃதில் ஒரு நேர்த்தி இருக்கும். மேதினத்தில் நடத்தப்படும் மக்கள் பேரணிகள் மக்களை மிகவும் கவர்ந்திழுக்கும். கூட்டத்தில் உரைக்கப்பட்ட கருத்துகள் எவ்வாறானதாக இருந்தாலும், மக்கள் அணிவகுத்து வந்தமைதான் அழகாக இருக்கும்.  

இப்போதும் அப்படித்தான். காலி முகத்திடலில் ஒன்றுகூடிய இலட்சத்தையும் தாண்டிய சன சமுத்திரம், அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்கினை மீண்டும் பறைசாற்றியிருக்கிறது. இளைய சமுதாயத்தினர் வழிநடத்தப்பட வேண்டியதும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதுமான ஒழுக்கத்தைப் பேணுவதில் ஜேவிபி அந்தக் கூட்டத்தில் கரிசனையெடுத்துக்ெகாண்டுள்ளது.  

ஜேவிபி உருவாக்கப்பட்ட 54 வருட வரலாற்றில், மூன்றாவது தடவையாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குகின்றது. சோசலிஷ சமத்துவத்திற்காகப் பாடுபடுவதற்கென 1965ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி ரோகண விஜேவீர இந்தக் கட்சியை ஸ்தாபித்தார். சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து கட்சியை ஆரம்பித்த அவர், அது தொடர்பாக அரசியல் வகுப்புகள் பலவற்றை நடத்தினார். இவற்றால் கவரப்பட்ட படித்த வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். அன்று முதல் இன்று வரை பொதுவு டமைக்காக ஜேவிபியினரின் குரல் இன்னமும் ஓங்கி ஒலித்துக்ெகாண்டுதான் இருக்கின்றது. என்றாலும், அந்த இலட்சியத்தை அடைவதற்காக அவர்கள் முன்வைக்கின்ற அரசியல் கொள்கைகள், இலக்குகள் மக்களைக் கவர்ந்திருக்கின்றனவா என்பது முக்கியமான கேள்வியாக இன்னமும் இருந்துகொண்டிருக்கின்றது. 

1971ஆம் ஆண்டு அப்போதைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையிலான அரசாங்க ஆட்சிக் காலத்தில், நேர்மையையும் சமத்துவத்தையும் ஏற்படுத்துவதற்காகவென்று ஜேவிபி ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டதும், அதன் பின்னர் நடந்தவையும் நாட்டு மக்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. 

1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜே.வி.பி.யின் இரகசிய ஆயுதக்கிடங்கு பற்றி, ஆளும் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்திற்குத் தெரியவந்தது. அதனையடுத்து ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹண விஜயவீரவை அரசாங்கம் உடனடியாகக் கைது செய்தது. பின்னர் அவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தலைவர் சிறைக்குள் இருக்கும்பொழுதே 1971 ஏப்ரல் 5ஆம் திகதி இலங்கை அரசிற்கு எதிராக ஜேவிபியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. தெற்கின் பல பாகங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. கிளர்ச்சியினை முறியடிக்க இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியினைக் கோரியது. உதவிக்கு விரைந்த இந்தியா, சீனா நாடுகளின் உதவியுடன் ஆயுதக்கிளர்ச்சி இரண்டு வார காலத்தினுள் அடக்கப்பட்டது. ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். முடிவில் ஜேவிபியினை இலங்கை அரசு தடை செய்தது.  

இந்தச் சூழ்நிலையில் ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1977இல் வெற்றி பெற்றுப் பதவிக்கு வந்ததும், ரோஹண விஜேவீர விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது 1982இல், அவர் முதல் தடவையாகத் தனது கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவருக்கு

273, 428 வாக்குகள் கிடைத்தன. அதன் பின்னர் 1983ஆண்டு இனக்கலவரத்துடன் ஜேவிபி இணைத்துப் பேசப்பட்டது. மீண்டும் ஜேவிபி தடைசெய்யப்பட்டது. அக்கட்சியின் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்ைக வாழ்ந்து வந்தனர். எனினும், 1987, 89 காலப்பகுதியில் இந்திய இலங்கை சமாதான உடன்படிக்ைக கைச்சாத்திடப்பட்டதோடு மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அதிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். என்றாலும் 1990 இற்குப் பின்னர் புதிய தலைமைத்துவத்தின் கீழ் ஜேவிபி மீளக்கட்டியெழுப்பப்பட்டது. 1994 முதல் அனைத்துத் தேர்தல்களிலும் ஜேவிபி போட்டியிட்டு வருகின்றது. 

1994ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 90,078 வாக்குகளைப் பெற்றதால் ஓர் உறுப்பினர் தெரிவுசெய்யப்பட்டார். 

அதன் பின்னர் 1999ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் நந்தன குணதிலக்க போட்டியிட்டு 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்றாவது வேட்பாளராக ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் ஜேவிபியால் வெற்றி பெற முடியுமா? முடியாதா? என்பது வேறு விடயம்.  

சுருங்கச் சொன்னால், ஜேவிபியின் வளர்ச்சிப் போக்கில் தற்போதைய அரசியல் சூழலில் ஓர் இறங்கு முகத்தையே காணக்கூடியதாக இருக்கின்றது. 

ஏனெனில், 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நாடு முழுவதும் 518, 774 வாக்குளைப் பெற்று, 10 உறுப்பினர்களையும் 2001 ஆம் ஆண்டு 815,353 வாக்குகளைப் பெற்றுப் 16 உறுப்பினர்களையும் 2004ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகக் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு நாடு முழுவதும் 42 இலட்சத்து 23 ஆயிரத்து 970 வாக்குகளைப் பெற்று 39 உறுப்பினர்களையும் தக்கவைத்துக்ெகாண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி, கடைசியாக 2015இல் நடைபெற்ற தேர்தலில் 513,944 வாக்குகளைப் பெற்று ஆறு உறுப்பினர்களை மட்டுமே தனதாக்கிக் கொண்டிருக்கின்றது. 

எனவே, இந்த நெருக்கடியான அரசியல் செல்நெறிக்கு மத்தியில் ஜேவிபியின் நேர்த்தியான அரசியல் கலாசாரப் போக்கு மக்கள் மத்தியில் எந்தளவிற்கு வரவேற்பைப் பெறும் என்பது தெரியவில்லை. 

ஜேவிபியைப் பொறுத்தவரை காலாகாலத்திற்கும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களை விமர்சிப்பதையே பிரதான பணியாகக் கொண்டிருக்கும் அதேவேளை, அவர்கள் மக்களின் நெருக்குவாரங்களைத் தணிப்பதற்கான தேசிய அரசியல் கொள்கையொன்றை முன்வைக்கவில்லை என்பது மக்களால் விமர்சிக்கப்பட்டுவருகிறது. தற்போதைய அரசியல் போக்கில் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமித்திருந்தாலும், அந்தக் கட்சியின் வெறும் விமர்சனப் பார்வை மாத்திரம் தீர்வைப் பெற்றுத்தருமா? என்பது வலுவான ஒரு கேள்வியாகும். 

கடந்த காலங்களில் 'அவர்களும் ஒன்று, இவர்களும் ஒன்று, ஜேவிபிதான் நன்று' (உனுத் எக்காய், முனுத் எக்காய்) என்று முன்வைக்கப்பட்ட கோஷங்களை இன்னும் எத்தனை காலத்திற்கு வாக்குகளுக்காக முன்வைக்கப்போகிறது? 

அண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்ைகயில்லாப் பிரேரணையின்போது ஜேவிபியின் இடதுசாரிக் கொள்கை இடர்படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது. இறுதியில் அந்தப் பிரேரணை அரசாங்கத்தின் தரத்தினை உரசிப்பார்த்து உறுதிபடுத்திக்ெகாள்வதற்கே வழியேற்படுத்தியது. உண்மையில் இதுவிடயத்தில் ஜேவிபிக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்கின்றதா? அல்லது நாட்டின் சமகால அரசியல் நடப்பினைச் சரியாகக் கணிப்பீடு செய்வதில் தவறிழைத்துவிட்டதா? என்றுகூட அப்போது கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்த நிலையில்தான் மூன்றாவது அணி என்ற அந்தஸ்தில் இருந்த கட்சி, மக்களின் செல்வாக்கிலும் சரிவினைச் சந்தித்திருக்கும் சூழலில், ஒரு தேசிய தேர்தலில், அதுவும் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் என்ன நோக்கத்திற்காகக் களமிறங்கியிருக்கின்றது என்ற அரசியல் நோக்கம் இன்னமும் புரியவைக்கப்படவில்லை. இது தொடரும் ஒரு குறைபாடாகவே நீடிக்கின்றது.  

எனவே, செந்தோழர்கள் மேடை அலங்காரத்திலும், ஆடைக் கட்டுப்பாட்டிலும் மக்களைக் கவர்ந்துவிடலாம். அதேநேரம், மக்களின் இயல்பு வாழ்வினைப் பாதிக்காது கூட்டங்களும் நடத்தலாம். ஆனால், கட்சியின் கொள்கை மீது நாட்டங்கொள்ளச் செய்வதே வெற்றியை நோக்கிய ஆரோக்கியமான அரசியல் நகர்வாக இருக்கும்!   

Comments