89ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டி; 15போட்டிச் சாதனைகளுடன் நிறைவு | தினகரன் வாரமஞ்சரி

89ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டி; 15போட்டிச் சாதனைகளுடன் நிறைவு

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற 89ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதி நாளில் (12) யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் என 3பதக்கங்களை சுவீகரித்தனர். 

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் ஆகியன இணைந்து 89ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டித் தொடரில் 15போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.  

இதில் ஆண்கள் பிரிவில் 5போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 7போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இம்முறை போட்டிகளில் வருடத்தின் அதிசிறந்த சிரேஷ்ட மெய்வல்லுநராக சிலாபம் புனித மரியாள் கல்லூரியின் நீளம் பாய்தல் வீரர் சி.எம் யோதசிங்கவும், பெண்களுக்கான அதிசிறந்த மெய்வல்லுநராக ராஜகிரிய கேட்வே கல்லூரியின் குறுந்தூர ஓட்ட வீராங்கனையான ஷெலிண்டா ஜென்சனும் தெரிவாகினர். 

இம்முறை ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனரில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஒட்டுமொத்தமாக 3தங்கம், 2வெள்ளி மற்றும் 2வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக ஆறு பதக்கங்களை வென்றனர். 

இதில் கடந்த (11) நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 2தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை மகாஜனா வீரர்கள் சுவீகரித்தனர்.  

20வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட கதிர்காமலிங்கம் கேதுஷன் 3.90மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார்.  

அத்துடன், 16வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட ஐங்கரன் டிலக்ஷன் (3.20மீற்றர்) மற்றும் செல்வேந்திரன் தேனுஷன் (2.60மீற்றர்) ஆகியோர் முறையே தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.  

இந்த நிலையில், (12) நடைபெற்ற 18வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவிகளான சி. தீபிகா மற்றும் வி. யதுஷிகா ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டனர். 

இதில் 3.11உயரத்துக்கு பாய்ந்து தீபிகா வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள, அவருடன் போட்டியிட்ட வி. யதுஷிகா 2.70மீற்றர் உயரத்துக்கு பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தினை வென்றார். 

நீர்கொழும்பு ஆவே மரியாளர் கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த மெலிண்டா பீரிஸ் 2.50உயரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தினை வெற்றி கொண்டார். 

அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய கனிஷ்ட மெய்வல்லுநரில் முதல் தடவையாக களமிறங்கியிருந்த தீபிகா, 2.80மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.  

அதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் நடைபெற்ற வடக்கு மாகாண விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், 2.60மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தார். 

சுமார் பத்து நாட்கள் இடைவெளிக்குள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தீபிகா அசத்தியுள்ளார்.  

20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட  யாழ். தெல்லிப்பழை மகாஜனா மாணவியான எஸ். டிலக்சனா 1.50மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். தேசிய மட்டப் போட்டியொன்றில் டிலக்சனா பெற்றுக்கொண்ட முதல் பதக்கம் இதுவாகும். 

நீர்கொழும்பு நியூஸ்டட் கல்லூரி மாணவிகளான ஒசாதி விக்ரமசேகர மற்றும் இமாஷா உதானி ஆகிய இருவரும் 2.80 மீற்றர் உயரத்துக்கு பாய்ந்து தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கனை சுவீகரித்தனர். 

Comments