புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழரை ஏமாற்ற முடியாது | தினகரன் வாரமஞ்சரி

புலிகள் அழிக்கப்பட்டதால் தமிழரை ஏமாற்ற முடியாது

தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால், யுத்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாமென நினைக்கின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் இடமளிக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வவுனியா தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், "நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடத்திய காலத்தில் கூறிய விடயங்களையே இன்று நாம் கேட்கின்றோம். உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் போராடியது மக்களுக்காக. அவர்கள் மக்களின் உரிமைக்காக போராடினார்கள். விடுதலைப்புலிகளின் உரிமைக்காக அல்ல. எனவே மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இந்த தேர்தலை நாங்கள் பகிஷ்கரிக்க முடியாது. எமது ஜனநாயக உரிமையை பயன்படுத்தாது விட்டால், எமக்கு பாதகமாக தேர்தல் முடிவு அமையும். எமக்கு சாதகமான தேர்தல் முடிவு அமைய நாங்கள் சகல கடமைகளையும் தெளிவாக ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்து அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது. அவர் ஜனாதிபதியாகிய 10வருடங்களும் எமது மக்கள் பட்ட துயரங்கள் நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.

அரசியல் ரீதியாக எம்மை பலவீனப்படுத்த முயன்றார்கள். இருக்கும் அதிகாரத்தை குறைப்பதற்கு முயற்சித்தார்கள். மனித உரிமை மீறல்கள், அடிப்படை உரிமை மீறல்கள் நாள்தோறும் நடைபெற்றது. எமது மக்களை மதித்து நடக்கவில்லை. ஆகவே நாங்கள் தேர்தலை பகிஷ்கரித்து தவறான வழிக்கு செல்ல முடியாது.

அரசியல் தீர்வு சம்பந்தமாகவும், அதிகாரப் பகிர்வு சம்பந்தமாகவும், மக்களிடத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது சம்பந்தமாகவும், கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் கூறப்படவில்லை. அதற்கு மாறாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறியிருக்கின்றார். அதாவது அதி உச்ச அதிகார பகிர்வு.

அதி உச்ச அதிகாரப்பகிர்வு என்பது முதன் முறையாக எடுக்கப்பட்டதல்ல.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2006ஆம் ஆண்டு சர்வகட்சி கூட்டத்தை கூட்டி எல்லோருடனும் கதைத்து அவர் ஆற்றிய உரையில் அதி உச்ச அதிகாரப் பகிர்வு அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும் என அவர் பேசியிருக்கின்றார்.

இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட காரணத்தினால் யுத்தம் நடைபெறாத காரணத்தினால் அவை எல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர். அதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது.  தாங்கள் கூறிய விடத்தையே நிறைவேற்ற விருப்பமில்லாமல் அவர்கள் இருக்கின்றனர்.

இன்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம் அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மறைமுகமாக சமஷ்டி ஒழிந்திருக்கின்றது.

அதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

வவுனியா விசேட நிருபர்

Comments