நாள், கோள், நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள், நற்பலன்

மேஷம் 

மேஷ ராசி அன்பர்களே, வெகுவேகமாகக் காய்களை நகர்த்தி வெற்றிகளைக் குவிக்க வேண்டிய வாரம் இது. கிரக அமைப்புகள் மிகச் சாதகமாக இருப்பதால், சாதுர்யமாகச் செயல்பட்டுச் சாதனைகளைப் படைக்கும் நேரம் இப்போதுதான். தொழில் துறையாகட்டும், உதவிகளைக் கோருவதாய் இருந்தாலும் சரி, கல்வி, உத்தியோகம் எதுவாயினும் உங்கள் இலக்குகளை அடையப் பெரும் முயற்சிகள் தேவையில்லை, எளிதில் எட்டிப் பிடித்து விடலாம். குடும்பத்தில் எவருக்காயினும் திருமண விஷயங்களானாலும், அல்லது உங்களுக்கு என்றாலும் உடனே தொடர்புகளை ஏற்படுத்துங்கள், மறு முனையில் உங்களுக்காகவே காத்திருக்கிறார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு பிரதிகூலமான நிலையிலேயே இருக்கின்றன. இதனால் ஞாயிறு, திங்கள் நாட்களில் மன நிம்மதி பெரிதும் பாதிக்கப்பட, கவனம் சிதறுவதால் பல நஷ்டங்களும், பிரச்சினைகளும் வரவாய்ப்புள்ளது. உங்கள் கருத்துக்கள் உதாசீனம் செய்யப்படுவதால் மனதில் வேதனையே மிஞ்ச இடமுண்டு. மேலும் வீண் விரயங்களும், கையிருப்பிற்குப் பாதகங்களும் வரும். உறவுகளால் செலவுகளும், பழிச் சொல்லும் தாராளமாகக் கிடைக்கும். திடீர் திருப்பமாக சில வெற்றிகளும், பண வரவுகளும் இருக்கும். பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த தேக ஆரோக்கியம் சீர் திருந்தவும், சுறுசுறுப்பாகத் தொழிலில் ஈடுபாடு காட்டவும் தொடங்குவீர்கள். குடும்பத்தில் கலகலப்பும் மகிழ்ச்சியும் இடம் பெறும். சமுதாயத்தில் இருக்கும் மரியாதையைப் பற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள், அது உயர்வதையும், தாழ்வதையும் இப்போது ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, வார ஆரம்பம் அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லையே. 3ம் திகதி செவ்வாய்கிழமை காலை 03.04வரை சந்திர பகவான் அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இக் காலத்தில் வீண் பழி கேட்டல், வாக்குத் தவறி அவமதிப்புகள் நடக்க வாய்ப்புகள் அதிகம். எச்சரிக்கையாய் இருந்து தவிர்த்துக் கொள்வது நலம். வியாழன் முதல் கை நிறையப் பணம், மனம் நிறைந்த மகிழ்ச்சி, உற்றார் உறவினர் கொண்டாட்டம் என்பன வர இடமுண்டு. இல்லறத்தில் அமைதியும் இருக்கும். சில முயற்சிகளில் வெற்றிகளும், அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப்பெறும். கோவில் குளம் என்ற ஆன்மீகச் செலவுகளும், தெய்வ தரிசனங்களும் வந்து போவதால் மனதில் அமைதி ஏற்பட வழியுண்டு.

கடகம்

கடக ராசி அன்பர்களே, சந்தோஷங்களைத் தொடர்ந்து சங்கடங்கள் வரத்தானே வேண்டும். வரவுகளும், செலவுகளும், வெற்றிகளும் தோல்விகளுமாக இந்த வாரம் நகரும். 3ம் திகதி செவ்வாய்கிழமை காலை 03.05முதல் வியாழக்கிழமை பகல் 02.30வரை சந்திர பகவான் அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இக் காலத்தில் கடலில், ஆறு குளங்களில் நீராடல், உயரப் பாய்தல், மரம் ஏறுதல் போன்றவற்றைத் தவிர்த்துக் கொண்டால் ஆபத்துகளைத் தேடிப்போகாமல் நிம்மதியாக இருக்கலாம். சிறு பிணிகள், சில்லறைச் சமாச்சாரங்கள் வருவது தானே வாழ்க்கை, அதை நினைத்துக் குழம்ப வேண்டியதில்லை. குடும்பம் என்ன குத்துக் கல்லா, குழப்பங்கள் வந்தால் தானே விடிவுகள் வரும். புனர்பூசத்தின் நாலாங்கால், பூசம், ஆயிலியத்திற்கு ஞாயிறும் வெள்ளியும் படுபட்சி நாட்களாகும். சுப காரியங்களை விலக்கவும்.  

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நிலவி வந்த தடுமாற்றங்கள் மறைந்து, நிலையான மனது இப்போது உங்களை ஆட்கொண்டிருக்கும். நடந்தவைகள், நடப்பவைகள், நடக்கப் போகின்றவைகளை நிதர்சனமாகத் தெரிந்து விடிவை நோக்கி முடிவுகளை எடுக்கும் பேராற்றல் உங்களிடம் வந்திருக்கும். சங்கடங்களைத் தொடர்ந்து தந்த வண்ணம் இருந்தவைகள் தானாக இடத்தைக் காலி பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். சத்ருக்கள் தாமாக முன் வந்து சரண் அடைவதும் ஒரு பக்கம் இடம் பெறும். முழுமையான மனிதராக மீண்டும் உருவாகிக் கொண்டிருக்கிறீர்கள். தாம் வாழும் சமூகத்தில் உயர்ந்த இடம் நோக்கிய நகர்வுகளும் இருக்கும். நிலையான சொத்துக்கனை முறையாகக் கையாளும் வல்லமையும், உங்கள் கட்டுப்பாட்டிலும் அமையும். வியாழக்கிழமை பகல் 02.31முதல் சனிக்கிழமை முழுவதும் சந்திர பகவான் அட்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, துன்பங்களும், தொல்லைகளும் தேரேறி வந்து குசலம் விசாரிக்கும். பதில் சொல்லித் தீரும் முன்னர் அடுத்தது வந்து நிற்கும். இதைத்தான் காலத்தின் கோலம் என்று வர்ணிக்கிறார்கள். இது உலகில் ஒன்றும் புதிதில்லை. யார் யாருக்கோ வந்து போனதாக சரித்திரத்தில் வாசித்திருக்கிறோம். இன்று நீங்கள் சரித்திர நாயகனாக இருக்கிறீர்கள். கொண்ட தொழிலில் தோல்விகள், வரவைத் தாண்டிய செலவுகள், எங்கோ ஓடிப்போய் விட்ட நிம்மதி, உதவும் உறவுகள் நீங்கி, செலவுகள் கொண்டு வரும் உறவுகள் என்ற பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவைகளைக் காலம் மிக விரைவில், சில நொடிகளில் தீர்த்து வைக்கும். பொறுத்திருங்கள் பொன்னான வாழ்க்கை வந்து சேரத்தான் போகிறது. உத்தரம், அத்தம், சித்திரையின் முன்னரைக்கு திங்கட்கிழமை படுபட்சி நாளாகும்.  

துலாம்

துலா ராசி அன்பர்களே, செயற்பாடுகளில் சில இடைஞல்கள் வரும். எதிர்பாராத சிக்கல்களினால் எடுத்த காரியங்கள் இழுபறியாகி அலைச்சல்களையும், விரயங்களையும் தரும். நம்பியிருந்த, வழக்கமாக உதவிகள் செய்தவர்கள் மெதுவாக நழுவிப் போகும் போக்கைக் கடைப்பிடிப்பார்கள். இதனால் பல ஏமாற்றங்கள் வரும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்ற இடமுண்டு. நீண்ட காலமாக இருந்த பல இழுபறிகளை சமரசமாகத் தீர்க்க குடும்ப அங்கத்தினர்கள் தாமாக முன்வருவார்கள். விட்டுக் கொடுத்து சாதுர்யமாக நடந்து கொள்ளுங்கள். அந்நியர் தொடர்புகளால் வீண் பழிச்சொல் கேட்க  நேரும். தொழில் நல்ல லாபங்களும் அதற்கு இணையான செலவுகளும் வரும். என்னதான் விலகி இருந்தாலும், புத்திசாலித்தனமாக நடப்பதாக நினைத்தாலும் அடி சருக்கி அல்லல்களை முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, வரவுகளும் வாய்த் தர்க்கங்களுமான நாட்கள் அமையும். சிக்கல்களும் சீரழிவுகளும் ஒரு புறம் இருக்க, களைப்பில்லாமல் எதிலும் ஈடுபடும் மனநிலையும் இருக்கும். கெட்டதாகச் சொல்வீர்கள் அது நல்லதுபோல் மற்றவர்களுக்குத் தோன்றும், உண்மையிலேயே அடி மனதில் ஆழப் பதிந்த அன்புடன் எடுத்துச் சொன்னால், பிழையாகப் புரிந்து முரண்படுவார்கள். என்ன நடக்கிறது என்பதைத் புரிந்து கொள்வதன் முன்பே நாட்கள் ஓடி மறைந்து விடும். குடும்பத்திலும் ரகளைகளுக்குக் குறைவிருக்காது. உறவுகள் போட்டி போட்டுக் கொண்டு பகையை வளர்ப்பார்கள். மனதில் பயத்தையும் விதைப்பார்கள், எனினும் கால வேகத்தில் எதுவுமே பெரிய தாக்கத்தை எற்படுத்தாது. இயல்பான வாழ்க்கை நிச்சயமாக நடந்தேறும். முடிந்தது போல் தோன்றும் தொழிலும் உயிர்த் துடிப்புடனேயே இயங்கும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, ஆகா இப்படியான வாழ்வைப் பெற, எப்படியான தவத்தை நான் செய்தேன் என்று நீங்கள் புலம்புவது கேட்கத்தான் செய்கிறது. என்ன செய்யலாம், உருப்படியான எந்தக் கிரகமும் சுபமாக அமையாது போய்விட்டதினால் அழுது, புலம்பி ஆகப் போவதுதான் என்ன இருக்கிறது? இருந்தாலும் எங்கோ ஒரு மூலையில் அதிர்ஸ்டமும் இருக்கத்தான் செய்கிறதே. வாயில் வந்ததைப் பேசியும், வம்புகளை வளர்த்தாலும், வரவுகளைச் சந்தித்தும் இந்த வாரம் நன்றாகத் தான் கழியும். தேக அசௌகரியங்கள் புதன் கிழமைக்குப் பின் நீங்கிவிடும். மனதில் உண்டாகும் அர்த்தமற்ற பயங்களை மூட்டை கட்டி விட்டுத் துணிவுடன் இருக்கப் பழகுங்கள்.

மகரம்

மகர ராசி அன்பர்களே, வருகின்ற வரவெல்லாம் விரயமாகப் போகின்றதே என்று யேசிக்காதீர்கள், வருவது தானே போகிறது, இருப்பது அழியவில்லையே என்று அமைதி பெறுங்கள். செலவுகளில் தவிர்க்க முடியாத சுப செலவுகளும் அமைவதினால் சந்தோஷப்படலாமே. குடும்பத்திலும், சுற்றுச் சூழலிலும் சந்தோஷகரமான நிகழ்ச்சிகள் இடம் பெறும், அது உங்கள் கைச் செலவென்றாலும் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். கௌரவத்தையும், சமுதாய அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்தும். பிற்கால முன்னேற்றங்களுக்கு அது அடிக்கல்லாகவும் அமையும். தொழில் துறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர முயல வேண்டாம். இருப்பதை விருத்தி செய்வது மட்டுமே நன்மையைத் தரும். உத்தராடத்திற்கு செவ்வாயும், திருவோணம், அவிட்டத்தின் முன்னரைக்கு புதனும் படுபட்சி நாட்களாகும். 

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, மனக் குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தும், தெளிவும், தைரியமும் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் கால கட்டம். தோல்விகளும் துன்பங்களும் தூர விலகிப் போய்க் கொண்டிருப்பதினால், சந்தோஷக் கொண்டாட்டங்கள் வரும். தொழில் சிறக்கவும், செல்லுமிடங்களில் மரியாதைகள் உயரவும் வாய்ப்புகள் உண்டு. நிலையான சொத்துக்கள் சம்பந்தமாக விருத்திகள் ஏற்பட, அல்லது அவைகளின் மேல் பெற்றிருந்த கடன்களை அடைக்கவும் சந்தர்ப்பங்கள் உண்டு. வீடு வாகனங்களில் இருந்து வந்த குறைகள் களையப்பட்டு எல்லாம் நன்றாக இருப்பதினால் மனம் நிம்மதியைப் பெறும். வீட்டில், இல்லறத்தில் நிலவிவந்த சீரழிவுகள் யாவும் மாறவும், உறவுகளுக்கிடையே புரிந்துணர்வும் ஏற்பட மகிழ்ச்சி பெருகும். அவிட்டத்தின் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால். இதில் பிறந்தவர்களுக்கு, புதன் படுபட்சி நாளாகும். சுப காரியங்களை விலக்கவும். 

மீனம்

மீன ராசி அன்பர்களே, வெகு வேகமாகப் பயணங்களை மேற்கொண்டிருந்த நீங்கள், தடைபட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறீர்கள். எப்படியும் பேசிச் சமாளித்து விடமுடியும் என்ற நம்பிக்கை அடி மனதில் இருந்தாலும் நிலைமைகள் சாதகமாக இல்லை போல் தோன்றுகிறது. நம்பியிருந்த அனைவரும் ஒட்டு மொத்தமாக நழுவி, நட்டாற்றில் விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது, கவனம் கட்டாயம் தேவை.

தொழில் துறைகள் தலை குப்புறக் கவிழாவிட்டாலும், தடுமாற்றங்களில் இருந்து தப்ப இயலாது. தலைக் குனிவுகளும், பழிச் சொல்லும் பின்தொடர சந்தர்ப்பங்கள் உண்டு. மனைவியானாலும், மகன் ஆனாலும் விலகி நின்ற வேடிக்கை பார்த்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தனி மனிதனாகவே களத்தில் நின்றாக வேண்டும்.

Comments