சிந்தனை உன்னை சிறப்பாக்கும்!
சீவிய வாழ்வை சீராக்கும்!
பந்த பாச உறவுகளை
பக்குவமாக உருவாக்கும்!
எந்த நிலையிலும் ஏற்றம் பெற
சிந்தனை என்றும் வழிவகுக்கும்!
மனிதத்துவம் மாண்புடைய
மனிதனில் உள்ள சிந்தனையே!
புனிதத்துவம் பூத்துவிட
புதைந்துள்ள சிந்தனையே!
தன்னில் உள்ள தன்மைகளை
தவறாது என்றும் உணர்ந்து கொள்ள
தனித்துவமானது சிந்தனையே!
தனிச்சிறப்பானது சிந்தனையே!
தன்னைபற்றி சிந்தித்தால்
தத்துவம் தானே பிறந்துவிடும்!
உன்னில் உள்ள உணர்வுகளும்
உண்மையாக வழித்துவிடும்!
மண்ணில் நீ வாழ்வதற்கு
மாண்பு வழி கிடைத்துவிடும்!
விண்ணுயர உன் புகழ் ஓங்க
விசித்திரங்கள் நடந்துவிடும்!
பிறப்புக்கும் இறப்புக்குமிடையினிலே
பிரமிக்க எத்தனையோ சிந்தனைகள்
வறுமை வாழ்வில் வந்தாலே
பொறுமைக்கு எத்தனையோ சிந்தனைகள்
நறுவனம் உன்னில் வந்துவிட
நற்சிந்தனைகளை நீ வளர்ப்பாயா?
காத்தான்குடி கலைமதி றபாய்தீன்