மாற்று என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் | தினகரன் வாரமஞ்சரி

மாற்று என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கைகளுக்கு  தலைமைத்துவம் வருவதை  தடுப்பதற்கான முயற்சியே புதிய  கூட்டு என்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். மக்களை திசை திருப்பி குழப்புவதற்கு எடுக்கப்படுகிற முயற்சி அதுவென்றும் அவர் சொல்கின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய செவ்வி...

கேள்வி: விக்கினேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணியில் நீங்கள் ஏன் இணைந்து கொள்ளவில்லை?

பதில்: - உண்மையில் தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்ற கூட்டணியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு கூட்டு அல்ல. அது கூட்டமைப்பின் அதே கொள்கையோடு செயற்படப் போகின்ற இன்னொரு அணி. கூட்டமைப்பிற்குப் பின்னாலுள்ள வல்லரசுகளினால் தான் அந்தக் கூட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அது ஏன் என்றால் கூட்டமைப்பு இன்றைக்கு மக்களிடம் செல்வாக்கு இழந்திருக்கிற நிலையில் மக்கள் புதிய மாற்று ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறதால் அந்த மாற்றும் இந்த வல்லரசுகளின் பிடிக்குள் இருக்க வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தரப்பாகத் தான் நாங்கள் அதைப் பார்க்கின்றோம்.

பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சியில் ஆறு கட்சிகள் கூடியிருந்த பொழுது கூட இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று நாங்கள் கேட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் அதனை நிராகரிக்க முடியாது என்று சொல்லவில்லை. கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக் கூடிய குறிப்பாக இன்றைக்கு இந்தப் புதிய கூட்டை உருவாக்கியிருக்கிற தரப்புகளும் அந்த ஒற்றையாட்சிக்குரிய இடைக்கால அறிக்கையை நிராகரிக்கக் கூடாது என்று கடுமையாக வலியுறுத்தின.

அந்த நிலைமையில் தான் ஒற்றையாட்சியை நிராகரிக்கின்ற தரப்பு என்ற வகையிலும் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற சமஷ்டித் தீர்வைத் தான் நாங்கள் பெற வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுகிற தரப்பு என்ற வகையில் அத்தகைய கொள்கைகளையுடைய இந்தத் தரப்புக்களுடன் இணையவில்லை.

கேள்வி: அவ்வாறானதொரு கூட்டில் நீங்கள் இணைந்து கொள்ளாதது எத்தகைய சாதக பாதக நிலைமைகளை உங்களுக்கு ஏற்படுத்துமென்று கருதுகின்றீர்கள்?

பதில்: - நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்தக் கூட்டில் இருக்கின்ற தரப்புக்கள் நேற்று வரைக்கும் கூட்டமைப்பில் இருந்து அதன் செயற்பாடுகளை நியாயப்படுத்தியவர்களாகவே. கூட்டமைப்பிற்கு மக்களிடத்தே செல்வாக்கு இல்லாமல் போவதால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்ற நிலையில் தங்களை ஒரு மாற்றாக அடையாளப்படுத்தி வெற்றி பெறலாம் என்று கருதுகின்ற தரப்பு தான் இது. அவை அனைத்தும் எமது மக்களுக்கும் தெளிவாக தெரிகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும், இதே மாதிரியானதொரு முயற்சியொன்று எடுக்கப்பட்டிருந்தது. அதிலும் எங்களுக்கு அந்தத் தலைமைத்துவம் வரக் கூடாது என்பதற்காக உதயசூரியன் சின்னத்தில் ஈபீஆர்எல்எப் தரப்பு போட்டியிட்டது.

அதே ஆட்கள் தான் இன்றைக்கு இந்த புதிய பெயரில் அதே முயற்சியை எடுக்கின்றனர். ஆனால் எங்கள் மக்கள் கடந்த பத்து வருசத்தில் நடந்தவற்றை நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

குறிப்பாக இந்த பத்து வருசத்தில் யார் நேர்மையாக செயற்பட்டனர். கூட்டமைப்பின் பிழைகளை யார் ஆரம்பம் முதலே சுட்டிக்காட்டி வருகின்றனர்? யார் புதிய தலைமைத்துவத்திற்கு உரித்தானவர்கள் என்பதும், அது நாங்கள் தான் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தத் தேர்தலில் மக்களிடம் அது பற்றிய தெளிவு மேலும் அதிகரிக்கும் என்பது தான் எங்களது கருத்து.

இன்றைக்கு உருவாக்கப்பட்ட இந்தப் புதிய கூட்டும் கூட்டமைப்பினரும் ஒன்று சேர்ந்தால் அது இன்னும் நல்லது. எங்களைப் பொறுத்தவரையில் இரு தரப்பிற்கும் இடையே வித்தியாசங்கள் ஏதும் இல்லை. குறிப்பாக விக்கினேஸ்வரன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டமைப்புடன் சேர்ந்து வேலை செய்யத் தயார் என்று சொல்லியிருக்கின்றார்.

ஆனால் கூட்டமைப்பு பிழை என்று தான் புதிய மாற்றை உருவாக்குவதாகச் சொல்லிக் கொண்டு தேர்தலுக்குப் பிறகு கூட்டமைப்புடன் கூட்டுச் சேர்ந்து ஒன்றாக வேலை செய்யத் தயார் என்றால் தேர்தலில் ஏன் அவர்கள் பிரிந்து நிற்க வேண்டும்.

கொள்கை ரீதியாக ஒரு வேறுபாடும் இல்லை என்றால் ஒன்றாக சேர்ந்து வேலை செய்ய வேண்டியது தானே. அப்போது தான் யார் உண்மையில் கொள்கையில் உறுதியாக, நேர்மையாக இருக்கின்றனர் என்பதை மக்களுக்கும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஆகையினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் உண்மையில் கொள்கைக்காக இருக்கின்றது. ஏனைய அனைவரும் வெறும் அரசியல் மட்டும் தான் செய்கின்றனர் என்பதை மக்கள் விளங்கிக் கொள்வதற்கும் சுலபமாக இருக்கும்.

கேள்வி: மாற்றுத் தலைமைத்துவமாக அல்லது மாற்று அணியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரக் கூடாதென்ற அடிப்படையில் வல்லரசுகள் செயற்படுவதாக கூறுகின்றீர்கள். ஏன் அவ்வாறு செயற்படுகின்றனர் என்று கூற முடியுமா?

பதில்: - இலங்கைத் தீவில் வல்லரசுகளுக்கிடையே கடும் பூகோளப் போட்டியொன்று நடக்கிறது. அந்தப் போட்டியில் இலங்கைக்குள்ளே இருக்கக் கூடிய அரசியலை ஒவ்வொரு வல்லரசும் கையாளுகிறது. தமிழ் அரசியலை கடந்த 70 வருசத்திற்கு மேலாக கையாளுகிற தரப்பு இந்தியாவாகத் தான் இருந்திருக்கிறது.

தமிழர்களும் இந்தியாவுடன் ஒரு நட்புறவைப் பேணுவதற்கு இயல்பாகவே வாய்ப்புக்கள் இருக்கிற நிலையில் அதனை இந்தியா கையாண்டிருகிறது. ஆகவே தாங்கள் விரும்பிய அடிப்படையில் வெறுமனே தங்களுடைய முகவர்களாகத் தான் தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கைத் தீவில் செயற்பட வேண்டுமென்று தான் இந்தியத் தரப்பினர் விரும்புகின்றனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக கூட்டமைப்பு அவர்கள் விரும்பியவாறு செயற்பட்டதால் மக்கள் கூட்டமைப்பை நிராகரித்து ஒரு மாற்றைத் தேடத்தான் போகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

நாங்கள் எவருடைய எதிரியும் இல்லை. அதே நேரத்தில் எவருடைய முகவர்களும் அல்ல. தமிழ் மக்களை மையப்படுத்தி செயற்படுகிற தரப்பாகவே நாங்கள் இருக்கிறோம். அதில் எந்தவிதமான விட்டுக் கொடுப்பும் செய்ய நாங்கள் தயாரில்லை.

கேள்வி: நீங்கள் குறிப்பிடுவது போன்று உங்களுக்கு எதிராக வல்லரசுகள் சூழ்ச்சிகள் செய்கின்ற நிலையில் இந்தச் சவால்களை எவ்வாறு தாண்டப் போகிறீர்கள்?

பதில்: - நாங்கள் இதில் தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருக்கிறோம். அதாவது இந்தப் பூகோள அரசியலை சரியான முறையில் கையாள வேண்டும். அதனை சரியான முறையில் கையாளாமல் எந்தவொரு கட்டத்திலும் நாங்கள் முன்னுக்குப் போக இயலாது. உதாரணத்திற்கு ஜெனீவா அமர்வொன்று வரவிருக்கிறது.

கூட்டமைப்பு தாங்கள் விரும்பிய மைத்திரி ரணில் ஆட்சிக்கு நெருக்கடிகளை கொடுக்கக் கூடாதென்பதற்பதற்காக மூன்று தடவைகள் இரண்டு வருச கால அவகாசத்தைக் கொடுத்திருந்தது.

தமிழ் மக்களின் பிரிதிநிதிகளாக நாங்கள் இருந்திருந்தால் எங்களுடைய கருத்துக்கள தான் ஜெனீவாவில் எடுபட்டிருக்கும். கடைசி வரைக்கும் கால அவகாசம் வழங்க நாங்கள் தயாரில்லை என்று சொல்லியிருக்கிறோம்.

இரண்டாவதாக மனித உரிமைப் பேரவையில் ஒரு பிரயோசனமும் இல்லை. சிறிலங்கா அரசு இதற்கு ஒருநாளும் ஒத்துழைக்கப் போறதில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பொறுப்புக் கூறல் நடப்பதாக இருந்தால் சிறிலங்கா அரசின் விருப்பத்தை தாண்டி தான் நடக்க வேண்டும்.

அதைச் செய்வதற்கு பாதுகாப்புச் சபைக்கு சிறிலங்காவை கொண்டு போக வேண்டும். அவ்வாறு கொண்டு போவதற்கு மட்டும் தான் நாங்கள் ஒத்துழைப்போம். அதைவிட மற்றதெல்லாம் எங்களது மக்களை ஏமாற்றுவதற்காகத் தான் இருக்கும். சிறிலங்காவை சர்வதேச அரங்கில் ஒரு பிடியில் வைத்திருக்க வேண்டிய தேவை இந்த நாடுகளுக்கும் இருக்கும்.

கேள்வி: ஜெனீவா விவகாரத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சரியான முறையில் கையாளவில்லை என்று நீங்கள் கூறுகின்ற நிலையில் சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்வதற்கு வழியே இல்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: - சுமந்திரன் இந்த விடயத்தில் வாய் திறந்து சொல்வது அத்தனையும் பொய். சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது என்றால், எப்படி எப்போது முடிவடைந்தது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் ஒரு சட்டத்தரணி. அவருக்கு இந்த விசாரணைகள் தொடர்பில் தெரிந்திருக்க வேண்டும்.

உண்மையில் நீதிமன்றத்தில் ஒரு விசாரணை நடப்பதாக இருந்தால் சட்டத்தரணி ஒரு குற்றவாளியை விசாரிப்பார். அரச தரப்பின் சார்பில் விசாரிப்பார். அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இன்னொரு சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்வார். அந்த நீதிமன்றத்தில் இருக்கின்ற நீதிபதி எல்லாவற்றையும் கேட்ட பின்னர் தீர்ப்பு வழங்குவார்.

எங்களது விடயங்கள் தொடர்பாக அப்படியொரு விசாரணை எந்தவொரு இடத்திலும் நடக்கவில்லை. வெறுமனே ஐ.நா மனித உரிமை ஆணையாளருடைய அலுவலகம் தங்களுடைய கணிப்பின் படி இங்கே என்ன நடந்திருக்கிறதென்பதை ஒரு அறிக்கையாக வெளியிட்டார்கள். அந்த அறிக்கையை சுமந்திரனும் அவர் சார்ந்த கூட்டமைப்பும் சர்வதேச விசாரணை என்று பொய்யாக மக்களுக்கு சித்தரித்து பொறுப்புக் கூறலை கைவிடச் செய்வதற்குரிய முயற்சியைத்தான் எடுக்கின்றனர். சுமந்திரன் இன்றைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்கு இடமில்லை என்று சொல்கின்றார் என்றால் அது அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற கோணத்தில் சொல்கிற கருத்தாக மட்டும் தான் பார்க்கப்பட வேண்டும்.

கேள்வி: - வரவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது?

பதில்: - இன்றைக்கு இருக்கின்ற சூழலில் நாங்கள் தனிக் கட்சியாகத் தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுவோம். ஆனால் சிவில் சமூகங்களோடும் புத்திஜீவிகளோடும் கூட்டுச் சேர்ந்து கொள்வோம்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிட்டத்தட்ட ஆறு பொது அமைப்புக்களோடு கூட்டுச் சேர்ந்து தான் தமிழ்த் தேசியப் பேரவை என்ற வகையில் போட்டியிட்டிருந்தோம். அந்த வகையில் இந்த முறையும் கடந்த தேர்தலில் எங்களை ஆதரித்து இணைந்து செயற்பட்ட சிவில் சமூகங்களோடும் புத்திஜீவிகளுடனும் இணைந்து போட்டியிட இருக்கிறோம்.

கேள்வி: மாற்று அணி என்பது தொடர்பில் உங்களது கருத்து என்ன?

பதில்: - மாற்று என்பது அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். அதனை விட வேறு எவரும் மாற்று இல்லை. இன்றைக்கு அவர்களே தாங்கள் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்படத்தயார் என்று சொல்கின்றனர். ஆக கொள்கையளவில் அவர்களுக்கு எந்தவிதமான வேறுபாடும் இல்லை. வெறுமனே தேர்தலுக்கான உருவாக்கப்பட்டுள்ள ஒரு அணுகுமுறை. அதுவொரு கூட்டும் இல்லை.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கைகளுக்கு தலைமைத்துவம் வருவதை ஏதோவொரு வகையில் தடுப்பதற்காக மக்களை திசை திருப்பி குழப்புவதற்கு எடுக்கப்படுகிற ஒரு முயற்சி. இது படுதோல்வியடையும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தமிழ் மக்களின் நேர்மையான தலைமைத்தவமாக தமிழ் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

எஸ்.நிதர்ஷன்- பருத்தித்துறை விசேட நிருபர் 

Comments