பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து 19ஆம் திகதி கூட்டத்தில் தீர்மானம் | தினகரன் வாரமஞ்சரி

பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து 19ஆம் திகதி கூட்டத்தில் தீர்மானம்

மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படுமானால் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை கூடவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 14நாட்களுக்கிடையில் வேட்புமனு கோரப்படவேண்டும். அதனையடுத்து 6வாரங்களில் தேர்தல் நடத்தப்படவேண்டும். இதன் பிரகாரம் ஏப்ரல் மாதம் 25க்கும் 28க்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில் தேர்தலை நடத்த வேண்டிய நிலை காணப்படுவதால் இது குறித்து ஆராயும் பொருட்டே புதன்கிழமை ஆணைக்குழுவின் விஷேட கூட்டம் நடைபெறவிருப்பதாக ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டார்.

இதேவேளை 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கமைய பாராளுமன்றத்தை மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் எந்த வேளையிலும் கலைக்க முடியுமென சட்ட மாஅதிபர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கிறார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர சட்ட மாஅதிபரிடம் இது குறித்து தெளிவுபடுத்துமாறு கோரியிருந்தார். இம் மாதம் 28ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தையும் கலைக்கமுடியும். இந்த நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் 02ஆம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கத் தீர்மானித்திருப்பதாக அரச உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாக இருந்தால் வேட்புமனுகோரும் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி, தேர்தல் நடத்தப்படும் திகதி, புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு போன்ற விடயங்கள் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படவேண்டியுள்ளதால் அவை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடமிருந்து விபரம் கோரப்பட்டுள்ளது.

எம்.ஏ,எம். நிலாம்

Comments