வெளிவிவகார அமைச்சில் பணியாற்றும் உத்தியோத்தர் ஒருவரின் உறவினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனால், குறிப்பிட்ட உத்தியோகத்தர் தொடர்பிலும் வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் வெளிவிவகார அமைச்சு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி அந்த உத்தியோகத்தர் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அதேநேரம், கொழும்பு அலுவலகத்தில் கடந்த வாரம் இந்த உத்தியோகத்தரோடு நேரடித்தொடர்புகளைக் கொண்டிருந்த ஏனைய உத்தியோகத்தர்கள், சந்திக்க வந்திருந்தவர்கள் அனைவரும் சுயமாக தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இவர் பணியாற்றிய ஐரோப்பிய ஒன்றிய தலைநகர் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெளிவிவகார அமைச்சில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் உத்தியோகத்தர்கள், வருகை தருவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தொடர்ந்து நிலைமைகளை அவதானித்து வருவதாகவும் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (வி)
நமது நிருபர்