உயிர் காக்கும் ஊரடங்கு! | தினகரன் வாரமஞ்சரி

உயிர் காக்கும் ஊரடங்கு!

கொரோனா வைரஸ் உருவான சீனாவில் வீழ்ச்சியுற்ற மக்கள் எழத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், உலகம் இப்போதுதான் அழத்தொடங்கியிருக்கிறது.

ஒரு போரிடர் காலத்தில்கூடக் களத்தில் ஒரே நாளில் 900 பேர் மரணிப்பது அரிது, குண்டுமழை பொழிந்தாலொழிய. எனவே, 50, 100 என்ற கணக்கில் மரணங்கள் சம்பவித்தாலும் அது பெரும் செய்தியாகும் மக்களுக்கு. இன்று நாளாந்தம் ஆயிரக்கணக்கில் மக்களின் உயிரைக் குடித்துக்கொண் டிருக்கிறது இந்தக் கொரோனா வைரஸ்.

இதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, சமூக விலகல் என்கிறது மருத்துவ நிபுணத்துவம். முதலில் எந்த அறிகுறியும் தலைப்படாது. பதினான்கு நாட்கள் செல்ல வேண்டும். சிலவேளை, அறிகுறி இல்லாமலேயே உயிர் அடங்கியும் போகலாம்.

எனினும், 14 நாள், 21 நாள், 30 நாள், 67 நாள் என்ற அடிப்படையில் இலட்சக்கணக்கானோரைத் துவம்சம் செய்யுமாம் இந்தக் கொரோனா. அதற்கு இத்தாலி நல்லதோர் உதாரணமாகியிருக்கிறது.

அங்கு ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கில் மரணிக்கும் மக்கள் சமூக விலகலூடேதான் அஸ்தமித்துப்போகிறார்கள். தனியே இருந்து; தனியே இறந்து, தனியே கல்லறைக்கும் செல்லவேண்டிய துயரத்தை ஏற்படுத்தி வருகிறது இந்தக் கொரோனா வைரஸ்!

சீனாவைப் பொறுத்தவரை 14 நாள், 21 நாள் முதலான பலப்பரீட்சைக்காலத்தைக் கடந்து வந்துவிட்டது. அங்கு மக்களின் மூச்சுக்காற்று சுதந்திரமாய் இயல்புக்குத் திரும்புகையில், உலகம் மூச்சுவிட முயற்சித்துத் திணறிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் 176 நாடுகளில் 260கோடிப்பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அடுத்தவருடன் உறவாடவோ, ஊரில் நடக்கவோ, நெருங்கிச் செல்லவோ, எந்த முனைப்புக்கும் இடமில்லை. எந்தளவிற்குத் தனிமையைப் பேணுகின்றோமோ அந்தளவிற்கு இந்த வைரஸைத் தூர விலக்க முடியும். இந்த மருத்துவ தத்துவத்தை உணரந்துகொண்ட உலக நாடுகள், அதன் குடிமக்களைக் காப்பதற்குப் பகிரதப்பிரயத்தனப்படுகின்றன.

உலக வல்லரசு எனச்சொல்லிக்கொள்ளும் ஐக்கிய அமெரிக்காகூடச் சண்டைக்காரன் காலில் வீழும் சரித்திரத்தை எழுதத் தயாராகிவிட்டது.

பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும் கொரோனாவால் குலைநடுங்கிக்கொண்டிருக்கின்றன.

வெள்ளைக்காரர்கள் ஒழுக்கமானவர்கள், இறுக்கமானவர்கள் என்று தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்ளும் ஏனைய சமூகத்தவர்கள், இன்று அவர்களின் நாடுகளைப் பார்த்து மூக்கின்மேல் விரல் வைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சீனாவுக்கு அடுத்தபடியாக 130கோடி சனத்தொகையைக் கொண்ட இந்தியா 21 நாட்களுக்கு முற்றாக முடக்கிக்கொண்டுள்ளது. அந்தக் காலக்கெடு நிறைவின்போது வைரஸ் தொற்றுக்கு எத்தனை ஆயிரம்பேர் அல்லது இலட்சம்பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும். இந்தப் பேராபத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள்தான் போலிக்காரணங்களைக் காண்பித்து நகரங்களில் சுற்றித்திரிய முயற்சிக்கின்றார்கள்.

சுருங்கச் சொன்னால், உலக நாடுகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு வெறும் சட்டம் அல்ல, அஃது உயிர் காக்கும் ஊரடங்கு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையில் அமுலில் உள்ள ஊரடங்குக் காலம் அல்லது தனிமைப்படுத்தல் காலத்திற்குப் பின்னர் என்ன நடக்கும் என்று அநேகர் அங்கலாய்க்கிறார்கள், சிலருக்கு இது நையாண்டியாகவும் இருக்கிறது.

இலங்கையர் அனுபவிக்கும் இந்தப் 14 நாள் தனிமைப்படுத்தல் உயிர் காக்கும் ஊரடங்கு காலத்திற்குப் பின்னர்தான் ஆபத்தே இருக்கிறது. ஒன்றில் பல ஆயிரம்பேர் வைத்தியசாலைக்குச் செல்லலாம், அல்லது ஒன்றும் இல்லையென்று நிம்மதிப்பெருமூச்சுவிடலாம். இந்தப் பாரதூரம் புரியாதவர்க் பேஸ்புக்கில் நகைச்சுவையைப் பதிவிடுகிறார்கள். இன்னும் சிலர் பாடல் இயற்றிப்பாடிப் பழித்துக்கொண்டிருக்கிறார்கள். பிரபலமான கலைஞர்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா, இல்லையா என்பதைப்; 14 நாட்களிலேயே தெரிந்துகொள்ள முடியும். உண்மையில் இந்தக் காலப் பகுதி என்பது சுனாமிப் பேரலைக்கு முன்னர் கடல் உள்வாங்கியதற்கு ஒப்பானது. ஆகவே, கடல் உள்ளே சென்றிருக்கும் இந்தக் காலப்பகுதிதான் இலங்கையர்களுக்கான 14 நாள். கடல் உள்ளிழுத்துச் சில மணித்தியாலங்களில் பேரலை எழும். கொரோனா அலையானது 14 நாட்களுக்குப் பின்னர் எழும். அவ்வளவுதான்.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு கொரோனா நோயாளியிடமிருந்து 30 நாட்களில் 450பேருக்கு வைரஸ் பரவும். அதே நபரால் 67 நாட்களில் இரு இலட்சம் பேருக்குப் பரவும்! அதிலிருந்து மேலும் 14 நாட்களில் இரண்டு இலட்சம் பேருக்குப் பரவும். அதனால், குடிமக்களைப் பாதுகாக்க நாட்டை முடக்கிவைப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று உருக்கமாகக் கூறியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி.

அதேபோன்று துணிச்சலாகம் உறுதியாகவும் தீர்மானம் எடுக்கக்கூடிய ஜனாதிபதியொருவர் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்குத் தலைமை வகிப்பது இலங்கையர்கள் செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். யுத்த காலத்தில்கூட நாட்டை முடக்கவில்லை, வைரசுக்கா? என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாலும், காலத்தின் கட்டாயம் கருதி, தேவையான சமயத்தில், பொருத்தமான சந்தர்ப்பத்தில் இறுக்கமான தீர்மானத்தை மேற்கொண்டு நாட்டு மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு!

இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டியது நாட்டு மக்களின் தலையாய கடமை. வாழ்வாதாரம், பொருளாதாரம் எனப் பல துறைகளையும் புரட்டிப்போட்டுள்ள இந்தக் கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டெழுவதற்கு ஒரே தேசத்தவர்களாக ஒன்றுபட்டு முன்வரவேண்டியது ஒவ்வோர் இலங்கையரின் கடமையாகும்.

தனிப்பட்ட ரீதியிலும் சமூகத்திலும் நாட்டிலும் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையிலிருந்து கடந்து வருவதற்கு, மருத்துத்துறையினரும் அரசும் அடிக்கடி வழங்கும் ஆலோசனைகளையும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்களையும் இறுக்கமாகப் பேண வேண்டும்.

அதேநேரம், இந்தப் பலவீனமான சூழ்நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு. சுயலாப அரசிலில் ஈடுபடுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆனானப்பட்ட வல்லரசுகளே திணறும்போது, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பும் வதந்தியால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். மொத்தத்தில் உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டான மக்கள் வாழும் நாடு இலங்கை என்றால், அரசினதும் அதிகாரிகளினதும் சட்டதிட்டங்களை மதித்துச் செயற்பட்டு முன்மாதிரியைக் காண்பிக்க வேண்டும். இல்லையேல், கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றுக்கு எவரும் ஆளாகவில்லை என்ற நிம்மதியான செய்தியை, எப்ரல் 03ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றியே படிக்க வேண்டிவரும். ஏப்ரல் 03ஆம் திகதி என்பது இலங்கையர்களுக்குத் தீர்க்கமான நாள் என்பதைப் புரிந்துகொண்டால், வாழ்க்கையை மீண்டும் நிம்மதியாக ஆரம்பிக்க முடியும்.

நிறைவாக, அரசின் நடவடிக்கைகளை அமுல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் எல்லா மக்களுக்கும் இயன்றளவு எல்லாச் சேவைகளையும் கொண்டு சேர்ப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். இப்படி அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மருத்துவ துறையினர், பாதுகாப்புத்துறையினர், தன்னார்வ தொண்டர்கள், வர்த்தகர்கள், பணியாளர்கள் அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் இந்த நாடே தலைவணங்கும்.

Comments