சொந்த ஊர் திரும்ப முடியாது சிக்கியுள்ளோர் விபரம் தெரிவியுங்கள் | தினகரன் வாரமஞ்சரி

சொந்த ஊர் திரும்ப முடியாது சிக்கியுள்ளோர் விபரம் தெரிவியுங்கள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்று மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதுள்ள மக்கள் தமது விபரங்களை தெரியப்படுத்துமிடத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில்  மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

உலகை இன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று இலங்கையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் அத்தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் ஊரடங்குச் சட்ட நடைமுறையையும் மேற்கொண்டுள்ளதால் பலர் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக எமக்கு தொலைபேசி ஊடாக தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.

ஆனாலும் இந்த ஊரடங்குச் சட்ட நடைமுறை ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களதும் பாதுகாப்பு கருதிய ஒன்றாக அமைவதால் அந்த நடைமுறையை எமது மக்கள் மதித்து பின்பற்ற வேண்டியதும் அவசியமானது.

அந்தவகையில் ஊரடங்குச் சட்ட நடைமுறை நாட்டில் அமுலாக்கப்படுவதற்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களுக்குள்ளேயும் இலங்கையின் ஏனைய பிற மாவட்டங்களுக்கும் தொழில் ரீதியாகவோ அன்றி வேறு பல தேவைகள் கருதியோ சென்று மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாது இருப்பவர்கள் தமது முழுப் பெயர், அடையாள அட்டை இலக்கம், திரும்ப வேண்டிய சொந்த முகவரி, சொந்த பிரதேச செயலக பிரிவு, தொலைபேசி இலக்கம், தற்போது தங்கியுள்ள முகவரி உள்ளிட்ட விபரங்களை  திரட்டி  0777 781 891 WhatsApp (வட்ஸ்அப்) இலக்கத்திற்கு அனுப்பும் பட்சத்தில் அதற்காதன தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments