நேரலை ஒளிபரப்பை இமாமாக கொண்டு தராவீஹ் தொழலாமா? | தினகரன் வாரமஞ்சரி

நேரலை ஒளிபரப்பை இமாமாக கொண்டு தராவீஹ் தொழலாமா?

நோன்பு காலங்களில் தராவீஹ் தொழுகை மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு முக்கியமான சுன்னா (நபிகளாரின் வழிமுறை) வாகும். ஆனால் அதனை ஜமாஅத்தாக நிறைவேற்றுவது கட்டாயமான சுன்னத் அல்ல. தராவீஹ் தொழுகை கூட்டாக தொழுவது ஆகுமானது என்ற கருத்தே தொன்று தொட்டு நிலவி வருகிறது. எந்த அறிஞரும் அதனை கூட்டாக தொழுவது வாஜிப் (கட்டாயக் கடமை) என்று எங்கேயும் கூறியது கிடையாது.

ரமழானில் விசேட ஆர்வம் எடுத்து தொழும் தராவீஹ் தொழுகையானது வீட்டில் தனித்து தொழுவதே மிகவும் ஏற்றமுடையது என நபியவர்களின் சுன்னா கற்றுத் தருகிறது. இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மஸ்ஜித் நபவியில் தனக்காக ஒரு கூடாரம் செய்து அதில் தனியாக தராவீஹ் தொழும் போது சில தோழர்கள் நபிகளார் உணராத வகையில் ஊடுருவி வந்து நபி (ஸல்) அவர்களை பின்தொடர்ந்து தொழுதார்கள். உண்மையில் இது ஒரு ஆர்வக் கோளாறு என்பதை நபிகளார் புரிந்து கொண்டார்கள். ஆனால் இதில் ஆர்வம் கொண்ட தோழர்கள் இன்னொரு நாள் இரவு வந்து காத்திருந்த போது அந்த பிரத்தியேக கூடாரத்திற்கு நபிகளார் வருகை தரவில்லை. நேரம் கழிந்து கொண்டே சென்றது நபியவர்கள் வரவேயில்லை. அதனால் தோழர்கள் சப்தம் எழுப்பத் தொடங்கினர்கள். எப்படியாவது பின்னால் நின்று தொழவேண்டுமே என்ற ஆர்வத்தில் சிறிய கூழாங்கற்களால் கதவுக்கு எறிந்தார்கள். அப்போது இறை தூதர் (ஸல்) அவர்கள் கோபத்தோடு வெளியே வந்து 'உங்களுடைய இந்த செயல் காரணமாக தராவீஹ் கடமையாக்கப்பட்டு விடுமோ என்று பயந்தேன். இத்தகைய சுன்னத்தான தொழுகைகளை நீங்கள் உங்கள் வீடுகளில் தான் தொழுது கொள்ள வேண்டும். கடமையாக்கபட்ட தொழுகையை தவிர. ஒரு மனிதனின் தொழுகைகளில் மிகவும் சிறந்தது அவனது வீட்டில் நிறைவேற்றும் தொழுகையாகும் என்றும் நபி (ஸல்) கூறினார்கள்.

(ஆதாரம் - ஸஹீஹ் முஸ்லிம்)

இமாம் முஸ்லிம் அவர்கள் இந்த சம்பவத்தை குறிப்பிடும் அத்தியாத்திற்கு 'வீட்டில் தொழுவது விரும்பத்தக்கது, பள்ளிவாசலிலும் தொழலாம்' என மகுடமிட்டுள்ளார்கள்.

அதனால்  தராவீஹ் தொழுகையின் அசல் வடிவம் தனியாக வீட்டில் தொழுவதாகும். சில தோழர்கள் கூட்டாக தொழ ஆர்வம் கொண்ட போதும் கூட நபியவர்கள் தடுத்து நிறுத்தி விட்டர்கள். அன்றிலிருந்து  தராவீஹ் தனித்து தொழுவதே வழமையாக இருந்து வந்தது. இந்த வழமை நபிகளாரின் காலத்திலும் அபூபக்கர் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பப் பகுதி வரையும் தொடர்ந்தது.

பின்னர் உமர் ரழி அவர்கள் ஒரு நாள் இரவு ஊரை சுற்றி வலம் வந்த வேளை மக்கள் தனித்தனியாகவும் சிலர் சிறு சிறு குழுக்குழுவாக பிரிந்தும் அங்கும் இங்குமாக கூட்டாக தொழுகை நடத்துவதையும் அவதானித்தார்கள். இப்படி தொழுவதை விட ஒரு இமாமின் பின்னால் அனைவரையும் ஒன்று சேர்த்தால் நல்லதென்று கருதினர்கள். பின்னர் உபை இப்னு கஃப் (ரழி) அவர்களின் தலைமையில் அனைவுரும் ஒரு ஜமாஅத் தொழுகையாக தொழுமாறு பணித்தார்கள்.

இன்னொரு நாள் இரவு நேரத்தில் ஊரை சுற்றி வலம் வந்த போது மக்களை அவதானித்தார்கள். மக்கள் ஒரு இமாமை தொடர்ந்து அழகாக தொழுவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் இது ஆரம்பத்தில் இருந்த வழிமுறையன்று. எனவே இது புதிதாக இருந்தாலும் சிறந்த வழிமுறை என்றார்கள். அவ்வாறு கூறிவிட்டு 'இப்போது தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுபவர்களை விட பிந்திய இரவில் எழுந்து தொழு வேண்டும் என்று நிய்யத்தோடு தூங்குபவர்கள் மிகவும் சிறந்தவர்கள்' என்றும் சொன்னார்கள்.

(ஆதாரம் - புகாரி)

இன்று நாம் தராவீஹ் என்றும் தஹஜ்ஜுத் என்றும் கியாமுல்லைல் என்றும் பல பெயர்கள் கொண்டு அழைப்பது இரவு நேரத் தொழுகையை தான். இஷாவின் பிந்திய சுன்னத் தொடக்கம் சுபஹ் தொழுகை நேரம் வரும் வரை இரவில் தொழும் தொழுகைகள் யாவும் இரவு நேரத் தொழுகையாகும். வித்தியாசமான பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் அவை யாவும் ஒரு தொழுகையைதான் குறிக்கின்றது. அதற்கு பொதுப் பெயர் இரவு நேரத் தொழுகையாகும்.

புனித ரமழான் மாத்தில் இந்த தொழுகைக்கு தராவீஹ் என விசேட பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. ஏனைய நாட்களில் தஹஜ்ஜுத் என்றும் கியாமுல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் தொழுகை ஒன்றுதான். நபி (ஸல்) அவர்களின் ரமழான் கால தொழுகை பற்றி கேட்கப்பட்ட போது  ரமழான் மாதத்திலும் ஏனைய மாதங்களிலும் நபியவர்கள் 11 ரக்அத்களுக்கு அதிகமாக தொழுதது கிடையாது என ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் - புகாரி).

ரமழானில் அதி கூடிய நன்மைகள் கிடைப்பதாலும் அம்மாதத்தில் இரவுத் தொழுகையின் சிறப்புக்கள் அதிகமாக வந்திருப்பதாலும் நீண்ட நேரமெடுத்து இடைக்கிடையே ஓய்வுகளுடன் தொழுவதாலும் ரமழானில் அதற்கு தராவீஹ் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுவர்.  

என்றாலும் இஸ்லாமிய சட்டப்பரப்பில் தராவீஹ் தொழுகையின் அந்தஸ்து யாது என்பதை புரிந்து கொள்வதன் மூலம் தான் அதனை நேரலைகளைப் பின்பற்றி தொழுவதா இல்லையா என்பதை மிகச்சரியாக விளங்க முடியும். அதனால் தான் அதன் எண்ணிக்கை பற்றிய ஹதீஸ், நபிகளார் காலத்தில் அதன் நடைமுறை வடிவம் பற்றி பேச வேண்டிய தேவை ஏற்பட்டது. உண்மையில் ரமழான் மாதத்தின் ஒரு விசேட அமலாக கொண்டு தராவீஹ் தொழுவதை கொஞ்சம் கூட குறைத்து மதிப்பிடவோ அல்லது அலட்சியமாகவோஇங்கு பார்க்கப்படவில்லை. முடியுமான அளவு நேர்த்தியாக அழகாக எவ்வளவு நேரம் எடுத்து எத்தனை ரக்கஅத் தொழுதாலும் அல்லாஹுத்தஆலா சிறந்த கூலி தரப் போதுமானவன்.

ஆனால் ஒவ்வொன்றுக்கும் அதன் அந்தஸ்துக்கு ஏற்ப அதற்குரிய கனதியை கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால்  நேரடி ஒளிபரப்பை பின்பற்றி தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக (கூட்டாக) தொழுவது பற்றி அறிஞர்கள் கொடுத்துள்ள பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்பு)  நோக்குவோம். பெரும்பான்மையான ஆரம்பகால அறிஞர்களும் நவீனகால சட்டக் கலை வல்லுனர்களும் ஜமாஅத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இமாமை பின்தொடர்தல் ஒரு முக்கிய நிபந்தனையாக கூறுவர். இமாமை தொடர்வது என்பது நேரடியாக நிலத்தொடர்புடன் கூடிய பின்பற்றுதலையே அது குறிக்கும்.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் இதில் நெகிழ்வான கருத்தைக் கொண்டுள்ளார்கள். பெரும்பான்மை அறிஞர்கள்  பள்ளிவாசலுக்கு வெளியே தொழும்போது மக்கள் நடைபாதை குறுக்கிட்டால் பாதைக்கு மறுபக்கம் தொழுவது இமாம் ஜமாஅத்தாக கொள்ளப்படுவதில்லை என்றும் ஒரு ஆறு குறுக்கிட்டால் அதுவும் செல்லுபடியாகாத தொழுகையே எனவும் பத்வா கூறியுள்ளனர்.

ஐரோப்பிய பத்வா கவுன்ஸில் நேரடி ஒளிபரப்பபை பின்பற்றி இமாம் ஜமாஅத்தாக தொழுவது கூடாது என்று பத்வா வழங்கியுள்ளது. காரணம் நேரலையை பின்பற்றி தொழுவது நிலத்தொடர்பு அற்ற நிலையில் இமாமை பின்தொடர்வதாகும்.  அதனை ஷரீஆ சட்டம் அங்கீகரிப்பதில்லை.  கடமையாக்கப்பட்ட தொழுகைகள் கூட்டாக தொழுவதற்கு சில  நோக்கங்களும் உள்ளன. பரஸ்பர சந்திப்புக்கள், சுக துக்கங்களை அறிதல், பரஸ்பர புரிந்துணர்வு, சகவாழ்வுக்கான வாய்ப்புகள் போன்ற சமூக நலன்கள் அதனால் எதிர்பார்க்கப்படுகின்றன. தொழுகையில் மிக முக்கியமான இன்னொரு விடயம் நெருக்கமாக சீரான அணியணியாக நின்று தொழுவதாகும். ஒரு அணி பூர்த்தியாக்கப்பட்ட பின்னரே அடுத்த அணி ஆரம்பிக்கபட வேண்டும்.

இதற்கு பின்னாலும் பாரிய சமூக நன்மைகள் உள்ளன. உயர்வு தாழ்வு, ஆண்டான் அடிமை, கருப்பு வெள்ளை, உள்ளவன் இல்லாதவன் என்ற சுவர்கள் இடிக்கப்பட்டு சமத்துவம் அதில் போதிக்கப்படுகிறது.  இவை யாவும் நேரலைகளை பின்பற்றுவதால் இல்லமால் போவதுடன் பள்ளிவாசலுடனான தொடர்புகளும் குறைந்து போகலாம். எல்லாவற்றையும் விட இமாம் ஒருவரை நேரடியாகப் பின்பற்றுதல் இல்லாததால் தொழுகையும் செல்லுபடியாகாது.

அந்த வகையில் கலாநிதி அஹ்மத் ரய்ஸுனி போன்ற சில மூத்த உலமாக்கள் சுன்னத்தான ஒரு தொழுகை நேரடி ஒளிபரப்பின் பின்னால் நின்று தொழுவதை அனுமதிக்க சட்டத்தில் இடம்பாடு உள்ளது எனக் கூறியிருக்கின்றனர். இருந்தாலும் நாடுகள் மூடப்பட்டுள்ள இந்த காலம் தராவீஹ் தொழுகை அதனுடைய அசல் வடிவத்திற்கு மீளுகிறது என்றும் அவ்வாறு தொழுவதுதான் அடிப்படையான முறைமை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பள்ளிவாசலில் தராவீஹ் தொழுவது பலவீனர்களின் வழிமுறை என்றும் வீட்டில் தொழுவது பலசாலிகளின் வழிமுறை என்றும் கலாநிதி ரய்ஸுனி தெரிவித்துள்ளார். தராவீஹ் தொழுகைக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்து மிகவும் தெளிவானது. ஜமாஅத்தாக தொழுவது ஒரு வசதிக்காகவும் இலேசிக்காகவும் உள்ளதே தவிர ஆர்வம் ஊட்டப்பட்ட ஒரு அமல் அல்ல. அடிப்படை நிபந்தனையான நேரடியாக இமாமை பின்தொடர்தல் என்ற நிபந்தனையும் இதில் இல்லை. இத்தகைய விவகாரங்களில் இஜ்திஹாத் செய்வது வரவேற்கத்தக்க விடயமுமன்று. எனவே ரேடியோ அல்லது டி.விவிற்கு பின்னால் நின்று தொழுவது ஷரீஆ சட்ட ஒழுங்கிற்கு புறம்பாகவே உள்ளது. ஒரு பேச்சுக்கு ஆகும் என்று வைத்துக் கொண்டாலும் நாட்டுக்கு நாடு நேர வித்தியாசம் உள்ளது. சவுதியின் தொழுகையை பின்பற்ற நினைப்பவர்களுக்கு பல நாடுகளில் இது சாத்தியமாகாது.

எனவே இபாதத் விடயங்களில் ஆசைகளுக்கும் வசதிகளுக்கும் ஆர்வம் காட்டாமல் சட்டப்பரப்பில் உடன்பட்ட விடயங்களுக்கு கூடுதல் கவனம் கொடுத்து செயற்படுதே மிகவும் நல்லது. கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் காலத்தில் வாழும் போது அரசும் சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள வழிகாட்டல்களை பின்பற்றுவது கட்டாயமாகும். அந்த வகையில் வீட்டில் தனியாக அல்லது கூட்டாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்றுவதே சுகமானது. ஷரீஆவிற்கு உடன்பட்டு வரக்கூடியது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி)

Comments