நம் கண்முன்னே நடமாடும் தெய்வம் | தினகரன் வாரமஞ்சரி

நம் கண்முன்னே நடமாடும் தெய்வம்

“அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே, நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது”

என சினிமா பாடல் கூறுகின்றது. இது ஒரு சினிமாப் பாடலிலிருந்து பெற்ற உதாரணம் மாத்திரமே! இதுபோன்று பல சினிமாப் பாடல்களிலும், புரட்சி, மற்றும் பக்திப் பாடல்களிலும், கிராமியப் பாடல்களிலும் அம்மாவைப் போற்றும் வாசகங்கள்  பொதிந்துள்ளதைக் காணலாம்.

பிறப்பெடுத்த ஜீவன்கள் அத்தனையும் அம்மாவின் கருவறையிலிருந்தே இந்த உலகைக் கண்டிருக்கின்றன என்பது நிஜமானதாகும். ஆனாலும் தமது தாயை போற்றி வழிபட்டு தமது வாழ்நாட் கடமைகளுக்குச் செல்பவர்களும் உண்டு, மாறாக முதியோர் இல்லங்களிலும் தாய்மாரை விடுபவர்களும் உண்டும்.

தம்மை பெற்று வளர்த்து ஆளாக்கி தனது பிள்ளை அதுவென்பதை உவகுக்குக் காட்டிய தாய்குச் செய்யும் சேவையத் தவிர ஒருவருக்கு உணர்ந்த சேவை வேறொன்றும் இருக்க முடியாது. தமது தாயைப் போற்றி வணங்கினால் உயர்ந்த கோபுரங்கள் உடைய ஆலயங்களுக்கும் பணம் செலவு செய்து சென்று வழிபாடு செய்ய வேண்டியதில்லை என முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.  எனினும் இவ்வாறானவர்களையும் ஈர்த்தெடுக்கும் முகமாகவேனும் 1908 ஆம் ஆண்டிலிருந்து அன்னையத்தினம் கொண்டாடப்பட்டு வரப்படுகின்றது.

அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் அற்றது, பாசமும், அன்பும் ததும்பவுது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக நடமாடும் கடவுள்.

அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்குள் அமைந்துள்ளது. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

அம்மாவுக்கு அம்மா என்ற ஒரு ஸ்தானம், மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, பிள்ளைகளுக்குத் தாயாக, அம்மா என்ற உயர்வான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து, கடமைகளைச செய்து, குடும்ப பாரத்தைச் சுமந்து எவ்வளவு  கஷ்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அன்புடன் சிரித்து நடமாடும்   ஜீவன் அது. இவையனைத்தையும் அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே நம்மால் அவதானிக்க முடியும்.

அம்மாவை வணங்குங்கள்

அம்மாவை கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வருடத்தின் மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை இன்றாகும். இன்று அன்னையர் தினம். இந்த அன்னையர் தினத்தில் அம்மாவை குளிர்விக்க, ஆச்சரியப்படுத்த, இன்று ஒரு நாளாவது அம்மாவை அமர வைத்து ஓய்வு கொடுத்து, பரிசுகள் கொடுத்து, விரும்பியதை வாங்கிக் கொடுத்து, வாழ்த்து அம்மாவுடன் பொழுதை போக்க வேண்டும்.

அன்னையர் தினம் எப்படி பிறந்தது என்று தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மரியா ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜர்விஸ். தனது அம்மாவின் உந்துதலின் பேரில் அமெரிக்காவில், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக “மதர்ஸ் டே ஒர்க் கிளப்” என்ற அமைப்பை உருவாக்கினர். இதன் மூலம் அடிக்கடி மருத்துவர்களை வரவழைத்து, தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு குழந்தைகளைப் பேணிக் காத்தல், ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு போன்ற பயிற்சிகளை அளித்தார்.

ஒருமுறை தனது தாய் நடத்தி வந்த ஞாயிறு பள்ளியில் போதித்துக் கொண்டு இருக்கும்போது, அன்னையைப் போற்றுவதற்கு ஒரு நாள் “அன்னையர் தினம்” வரும் என்ற பாடல் பாடப்பட்டது  அது அவரது காதுகளிலும் ஒலித்துச் சென்றது.

இந்நிலையில் அவரது அம்மா 1905ஆம் ஆண்டில் இறந்துவிட அவரது ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில், 25 ஆண்டுகள் அவரது அம்மா போதித்து வந்த ஆண்ட்ரூஸ் தேவாலயத்திற்கு 1908, மே 10 ஆம் திகதி, அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டுகள் கொடுத்து அனுப்பினார். அன்றைய தினத்தை அன்னையர் தினமாகவே கொண்டாடினார்.

அன்னையர் தினத்தை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து அன்னா மேரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் 28வது ஜனாதிபதியான தோமஸ் வுட்ரூ வில்சன், அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914, மே 9ஆம் திகதி கையெழுத்திட்டார். இதையடுத்து, அன்னையர்களுக்கு மரியாதை, அன்பு செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படும், அன்று தேசிய விடுமுறை விடப்படும் என அமெரிக்க அரசு அறிவித்தது. இவ்வாறு பிறந்ததுதான் அன்னையர் தினமாகும்.

ஆனாலும், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உட்பட பல்வேறு நாடுகளில் மே இரண்டாவது  ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடினாலும், பிரித்தானியாவில் ஈஸ்டர் திருநாளில் இருந்து மூன்று வராங்களுக்கு முன்பு வரும் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடுகின்றனர்.

எது எவ்வாறு அமைந்தாலும், நம்மை தனது வயிற்றில் சுமந்த அம்மாவுக்கு நன்றிக் கடனாக எத்தகைய விடயங்கள் செய்தாலும் அது ஈடாகாது. அம்மாவை தினமும், போற்ற வேண்டும், வணங்க வேண்டும், அம்மா இல்லையேல் நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகைக் கண்டிருக்க முடியாது, நாம் அனுபவிக்கும் சுகபோகங்களை அம்மா இல்லையேல் அனுபவித்திருக்க முடியாது. அதற்காக தினமும் விக்கிரகங்களை வணங்குவது போல் நம் கண்முன்னே நடமாடும் அம்மா எனும் கடவுளை வணங்க வேண்டும். அம்மாவை வணங்கிவிட்டு எக்காரியத்தைச் செய்தாலும் அது வெற்றிபெறும்.

கண்ணை இமை காப்பது போல் தமது பிள்ளைக்கு சிறிய கீறல்கூட ஏற்படாது பார்த்துப்இ பார்த்து நோய் நொடியின்றி வளர்த்தெடுத்த அன்னையை தினமும் வணங்க முடியாவிட்டாலும், உலகில் பொதுவாகக் காணப்படுகின்ற ஒவ்வொரு ஆண்டும் மே மாத்தில் வரும் இரண்டாவது  ஞாயிற்றுக்கிழமையன்று  வரும் அன்னையர் தினத்திலாவது அம்மாவைப் போற்றி வணங்கி வழிபாடு செய்து அம்மாவிற்கு விருப்பமான பொருட்களை லாங்கிக் கொடுத்து அம்மாவின் திருப்பாதங்களைத் தொட்டு வணங்கினாலேயே அது சாலச் சிறந்ததாக அமையும் எனலாம்.

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்”

இவனைப் பெற பெற்றோர்கள் என்ன தவம் செய்தார்கள் என்ற சொல்லைப் பெற்றோர்கள் கேட்கும்படி செய்வதே, பெற்றோருக்கு மகன் செய்யும் உதவி என பொய்யா மொழிப் புலவர் திருக்குறள் வாயிலாக எடுத்தியம்பியுள்ளார் என்பது நிதர்சனமாகும்.

வ.சக்திவேல்

Comments