இலாபமீட்டும் முன்னணி நிறுவனமாக இ.போ.சவை கட்டியெழுப்பத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

இலாபமீட்டும் முன்னணி நிறுவனமாக இ.போ.சவை கட்டியெழுப்பத் திட்டம்

இலங்கை போக்குவரத்து சபையை, இலாபமீட்டும் முன்னணி நிறுவனமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்கு பதிலாக திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்துச் சபையை  மாற்ற முடியுமென்றும் ஜனாதிபதிகுறிப்பிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கிழமை நாட்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் அதிக வாகன நெரிசல் காணப்படுகிறது. இந்த நெரிசலை குறைப்பதற்காக தமது சொந்த  வாகனங்களில் அலுவலகங்களுக்கு வருவோரை பொதுப் போக்குவரத்து சேவையுடன் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதற்கு தீர்வாக தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் கார்களை நிறுத்தி அலுவலகங்களுக்கு பஸ் வண்டிகளில் பயணம் செய்வதற்கு தேவையான முறைமையொன்றை (Park and Drive) உடனடியாக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி முன்மொழிந்தார். இதற்கு முழுமையான வசதிகளைக் கொண்ட பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்காக பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து பாடசாலை பஸ் சேவையை மேம்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பாடசாலை பஸ்களை மஞ்சள் நிறத்துடன் வீதிகளில் முன்னுரிமை வழங்கப்படக்கூடிய வகையில் சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளையும் தனியார் பஸ் வண்டிகளையும் இரண்டு நிறங்களில் சேவையில் ஈடுபடுத்துவன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஊழியர்களை வலுவூட்டுதல், புதிய முறைமைகளை அறிமுகப்படுத்தல், வீண்விரயத்தை குறைத்தல் மற்றும் திருட்டுக்களை ஒழித்தல் போன்றவற்றுக்காக முறையான நடவடிக்கைகளை பின்பற்றவேண்டியது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நிறுவனத்தை முன்னேற்றுவதற்காக தொடர்ச்சியாக ஆய்வுகள் மற்றும் மீளாய்வுகள் நடைபெற வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுமார் 4,500 பேர் கொண்ட திறமையான தொழிநுட்ப அதிகாரிகள் குழுவொன்று இலங்கை போக்குவரத்து சபையிலுள்ளனர். அவர்களிடமிருந்து முழுமையான பயனை பெற்று நிறுவனத்திற்கு வெளியே பராமரிப்புக்காக செயற்கட்டளைகளை பெற்று வருமானம் ஈட்ட முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பட்டார். பயன்படுத்தப்படாத பெருமளவான காணிகள் இலங்கை போக்குவரத்து சபையிடமுள்ளன. அக்காணிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும் வருமானம் ஈட்டமுடியும்.

கிராமிய பிரதேசங்களிலிருந்து விவசாய அறுவடைகளை கொண்டுசெல்வதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவக்கூடிய வாய்ப்புகள் இலங்கை போக்குவரத்து சபையிடமுள்ளதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பயிற்சிப் பாடசாலைகளை மேலும் மேம்படுத்தி ஊழியர் அறிவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டத்திற்கமைய மொத்த நடடிவக்கைகளையும் முன்கொண்டு செல்வதற்கும் ஜனாதிபதினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, தலைமை நிறைவேற்று அதிகாரி சாகர ஹேமந்த வடுகே, பணிப்பாளர் நாயகம் அத்துலகுமார மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Comments