மூன்றிலிரண்டுக்கு ஆதரவு எனும் எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை | தினகரன் வாரமஞ்சரி

மூன்றிலிரண்டுக்கு ஆதரவு எனும் எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை புதிய அரசுக்கு  வழங்குவோம் எனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக அரசாங்கம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினை வழங்கி அம்மக்கள் எதிர்பார்க்கும் சகலவிதமான அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். அரசாங்கத்தின் நல்லெண்ணம் மட்டுமே தமிழ் மக்களின் மனதை மாற்ற கூடியதாக இருக்கும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் நலன்களுக்காக மட்டுமே தமது கட்சி இவ்வளவு தூரம் பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதனால் தமிழ் மக்கள் சார்பாக தாங்கள் எடுக்கும் எந்த ஒரு நல்ல முயற்சியையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.  தற்போது உள்ள பிரச்சினை என்னவெனில் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.  அதனை முதலில் அரசாங்க தரப்பில் ஆரம்பிக்க வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் அவர்களது அமைச்சரவை அமைச்சர்கள் பலரும் தற்போது தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்,  அரசியலமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

ஆனால் அவற்றை அவர்கள் செயலில் காட்ட வேண்டும். அப்போதுதான் எமக்கு அவர்கள் மீது நம்பிக்கை வரும்.  தமிழ் மக்களும் அவர்களை நம்பலாம் எனும் ஆணையை எமக்கு தருவார்கள் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

Comments