இன அடையாளத்தை மறைக்கும் பிறப்பு சான்றிதழ் தேவையில்லை | தினகரன் வாரமஞ்சரி

இன அடையாளத்தை மறைக்கும் பிறப்பு சான்றிதழ் தேவையில்லை

பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என தமது அடையாளங்களை ஏன் மறைக்க வேண்டும். அனைவரும் இந்நாட்டில் தமது தனித்துவத்துடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

பிறப்புச் சான்றிதழில் இனம் மற்றும் மத அடையாளங்களை நீக்கி புதிய நவீன பிறப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பதிவாளர் நாயகம் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த விடயத்துக்கு அமைச்சர் விமல் வீரவங்க எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் ‘தினகரன்’ அவரிடம் வினவிய போது, 

நாம் அனைவரும் இலங்கையர்கள். இதை புதிதாக எவரும் சொல்ல வேண்டியதில்லை. இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் ஒன்றும், அடையாள அட்டையொன்றும் இருந்தால் அவர் இலங்கையர்தான். என்றாலும் அவர் இலங்கைச் சிங்களவராக இருக்க முடியும். அல்லது இலங்கைத் தமிழராக இருக்க முடியும். அல்லது இலங்கை முஸ்லிமாக இருக்க முடியும். எதற்காக எமது தனித்துவத்தை மறைக்க வேண்டும். சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற தமது தனித்துவத்தை எவரும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. 

இலங்கையில் தமிழர்களாக சாதாரண மக்களுடன் வாழ்வதில் எவருக்கும் பிரச்சினைகள் உள்ளனவா?. எனக்கு தெரிந்து அவ்வாறு எவ்வித பிரச்சினைகளுமில்லை. அமெரிக்காவை பார்த்தால் வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவர்களும் இடையிலான பிரச்சினைகள் மிகவும் உச்சமாக உள்ளன. இந்த விடயங்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டவை. தற்போது ஆட்சி மாறியுள்ளதால் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடிதான் தீர்மானங்களை எடுக்க முடியும். பழைய தீர்மானங்களை அவ்வாறே முன்னோக்கி கொண்டுசெல்ல அதிகாரிகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Comments