செய்யும் செயலில் அவதானம் வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

செய்யும் செயலில் அவதானம் வேண்டும்

ஒரு ஊரில் இளம் பெண்ணொருவர் பால் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள். தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது என் போன்ற மற்றப் பெண்களெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.    ஒருநாள் அவள் வழமைபோல் பாலைக் கறந்தெடுத்து குடத்தினுள் விட்டு அதனை விற்பதற்காக தெரு வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள்.  

இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும். அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன். அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன். அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன்.  

 வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்கக் கூடியதாக உல்லாசமாக இப்படி நடப்பேன் என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து விசுக்கி அழகாக நடக்க ஆரம்பித்தாள்.    என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது.  

 அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன் பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.    அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள்.  

 எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே!  

செய்யும் செயலில் அவதானம் வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.

தாரிணி குமார்,
தலவாக்கலை.  

Comments