அரச காணிகளில் குடியிருப்போருக்கு அக்காணிகளை வழங்கும் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

அரச காணிகளில் குடியிருப்போருக்கு அக்காணிகளை வழங்கும் திட்டம்

அரசுக்கு சொந்தமான காணிகளில் குடியிருக்கும் பொது மக்களுக்கு அந்த காணிகளை பகிர்ந்தளித்து சட்டரீதியான ஆவணங்களை வழங்குவதற்கான அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டு நெறிகளை உள்ளடக்கிய அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.  

விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான காணிக் கச்சேரி எதிர்வரும் செப்.01ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதிக்கிடையில் பிரதேச செயலாளர் தீர்மானிக்கின்ற திகதியில் நடத்தப்படுமெனவும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சமூக மட்டத்தில் செயற்பட்டுவரும் பொது நிறுவனங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள், இதற்காக விண்ணப்பிக்க தகுதியுடைய மக்களை அறிவூட்டுவது பயனளிப்பதாக அமையும்.  

அரச காணியொன்றில் நிரந்தர வீடமைத்து, விவசாய நடவடிக்கையினை மேற்கொண்டு அல்லது ஏதேனும் அபிவிருத்தி நடவடிககையொன்றை மேற்கொண்டு உரிமை பாராட்டும் மக்களுக்கு சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக நாடு முழுவதையும உள்ளடக்கும் வகையில்(விசேட அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த) தகுதியானோரைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றன.  

தங்களது விண்ணப்பத்தை பின்வரும் மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைவாக ஒழுங்குமுறையில் பூரணப்படுத்தி, காணி அமைந்துள்ள பிரதேச செயலகத்திற்கு அல்லது கிராம அலுவலர், வெளிக்கள அலுவலர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் காணி ஆணையாளர் நாயகம் ஹேரத் தெரிவித்துள்ளார் .

 

Comments