வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு | தினகரன் வாரமஞ்சரி

வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக இந்தியப் பிரதமருடனான காணொளி சந்திப்பில் கலந்துரையாடிய பின்னரும் இச் செயற்பாடுகள் தொடருமாயின் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக தெரிவித்ததுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படை தளபதிக்கும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பில் வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு  நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்றது. 

இச்சந்திப்பு தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் முடிவுகட்டப்படும் என்று தெரிவித்தார். 

இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டும் செயற்பாடு தொடர்பாக  இலங்கை, - இந்திய பிரதமர்களுக்கிடையிலான காணொளி மூலமான கலந்துரையாடலில் பேசப்படவுள்ள நிலையில் இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

இதன்போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை செவிமடுத்த பிரதமர், அண்மைக்காலமாக கடற்படையினரின் கொறோனா அச்சத்தை சாதகமாக பயன்படுத்தி இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது என்ற அதிகாரிகளின் கருத்தை சுட்டிக் காட்டினார். மேலும், இந்தியப் பிரதமருடனான காணொளி சந்திப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதுடன், இச் செயற்பாடுகள் தொடருமாயின் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் திட்டவட்டமாக தெரிவித்ததுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படை தளபதிக்கும் அறிவுறுத்தினார்.   அதேபோன்று இலங்கை கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பதற்கான நடவடிக்கைகள் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளபடும் எனவும் தெரிவித்ததுடன், வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்குமெனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

Comments