ஆயுதமேந்தியோரை தெற்கில் நினைவு கூர முடியுமாயின் வடக்கில் ஏன் முடியாது? | தினகரன் வாரமஞ்சரி

ஆயுதமேந்தியோரை தெற்கில் நினைவு கூர முடியுமாயின் வடக்கில் ஏன் முடியாது?

1970/80களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூரப்படும் போது, அதே சிறப்புரிமை வடக்கில் தமிழருக்கு இல்லை? அரசாங்கத்தின் “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாகத் தெரிகிறது  என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ஆம் , 80ஆம் ஆண்டு களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூரப்படுகிறார்கள்.

ஆனால், அதே சிறப்புரிமை, தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல, பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூர, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும்.

மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூருவது மறுக்கபடுவதும், அதே உரிமை பெரும்பான்மைக்கு வழங்கப்படுவதும், இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் இருக்கிறது. தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும்.

இதுபற்றி எவருடன் வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார் என்றும் மனோ தெரிவித்துள்ளார்.

Comments