ரியாஜ் பதியுதீன் விடுதலைக்கு எதிராக அரச தரப்பு எம்.பிக்கள் போர்க்கொடி | தினகரன் வாரமஞ்சரி

ரியாஜ் பதியுதீன் விடுதலைக்கு எதிராக அரச தரப்பு எம்.பிக்கள் போர்க்கொடி

ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு அவரை மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென சுமார் 100 ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவரென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் சகோதரரான ரியாஜ் பதியுத்தீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையொ ப்பமிடப்பட்ட கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் (09)அலரிமாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.
 
கடந்த 2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயி ர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் சகோதரரான ரியாஜ் பதியுத்தீன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
 
அவரது கைது தொடர்பில் வலுவான சாட்சிகள் காணப்பட்ட போதிலும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாது எவ்வித சட்ட அனுமதியுமின்றி ரியாஜ் பதியுத்தீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னிச்சையான செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு பயங்கரவாதத்துக்கு துணையாக செயற்பட்ட ரியாஜ் பதியுத்தீனை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சியின் 100 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments