மஹேல முதல் இசுறு உதான வரை: 2020 ஐ.பி.எல் தொடரில் கலக்கும் இலங்கை வீரர்கள் | தினகரன் வாரமஞ்சரி

மஹேல முதல் இசுறு உதான வரை: 2020 ஐ.பி.எல் தொடரில் கலக்கும் இலங்கை வீரர்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடர் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஓப் செல்வதற்குப் பலத்த போட்டி நிலவி வந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி, முதலிடத்தை உறுதி செய்தது.
அதுமாத்திரமின்றி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்று 6ஆவது தடவையாக ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

முன்னதாக விளையாடிய ஐந்து இறுதிப் போட்டிகளில், 4இல் வெற்றி பெற்று (2013, 2015, 2017, 2019) சம்பியன் பட்டத்தை அந்த அணி வென்றது.

இம்முறை ஐ.பி.எல் தொடரில் ஆரம்பம் முதலே எல்லா அணிகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் நான்கு இடங்களுக்குள் நீடித்து வந்தது.

எனினும், அந்த அணி விளையாடிய கடைசி 4 போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்தது. கடைசி லீக் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

இதேபோல, கடைசி நான்கு லீக் போட்டிகளில் தோல்வியடைந்தாலும் விராத் கோஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்று வருடங்களுக்குப் பிறகு மூன்றாவது அணியாக ஐ.பி.எல் பிளே ஆப்புக்குத் தகுதி பெற்றுக் கொண்டது.

மறுபுறத்தில் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்திருந்த நிலையில், ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
எனவே, இம்முறை ஐ.பி.எல் தொடரில் தங்கள் அணியை எப்படியாவது பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென வீரர்களைப் போல பயிற்சியாளர்களும் கடுமையாக உழைத்தனர்.

இந்த வரிசையில், இலங்கையைச் சேர்ந்த நால்வர் இம்முறை ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளர்களாக மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன் மற்றும் மாரியோ வெல்லவராயன் ஆகிய மூவரும், வீரரான பெங்களூர் அணிக்காக விளையாடும் இசுறு உதானவும் இதில் அடங்கும்.

எனவே இந்த நால்வர் குறித்த சிறப்புப் பார்வையை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

மஹேல ஜயவர்தன (மும்பை இந்தியன்ஸ்)

ஐ.பி.எல் தொடரில் பலமிக்க அணிகளில் ஒன்றாக எப்போதும் சொல்லப்படும் அணிதான் மும்பை இந்தியன்ஸ். துடுப்பாட்ட வீரர்கள், பந்துவீச்சாளர்கள், சகலதுறை வீரர்கள் என அந்த அணிக்கு பஞ்சமே இருக்காது.

ஒவ்வொரு சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அமைந்த ஆட்பலம் வேறு எந்தவொரு அணிக்கும் அமைந்து விடவில்லை. இவ்வாறு ஒரு பலம் பொருந்திய அணி எமக்கு அமையவில்லையே என கவலைப்படாத அணியே கிடையாது என்று சொல்லலாம்.
அந்த வரிசையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இணைந்து கொண்டவர் தான் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன.

ஒரு அணியின் வெற்றியில் தலைவர் உட்பட ஏனைய வீரர்கள் பங்களிப்பு எந்தளவு தூரத்துக்கு முக்கியமோ அதையும் மீறி பயிற்சியாளர் பதவியும் மிகப்பெரிய பங்கு வகிக்கும். அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜயவர்த்தனவின் தலைமைத்துவம் பற்றி சொல்லவே தேவையில்லை.

அவர் அணியில் தலைவராக விளையாடிய காலங்களில் ஒரு ஆளுமையான தலைவர் ஒருவர் எவ்வாறு செயற்படுவார் என்றதை உலகிற்கு படிப்பித்தார், அதையே தற்போது பயிற்றுவிப்பிலும் செய்து வருகின்றார்.

மும்பை அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு வீரர்களுக்குத் தேவை யான ஊக்குவிப்பு, தேவையான கண்டிப்புக்களை வழங்குவதற்கு தவறியது கி​ைடயாது.

2017இல் மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த வருடம் லீக் போட்டிகளின் முடிவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியனாகத் தெரிவாகியது.

2018 ஐ.பி.எல் தொடரானது மும்பை அணி க்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதன்படி, அந்த அணி லீக் போட்டிகளின் முடிவில் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

எனினும், கடந்த வருடம் மீண்டு வந்த மும்பை அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றதுடன், முதலாவது எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி 6ஆவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

எனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு மஹேல ஜயவர்தனவின் பங்களிப்பு மிக முக்கியாக இருந்துள்ளது. எனவே, அந்த அணிக்கு அவர் தொடர்ந்தும் கை கொடுத்தால் இந்த வருடமும் நடப்பு சம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துக் கொள்ளும்.

முத்தையா முரளிதரன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

ஐ.பி.எல் தொடரில் அமைதியான முறையில் ஒரு அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிற அணியென்றால் அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எனலாம்.

இதற்கு முழுக் காரணம் அந்த அணியின் அப்போதைய தலைமைப் பயிற்சியாளர்களான டொம் மூடி, விவிஎஸ் லட்சுமண் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரையே சேரும். இதில் முக்கியமானவர்தான் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன்.

ஐ.பி.எல் தொடர் ஆரம்பித்த காலம் முதல் முத்தையா முரளிதரன் பல அணிகளில் இடம்பிடித்து விளையாடியிருந்தார்.

எனினும், 2008ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மூன்று ஐ.பி.எல் சீசன்களில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
அதன்பிறகு 2011ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். பின்னர் 2012ஆம் ஆண்டு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார்.

2014ஆம் ஆண்டு அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு ஒருசில அணிகளின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்ட அவர், ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் இணைந்து கொண்டார்.

டொம் மூடி மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண், முத்தையா முரளிதரன் மும்மூர்த்திகளின் வழிகாட்டலுடன் 2016இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல்தடவையாக ஐ.பி.எல் சம்பயின் பட்டத்தை வென்றது.

அதன்பிறகு 2017இல் நான்காவது இடத்தையும், 2018இல் இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது. இதனால் ஹைதராபாத் அணி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, புதிய தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸின் பயிற்றுவிப்பின் கீழ் களமிறங்கியது.

எனினும், இம்முறை சீசனில் ஆரம்ப லீக் போட்டிகளில் வீரர்கள் உபாதை என பல ஏற்ற இறக்கங்கள் காரணமாக அந்த அணி சொதப்பினாலும், இறுதிக் கட்ட லீக் போட்டிகளில் அசத்திய நான்காவது அணியாக பிளே ஓப் சுற்றுக்குத் தெரிவாகியது.

இது இவ்வாறிருக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய துரும்புச் சீட்டாக ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கான் விளங்குகிறார். 2017இல் தனது 18 வயதில் முதல்தடவையாக அந்த அணிக்காக விளையாடிய போது அவரை சரியான முறையில் வழிநடத்தி பட்டை தீட்டியவர்தான் முத்தையா முரளிதரன்.

ஐ.சி.சி.இன் ரி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முன்னிலை பெற்று, உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற டி20 லீக் போட்டிகளில தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக ரஷித் கான் மாறினார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முத்தையா முரளிதரன் என்பதை அவரே பல நேர்காணலில் சொல்லி உள்ளார்.

இதன்படி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இம்முறை ஐ.பி.எல் தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

மாரியோ வெல்லவராயன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

இம்முறை ஐ.பி.எல் தொடரில் முத்தையா முரளிதரனுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் குழாத்தில் இடம்பிடித்துள்ள மற்றுமொரு இலங்கை வீரர்தான் மாரியோ வெல்லவராயன்.

இலங்கையின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், இலங்கை ஏ அணி மற்றும் 1998இல் மலேஷியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஹஷான் திலகரட்ன தலைமையிலான இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார். எனினும், குறித்த விளையாட்டு விழாவில் இலங்கை அணி நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை தேசிய அணிக்காக மாரியோ வெல்லவராயன் விளையாடாவிட்டாலும், இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளராக சுமார் 6 ஆண்டுகள் கடமையாற்றியிருந்தார். அதன்பிறகு 2014ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ; கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றினார்.

இந்த நிலையில், தற்போது அவர் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உடற்பயிற்சி பயிற்சியளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், இம்முறை ஐ.பி.எல் தொடரில் காயமடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரர்களில் கேன் வில்லியம்சன் மற்றும் விருத்திமன் சஹா ஆகிய இருவரும் காயங்களில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்புவதற்கு முக்கிய காரணமாக மாரியோ வெல்லவராயன் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இசுறு உதான (ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)

இம்முறை ஐ.பி.எல் தொடரில் இலங்கை சார்பாக விளையாடுகின்ற ஒரேயொரு வீரராக இசுறு உதான இடம்பிடித்தார்.
இலங்கை அணிக்காக 30 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள 32 வயதான இசுறு உதான, ரோயல் சலன்ஞர்ஸ் பெங்களூர் அணிக்காக 50 இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதல்முறையாக ரோயல் சலன்ஞர்ஸ் பெங்களூர் அணியில் அவர் இடம்பிடித்தார். மிகக்குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இசுறு உதானவை பின் கதிரையில் உட்கார வைத்து அழகு பார்க்கப்போகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.

டேல் ஸ்டெயின், மொயின் அலி, கிறிஸ் மொரிஸ் உள்ளிட்ட அனுபவமிக்க பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு இசுறு உதானவை பயன்படுத்துவது என்பது கனவையும் மீறிய அற்பப்பார்வை என்று எல்லோருமே நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அதை விராத் கோஹ்லி மாற்றியமைத்தார்.

இம்முறை ஐ.பி.எல் தொடரின் முதலாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை பெங்களூர் அணி வீழ்த்தியது.
அதே அணியுடன் இரண்டாவது லீக் போட்டியில் பெங்களூர் அணி களமிறங்கினாலும், டேல் ஸ்டெயினின் பந்துவீச்சை பஞ்சாப் அணியின் வீரர்கள் பஞ்சராக்க, அந்த அணி 97 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

எனவே பெங்களூர் அணிக்கு டெத் ஓவர்களில் பந்துவீச ஒருவர் வேண்டும் என்ற எண்ணம் கோஹ்லிக்கு வந்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இசுறு உதானவை களமிறக்க தீர்மானித்தார்.

ஒரே ஒரு போட்டியிலேனும் பெங்களூர் அணிக்காக விளையாடுவதற்கு சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்த இசுறு உதானவை அணிக்குள் கொண்டு வந்து முதல் ஓவரையும், கடைசி ஓவரையும் வீச வைத்தார்.

அதிலும் குறிப்பாக, போட்டியின் மூன்றாவது ஓவரில் சூர்யகுமார் யாதவை டக் அவுட் செய்த உதான, அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த இசான் கிஷனை 99 ஓட்டங்களில் வைத்து பெவிலியன் அனுப்பினார்.

எனவே இந்த ஒரு போட்டியே இசுறு உதான மீதான கோஹ்லியின் நம்பிக்கை அதிகரித்தது.

அடுத்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்தை போர்ம் ஆக விடாமல் விக்கெட் எடுத்தார். பிறகு சென்னை அணியுடனான போட்டியில் அம்பத்தி ராயுடுவின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இதனால் பெங்களூர் அணிக்கு எப்போது எந்த விக்கெட் தேவையோ அப்போதெல்லாம் அதை எடுத்துக்கொடுப்பதில் வல்லவராக இசுறு உதான வலம்வந்தார்.

அவர் விளையாடிய முதல் 4 போட்டிகளில் 6 விக்கெட் மட்டுமே இசுறு உதான எடுத்தாலும் தேவையான நேரத்தில் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து பெங்களூர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

எனினும், 5 முதல் 8 போட்டிகளில் இசுறு உதான தொடர்ந்து விளையாடினாலும், அவரால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது. இதனால் ஒருசில போட்டிகளை அவர் தவறவிட்டார். ஆனாலும், இசுறு உதான விளையாடாத அந்த லீக் போட்டிகளில் பெங்களூர் அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் டெத் ஓவர்களில் பந்துவீசுவதற்கு இசுறு உதானவின் பங்களிப்பு மீண்டும் தேவைப்பட்டது. இதையடுத்து கடந்த 31ஆம் திகதி சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மீண்டும் களமிறங்கிய அவர், 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை எடுத்தார். அதன்பிறகு நடைபெற்ற பெங்களூர் அணியின் கடைசி லீக் போட்டியிலும் களமிறங்கிய அவர், 2 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இம்முறை ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணிக்காக தான் விளையாடிய 10 போட்டிகளில் 8 விக்கெட்டுக்களை எடுத்துள்ள இசுறு உதான, அந்த அணி வெற்றியீட்டிய பெரும்பாலான போட்டிகளில் தனது சிறப்பான பங்களிப்பினை வழங்கி கோஹ்லியின் மனதை வென்றது மாத்திரமல்லாது, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்களின் மனதிலும் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டார். 

ஏதோ பத்து பேர அடிச்சு டான் ஆகினவன் இல்லடா நான். அடிச்ச பத்துப்பேருமே டான் தான் டா என்ற வரிகளை ஞாபகமூட்டுது இந்த இசுறு உதானவின் ஐ.பி.எல் பயணம்.

பீ.எப். மொஹமட்

Comments