கந்தரோடையில் மக்கள் குழப்பத்தில் | தினகரன் வாரமஞ்சரி

கந்தரோடையில் மக்கள் குழப்பத்தில்

யாழ். சுன்னாகம், கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ( 22) மாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினரென அறிமுகப்படுத்தினர்.

அந்த ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரமுள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

அந்தக் கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்தமானதென அவர்கள் பூசகரிடம் வினவியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு நேற்றுக்காலை தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் தர்சனம் உள்ளிட்டவர்கள் அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர்.

கந்தரோடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்கள மொழி பேசும் நபர்கள் வந்து விசாரித்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பருத்தித்துறை விசேட நிருபர்

Comments