‘தமிழில் தேசிய கீதம்’அரசிடம் வேண்டுகோள் | தினகரன் வாரமஞ்சரி

‘தமிழில் தேசிய கீதம்’அரசிடம் வேண்டுகோள்

இலங்கையின் தேசிய சுதந்திர தின நிகழ்வில் இம்முறையேனும் தமிழில் தேசிய கீதத்தை இசைத்து இன நல்லிணக்கத்துக்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டுமென புதிய ஜனநாயக முன்னணி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

தொடர்ந்தும் தமிழ் மக்களை அந்நியப்படுத்தாது அவர்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுளளது.

அந்த கட்சியின் உப தலைவரும் ஊடக பேச்சாளருமான சமன் குமார் கூறுகையில் ,

இலங்கையின் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். அந்த ஏற்பாடுகளும் சுதந்திர தின நிகழ்வுகளும் எந்தவொரு இன மக்களையும் காயப்படுத்தி விடக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தமிழிலும் தேசிய கீதத்தை பாடி அரசாங்கத்தின் தேசிய இன நல்லிணக்கத்திற்கான சமிஞ்சையை வெளிப்படுத்த வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

தமிழ் மக்களும் இந்நாட்டு பிரஜைகள். அவர்களுக்கு எல்லா உரிமையுமுள்ளது. எனவே இந்த மக்களை தொடர்ந்தும் அந்நியப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்படாது தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதற்கு எதிர்வரும் சுதந்திர தினம் சிறப்பானதொரு சந்தர்ப்பமாகவே எமது கட்சி நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments