இளவரசர் பிலிப் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்; மகாராணிக்கு கடிதம் | தினகரன் வாரமஞ்சரி

இளவரசர் பிலிப் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்; மகாராணிக்கு கடிதம்

பிரிட்டிஷ் மகாராணியாரின் கணவர் இளவரசர் பிலிப். உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, இலங்கை சார்பாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகாராணியாருக்கு ஜனாதிபதி கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாட்சிமை தங்கிய இராணி அவர்களே,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக, உங்கள் அன்புக் கணவர் எடின்பர்க் கோமகன் மேன்மைதங்கிய இளவரசர் பிலிப் அவர்களின் மறைவையிட்டு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளவரசர் பிலிப் அவர்கள் இலங்கை மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததுடன், இரண்டாம் உலகப் போரின்போது இலங்கையில் அவர் குறுகிய காலம் தங்கியிருந்ததை அடிக்கடி மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். அவர் இங்கு தங்கியிருந்த நினைவுகளும், அதன் பின்னர் மாட்சிமைதங்கிய உங்களுடன் இலங்கைக்கு அவர் மேற்கொண்ட இரண்டு அரசமுறை விஜயங்களும் இலங்கை மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

இளவரசரின் மறைவையிட்டு நாங்கள் மிகுந்த துயரங்கொண்டிருக்கும் அதேநேரம், பிரித்தானியா தேசத்திற்கு அவர் செய்த பெரும் சேவை, அவரது புகழ்பெற்ற கடற்படை பணிகள் மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அவரது சேவைகளையும் நினைவு கூர்கிறோம்.

மாட்சிமைதங்கிய மகாராணி அவர்களே, தயவுசெய்து, என்னுடையவும் இலங்கை மக்களினதும் இரங்கலை அரச குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவியுங்கள். இந்த துக்ககரமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் மாட்சிமைதங்கிய உங்களுடனும் அரச குடும்பத்துடனும் ஐக்கிய இராச்சிய மக்களுடனும் உள்ளன.

தயவுசெய்து எங்கள் உண்மையான இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Comments