குதிரை | தினகரன் வாரமஞ்சரி

குதிரை

குதிரை பாலூட்டி இனத்தை சேர்ந்த ஒரு தாவர உண்ணியாகும். குதிரை, வரிக்குதிரை, கழுதையை போல ஒற்றைப்படை குளம்பிகள் வரிசையை சேர்ந்த ஒரு விலங்கினம். கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்தது. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாகவும் இருந்துள்ளது.  

குதிரைகளை கொண்டு பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. இதன் சதை, தோல், எலும்பு, முடி மற்றும் பல் போன்றவை பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றன. குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. நின்று கொண்டே தூங்க வல்லவை. இனம், மேலாண்மை மற்றும் சூழலை பொறுத்து, நவீன ரகக்குதிரை 25 முதல் 30 ஆண்டுகள் ஆயுள் காலத்தை கொண்டுள்ளது.  

குதிரைகளின் கருக்காலம் 335 முதல் 340 நாட்கள் ஆகும். குதிரைக்குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகின்றன. ஐந்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. கருப்பு, வெள்ளை, சாம்பல், சிகப்பு கலந்த பழுப்பு நிறம் மற்றும் இரு நிறங்கள் ஒரே குதிரையில் கலந்தும் காணப்படுகின்றன. ஆனால் வழக்கத்திற்கு மாறாக சில குதிரைகள் 40 ஆண்டுகளுக்கு மேலாக கூட உயிர் வாழ்ந்துள்ளன.  

குதிரையின் உடலில் சராசரியாக 205 எலும்புகள் உள்ளன. இவற்றின் கால் முட்டிப்பகுதி மனிதனுடையதை போல் அல்லாமல் மனித மணிக்கட்டை ஒத்து இருப்பதால் இவற்றால் நின்று கொண்டே தூங்கவியலும். இரை விலங்குகளாக இருப்பதால் கால்களும் குளம்புகளும் ஒரு குதிரையின் மிக முக்கியமான உறுப்புகளாகும். ஒரு குதிரையின் வயது மதிப்பீடு அதன் பற்கள் மூலம் கணக்கிட முடியும். நன்கு வளர்ந்த ஒரு 450 கிலோ எடையுள்ள குதிரை ஒரு நாளில் 7-ல் இருந்து 11 கிலோ உணவை தின்னும்.  

மேலும் 38-இல் இருந்து 45 லீட்டர் வரை நீர் அருந்தும். குதிரைகள் மேயும் விலங்குகளாக இருப்பதால் அவற்றுக்குப் போதியளவு புல்வகை தாவர உணவு அளிக்கப்பட வேண்டும். புல் வகை உணவைத் தவிர தானியங்களையும் தரலாம். குதிரைகள் காற்று, பனியில் பாதிக்கப்படாமல் இருக்க கொட்டகை தேவை. மேலும் குதிரையின் குளம்புகள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். குதிரையின் பயன்பாட்டினை பொறுத்து லாடங்கள் அடிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

நோய் தடுப்புக்காக தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். பற்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அவ்வப்போது அவற்றின் உடல், மன நலனுக்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட வேண்டும்.  

இலங்கையில் கொழும்பு கோட்டைப் பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் குதிரையுடன் பணியில் ஈடுபட்டிருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கும். அத்துடன் நுவரெலியா நகரில் வசந்தகால நிகழ்வின்போது குதிரைப்பந்தயம் இடம்பெறுவது வழக்கமாகும்.  

சுஜானி திருஆலன்,  
வவுனியா.   

Comments