நியூயோர்க்கில் 21ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பமும் நாடு கடந்து, சர்வதேச கூட்டத் தொடரொன்றில் பங்கேற்பதும் முதல் முறையாகும்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதி பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில், பல நாடுகளின் அரச தலைவர்களுடன், இரு தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
கொவிட் தொடர்பான முன்னெடுப்புகள், உலக பொருளாதார நிலைமை தொடர்பிலும் உலக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகள் தொடர்பில் எமது நாடு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் கலந்துகொள்ள உள்ளனர். தன்னுடைய தனிப்பட்ட கொள்கை மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, குறைந்தளவு தொகையினருடன் இந்த விஜயத்தை மேற்கொள்ள, ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.அதன்படி, அண்மைக்கால வரலாற்றில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரொன்றில், உள்நாட்டில் இருந்து குறைந்தளவு தொகையினர் கலந்துகொள்வது இது வென்பதுடன்,ஜனாதிபதியின் பாரியார் அயோமா ராஜபக்ஷ தனது சொந்தச் செலவில் இந்த விஜயத்தில் கலந்துகொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.